மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் ‘கன்னா பின்னா’.
படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டவர்.. இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்..
நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் , விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்..
விழாவில் வழக்கம்போல திருட்டு விசிடியை ஒழிக்கவேண்டும் என குரல் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் “திருட்டு சிடி பாத்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றால் கைகள் உடைக்கப்படும்,
உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என ஆவேசமாக முழங்கினார்.
இயக்குனர் சேரன் பேசும்போது, “சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. கபாலி மாதிரி படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர,
மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும்.. ஆன்லைனாக இருக்கட்டும்.
ஆனால் அது முறையாக இருக்கவேண்டும். திருட்டுத்தனமாக இருக்க கூடாது..பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோக கூடாது.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்..
போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு. நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன்தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான்.
இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்..
எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது,
ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என்று விவகாரமாகப் பேசி அதிர வைத்தார் சேரன்.
இயக்குனர் தங்கர் பச்சான் பேசும்போது, “சினிமாவில் நூறு பேர் படம் எடுத்தால் 99 பேர் பணத்தை இழக்கும் நிலைதான் இங்கே உள்ளது.. அதை மாற்றணும்.. மாற்ற முடியாதது அல்ல அது.
ஆனால் மாற்றவேண்டியவங்க அதை மாற்றணும். நிச்சயமா செய்ய முடியாத விஷயமில்ல இது..
இந்தப்படம் நல்லா வரும்னு தெரியுது.. ஆனா நீங்கதான் கஷ்டப்படனும்.. ஏன்னா இந்தப்படத்தை யாரும் வாங்க மாட்டாங்க…
நீங்கதான் இன்னும் கொஞ்சம் முதலீடு போட்டு படத்தை வெளியிடனும்.. அப்படி வெளியிட்டீங்கன்னா, வெற்றி பெற்றீங்கன்னா அந்த லாபத்தை பிடுங்கிக்கொண்டு போகிறதுக்கும் சிலர் காத்திருக்காங்க.
அதிலிருந்தெல்லாம் கவனமாக நீங்கள் மீண்டு வந்து தொடர்ந்து படங்கள் தயாரிக்கவேண்டும்” என பேசினார்.
இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “திருட்டு விசிடி கடைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன என சேரன் சொன்னார்.. ஆனால் அவை ஓப்பனாகவே இருக்கும்போது நம்மால் என்ன பண்ண முடியும்..
அது அவர்களின் வயிற்றுப்பிழைப்பு என்பதால் அந்த திருட்டுத்தொழிலை செய்பவன் செய்துகொண்டு தான் இருக்கிறான்..
இதில் மக்களையும் நாம் குறைசொல்ல முடியாது.. பஸ்ஸில் ஏறும்போதே ஊர்ப்பெயரோடு சேர்த்து அந்த பஸ்ஸில் என்ன படம் போடுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆட்களை ஏற்றுகிறார்கள்.
பஸ்ஸில் ஏறும் ஜனங்கள் அதுக்காக கண்ணை மூடிக்கொண்டு போவார்களா என்ன..? அதேபோல கேபிளில் போடும்போது பார்க்காமல் இருப்பார்களா என்ன..?
அதனால் இப்படி திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும் விற்பவர்களையும் நாம் ஒன்றும் பண முடியாது.. ஆனால் மக்கள் ரசிக்கும் விதமாக,
நல்ல படங்களை கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள்.. லாபமும் உறுதி..
இப்போது வெளியான ஜோக்கர் படம் கூட பெரிய நடிகர்கள் பட்டாளம் இல்லை தான்.
ஆனால் அரசியலை நையாண்டி செய்யும் படம் என மவுத் டாக்கின் மூலம் செய்தி பரவியதால் மக்கள் தியேட்டருக்கு போய் பார்க்கிறார்கள்.
ரஜினி உட்பட பலரும் படத்தை பாராட்டியுள்ளார்கள். நானும் கூட இப்படி ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் தேடிப்போய் பார்த்தேன்..
ஆக நாம் நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடிக்காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது..
இன்று படம் இயக்குபவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் தயவுசெய்து தயாரிப்பாளரைக் காப்பாற்றுகிறேன் என யாரும் படம் எடுக்காதீர்கள். முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படம் எடுங்கள்..
தயாரிப்பாளர் ஒரு படத்தில் காசை விட்டால் கூட, அடுத்து இன்னொரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்து சம்பாதித்துக்கொள்வார்.
ஆனால் நீங்கள் கோட்டைவிட்டால் ஒரு படத்தோடு அவ்வளவுதான். உங்களுக்கு அடுத்த வாய்ப்பு என்பது கேள்விக்குறிதான்.
அதனால் முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ளும் விதமாக நல்ல தரமான படங்களை எடுங்கள். அது உங்களையும் காப்பாற்றும்.. அதோடு தயாரிப்பாளரையும் காப்பாற்றிவிடும்”
என்று சேரனுக்கு கண்ணியமான அதே நேரம் அழுத்தமாக பதிலடி தரும்படி பேசினார் பாக்யராஜ்