ஸ்ரீ சாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில் வேல் மற்றும் விஜய் சங்கர் இணைந்து தயாரிக்க,
கே.பாக்யராஜ் , பொன்வண்ணன் , இளம் ஹீரோவாக யுவன், கதாநாயகிகளாக ஷாரா ஷெட்டி, மற்றும் சிஞ்சு மோகன், சிங்கம்புலி ஆகியோர் நடிக்க ,
ஜிப்சி ராஜ்குமார் என்பவர் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் அய்யனார் வீதி
படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்ச்சியில் பத்தீரிகையாளர்களை சந்தித்தது படக் குழு .
தயாரிப்பாளர் செந்தில் வேல் பேசும் போது, ” ஒரு ரசிகனாக தியேட்டர் போய் பாக்யராஜ் சார் படம். பார்த்து ரசித்தவன் நான். அவரையே என் படத்தில் நடிக்க வைத்தது எங்கள் பாக்யம் ” என்றார்
பாடலாசிரியர் ப்ரியன் தன் பேச்சில் ” படத்துக்குப் பாடல் எழுதுவது என்பது ஒரு வகை. இதில் பாடல் தானே வந்தது. ஐயனார்
பற்றிய தேடலில் 108 ஐயனார்கள் பற்றித் தேடித்தேடி திரட்டி, அதையே ஒரு பாடலாக உருவாக்கினோம்.” என்றார்
இயக்குநர் ஜிப்ஸி என். ராஜ்குமார் பேசும் போது, ” அய்யர் என்பது சாத்வீகத்தின் அடையாளம் . அய்யனார் என்பது வீரம் மற்றும் தைரியத்தின் அடையாளம் .
வீரத்துக்கு ஒரு இக்கட்டு வரும்போது சாத்வீகம் எப்படி வீரமாக மாறுகிறது என்பதே இந்தப் படம் .
அய்யனாராக பொன் வண்ணனும் , அய்யராக இருந்து அய்யனாராக மாறுபவராக பாக்யராஜ் சாரும் நடித்து உள்ளனர்
இந்தப் படத்தில் பாக்யராஜ் சார் நடிப்பதாக இருந்தால் மட்டுமே இதை இயக்குவது என்பதில்இ உறுதியாக இருந்தேன். அவர் வந்ததும் அது படத்துக்குப் பெரிய பலமாக மாறியது.
படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தில் அவரது பங்களிப்பு எங்களுக்கு பலம் சேர்த்தது .
தவிர பொன்வண்ணன் சாரும் பாக்யராஜ் சாரும் நடிப்பால் இந்தப் படத்தைத் தங்கள் தோளில் சுமந்திருக்கிறார்கள்”.என்றார்.
கே.பாக்யராஜ் பேசும்போது “இந்தப் படத்தில் நான் நடித்த போது தயாரிப்பாளர் செந்தில்வேலின் சுறுசுறுப்பைக் கண்டேன். அவருடன் தயாரிப்பில் இணைந்து கொண்டிருக்கிறார் அவரது நண்பர் விஜயசங்கர்.
பொதுவாகவே சினிமாவில் யாரும் துணைக்கு வரமாட்டார்கள். ‘நீ முன்னாலே போ; நான் பின்னாலே வருகிறேன் என்பார்கள். முன்னாடி போகவிட்டு போகிறவனை ஆழம் பார்ப்பார்கள்.
ஆனால் அப்படிப் பார்க்காமல், அவரது நண்பர் உடன் வந்து இணைந்திருக்கிறார்.
இப்போது எனக்கு என் பழைய நினைவு வருகிறது .
அன்றைக்கு என்னிடம், ‘நீ முன்னாலே போ நான் பின்னாலே வருகிறேன்…’ என்று இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் .நானும் அவரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில்தான் படித்தோம்.
ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அவர் வேறு பள்ளிக்குப் போனார். நாங்கள் நண்பர்கள்தான் .
என்னைப் போலவே அவருக்கும் சினிமா மீது ஆர்வம். ஆனாலும் லேசா பயம் .அதனால் வரத் தைரியமில்லை. ஆனால் நான் துணிச்சலாக சென்னைக்கு வந்து விட்டேன்
நான் சோறு தண்ணி பார்க்க மாட்டேன். அவருக்கு சாப்பாடு சரியாக இருக்க வேண்டும். நான் இங்கு வந்தேன். கஷ்டப் பட்டேன். உதவி இயக்குநராகச் சேர்ந்து விட்டேன். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்தேன்.
நான் என் அறையில் இருப்பேன்.அங்கு வருவார். வந்து என் நிலைமையைப் பார்த்து விட்டு இவனுக்கு என்ன ஆகுதுன்னு தெரிஞ்சுகிட்டு வரலாம்னுட்டு ஊருக்கு போயிடுவார் .
நான் உயர்ந்த பிறகு அவரை ஊர்க்காரர்களே விட வில்லை. ‘ பாக்யராஜே பெரிய ஆளாய்ட்டார். நீ இங்கு என்ன செய்ற….?’ என்று பாடாய் படுத்த ,அவர் புறப்பட்டு வந்தார்
இங்கு வந்து பாண்டிபஜார். ,தேனாம் பேட்டை என என்னைப் போலவே இருந்து அவரும் பெரிய ஆளாகிவிட்டார்.
ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பரான விஜய் சங்கர் அப்படி இல்லாமல் படம் ஆரம்பிக்கும்போது கூடவே வந்து இருக்கிறார். இந்த தயாரிப்பாளர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.
இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது நான் இந்தப் படத்தில் இல்லை . ஆரம்பித்த பிறகுதான் உள்ளே வந்தேன்.
படத்துக்காக தயாரிப்பாளர்கள் தங்கள் சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினார்கள். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பெருமையாக இருந்தாலும் சில நேரம் தொந்தரவாகிப் பதற்றமாக இருக்கும்.
ராஜபாளையத்தில் நான் படப்பிடிப்பு நடத்தியது இல்லை. இந்தப் படத்துக்காகத்தான் போனேன். பிறகுதான் தெரிந்தது, அங்கே எனக்கு வேண்டியவர்கள் பலபேர் இருந்தார்கள்.
இதில் நடித்தபோதுதான் ஐயனார் பற்றியே எனக்கு விரிவாகத் தெரிந்தது.
படத்தில் இளைஞர்களும் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.இளைஞர் யுவனும் நடித்திருக்கிறார்.
இந்தப்படம் பற்றிப் பெரிய பேராசை எல்லாம் எங்களுக்கு இல்லை. தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் என்றே வாழ்த்துகிறேன் போட்ட காசை எடுத்தால் தப்பித்துக் கொள்வார் .
நிறைய படங்கள் எடுக்கும் தைரியம் வந்து விடும்.பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு வந்து விடுவார்” என்றார்