மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா , மற்றும் தேவதர்ஷினி, வினோதினி, ஜீவா ரவி, ரஞ்சனி, இயக்குனர் சுந்தர்ராஜன் நடிப்பில் ஜே. சபரீஷ் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் படம் கால்ஸ்.
இணைய இணைப்புத் தரும் நிறுவனம் ஒன்றில் பணி புரியும் ஓர் இளம்பெண் இணையத் தொடர்புச் சேவையை புதுப்பிக்காதவர்கள் ஒவ்வொருவரையும் அலைபேசியில் அழைக்கிறாள்.
அப்படி அவள் அழைத்துப் பேசும் நபர்களின் சூழ் நிலை, வாழ் நிலை , இவள் அழைக்கும்போதும் அழைப்பதாலும் அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஒரு பக்கம்,
அந்த இளம்பெண்ணுக்கு வரும் ஓர் அடையாளமற்ற அலைபேசி அழைப்பு, அதனால் வரும் பிரச்னைகள் ஆபத்துகள்..
சிறுமியாக இருக்கும்போது அவளுக்கு நடந்த ஒரு கொடுமை அதன் விளைவுகள் …
இவற்றின் பின்னலே இந்த கால்ஸ் .
அண்மையில் சித்ரா அநியாயமாக மரணித்த நிலையில் இந்தப் படம் வந்திருகிறது
குற்றவாளிகளை கத்தியின்றி ரத்தமின்றி வேதியியல் உயிரியல் முறையில் கொலை செய்ய உள்ள வழிகளை சொல்கிறது படம் .
வித்தியாசமான ஒரு கதைக் கரு, பெண்ணியச் சிந்தனைகள் , பெண்களுக்கான பிரச்னைகள் இவற்றை வைத்து எழுதி இயக்கி இருக்கிறார் சபரிஷ்.
சில காட்சிகள் பெண்களின் மன அழுத்தங்களை அவர்களுக்கு வரும் சிக்கல்களை ஆழமாக சொல்கின்றன. அந்த அளவுக்கு பெண்கள் உலகத்துக்குள் இறங்கி எழுதி இருக்கிறார் சபரீஷ். அதற்காகப் பாராட்டுகள்.
தமிழ் நாட்டில் வேலைக்கு வரும் மலையாளிகள் தங்களுக்கு கீழ் வேலை செய்ய தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேளைக்கு அமர்த்துவதற்காக இங்குள்ள தமிழர்களை என்னை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று நிழல்கள் ரவி கதாபாத்திரம் மூலம் சொல்கிறார் இயக்குனர் .
ஆனால் ஒரு பக்கம் அலைபேசியில் பேசும் பெண்களுக்க பிரச்னைகள், பின்னர் உறவுக்காரர்களே சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் கொடூரம் என்று போய் பெண்களின் சுற்றுச் சூழல் சிந்தனை வரை பாய்கிறது.
ஓரிடத்தில் நிலைகொண்டு ஒரு விஷயத்தை ஆழமாகச் சொல்லாமல் அடுத்தடுத்த விசயங்களுக்கு படம் தாவிக் கொண்டே இருக்கிறது .
எல்லா கதாபாத்திரங்களுமே எப்போதும் தேவைக்கு மேல் டென்ஷனாக நடந்து கொள்வதும் பக்குவமற்ற மேக்கிங்கும் அதீத பிரச்சார நெடியும் குறைபாடுகள்.
சித்ரா, தேவதர்ஷினி இருவரும் கொஞ்சம் அதீதமாகவே நடித்துள்ளார்கள்.
பெண்களின் பிரச்னைகளை பேசும் படம் என்பது இந்தப் படத்தின் சிறப்பு .