இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட எஸ்.ஜே.சூர்யா,
கடந்த ஆண்டு ஸ்பைடர், மெர்சல் என வில்லத்தனத்திலும் மிரட்டிய நிலையில், அவர் நடித்துள்ள,
இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர் எஸ் ஜே சூர்யா .
திருச்செந்தூர் முருகன் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, எஸ் ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க,
விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு , வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “கள்வனின் காதலி” படத்தை இயக்கிய,
தமிழ்வாணன் இயக்கும் உயர்ந்த மனிதன் என்ற – தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில்
இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார் என்பதுதான் அந்த செய்தி .
மார்ச் 2019 இல் படப்பிடிப்பு துவங்க உள்ளது.மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் தமிழ்வாணன், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.
அந்த காணொளியை பத்திரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு திரையிட்டு காண்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.
நிகழ்ச்சியில் பேசிய எஸ் ஜே சூர்யா , “எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தை பற்றிய பிரமாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ்.
நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது.
இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்த தமிழ் படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன்.
ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம்.
அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்
இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது.
2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.
ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம்.
‘கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும்’ என்றார். விளக்கினோம் . திருப்தியானார்.
‘ கண்டிப்பாக நான் நடிக்கிறேன் ‘என்றார். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் முடியும்.
நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனைதான்.
அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 25 நாட்களுக்கு மேல 5 நாட்கள் கூட,
எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருக்கிறார் .
2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார்.
அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன் என்ற தலைப்புதான்
இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்த படத்துக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவரகளுக்கும் நன்றி.
கஷ்டத்தில் இருக்கும்போதும் விடாப்பிடியாகவும் கம்பீரமாகவும் இருந்து இதை சாதித்து இருக்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.
சரி .. இயக்குனர் தமிழ்வாணன் என்ன சொல்கிறார் ?
“எனது கனவு நிறைவேறியது.இதை விட நான் வேறு என்ன கேட்டுப் பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று ,
இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம்.
தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில்தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை..இந்த கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன்.
இந்த படத்தை ஆசைப்பட்டது மட்டும் தான் நான், இதை இந்த அளவுக்கு கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும்தான்.
அமிதாப் பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை இது. படத்தை பற்றிய மற்ற தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கிறோம்” என்றார் இயக்குனர் தமிழ்வாணன்.
அசத்துங்க !