ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென் மூவீஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜெயந்திலால் காடா தயாரிக்க ,
பிரபு தேவா , சனத், இந்துஜா , தீபக் பரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷாங்க் புருஷோத்தமன் நடிப்பில் ,
கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் மெர்க்குரி . மனம் கரைக்குமா இந்த மெர்க்குரி ? பார்க்கலாம் .
கொடைக்கானல் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாதரசக் கசிவின் காரணமாக சுற்று வட்டார மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு ,
அதன் விளைவாக பல , பார்வை , செவி மற்றும் பேச்சு மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறந்தன .
அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை திரைக்கதை அமைந்த படம் இது .
அப்படி பாதிக்கப்பட்ட பலரும் வளர்ந்து இளைஞர்களாக உள்ள நிலையில் கதை துவங்குகிறது .
செவி , பேச்சு மாற்றுத் திறனாளியான வசதியான இளைஞர்கள் நால்வர் ( சனத்,தீபக் பரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷாங்க் புருஷோத்தமன்).
அதே பாதிப்புகளுக்கு ஆளான ஓர் இளம்பெண் (இந்துஜா) . அதில் ஓர் இளைஞனுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் காதல்
ஒரு பயணத்தில் இரவில் அந்த பெண் கார் ஓட்டுகையில் அவள் காதலன் காரின் முன் விளக்குகளை அணைத்து விளையாட ,
அதனால் நடக்கும் எதிர்பாராத விபத்தில் ஒரு நபர்(பிரபு தேவா) அடித்துத் தூக்கி எறியப்படுகிறார்
அந்த நபரின் மூக்கில் கை வைத்துப் பார்க்கும் நிலையில் மூச்சு வராது இருக்க , அந்த உடலை காட்டுக்குள் ஒரு பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் ,
அவர்களில் ஒருவனின் ஐ போட் காணமல் போயிருக்கிறது .
(காது கேட்காத நிலையிலும் சத்தமாக இசையை வைத்து ஆடுவது அவர்கள் பழக்கம் . அதனால் ஒரு பிரச்னை வந்து வீட்டுக்கு போலீசும் வந்து இருக்கிறது .
ஐ போடின் பின்னால் இருக்கும் சிம்பனி இசை மேதை பீத்தோவன் படம் மூலமாக, அது மேற்சொன்ன பையனின் ஐ போட்தான் என்பது போலீசுக்கும் தெரியும் )
எனவே அதன் மூலம் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் அதை மீண்டும் எடுத்து வர உடலை தூக்கி எறிந்த இடம் வரை தேடிச் செல்கின்றனர்.
ஐ போட் கிடைக்கிறது . ஆனால் உடல் காணவில்லை . இந்த நிலையில் உடன் இருக்கும் இளம்பெண் கடத்தப்படுகிறாள் .
சம்மந்தப்பட்ட — பாழடைந்த மெர்க்குரி கசிந்த ஃபேக்டரியில் அவள் அடைக்கப்பட்டு இருக்கிறாள் .
விபத்தில் செத்தவனின் உருவம் அங்கே இருக்கிறது . இளம்பெண்ணை தேடி ஃபேக்டரி உள்ளே செல்லும் ஒவ்வொருவரையும் அது கொடூரமாக தாக்குகிறது.
அந்த உருவம் சாகாத மனிதனா ? இல்லை ஆவியா ? மாட்டிக் கொண்டவர்களில் யாரும் கொல்லப்பட்டார்களா ?
ஆம், எனில் யாரும் தப்பினார்களா ? ஆம் எனில் எப்படி ? இல்லை எனில் நடந்தது என்ன ?
இவர்கள் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளா ? இல்லை எனில் உண்மை எதிரி யார் ? ,
அது குறித்த விழிப்புணர்ச்சி அவர்களுக்கு இருந்ததா ? பிறகாவது கிடைத்ததா என்பதே மெர்க்குரி .
வசனமே இல்லாத மவுனப் படம் இது .
சினிமா உருவான ஆரம்ப காலத்தில் வசனம் ஒலிப்பதிவு செய்யும் தொழில் நுட்பம் வளராத காரணத்தால்,
கதாபாத்திரங்கள் பேசும் இடங்களில் அந்த வசனம் திரையில் வாக்கியங்களாக காட்டப்பட்டன .
பின்னாளில் வசனப் படங்கள் வந்த பின்பு அப்படி வசன வாக்கியங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது .
எனவே இந்த நிலையில் ஒரு மவுனப் படம் வந்தால் அது பேசவேண்டிய தேவையே இல்லாத மவுனப் படமாக இருப்பதுதான் கம்பீரம் . கமல் நடித்த பேசும் படம் போல .
ஆனால் இந்தப் படத்தில் பேசிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது கூட
(வேலைக்காரப் பெரியவர் – போலீஸ்காரர்கள் சந்திக்கும் காட்சி ) வம்படியாக பேசாமல் இருக்கின்றனர் .
அதே போல அந்தக் கால பாணியில் கதாபாத்திரங்கள் சைகையால் பேசிக் கொள்ளும் போது வசன வாக்கியங்கள் இடம் பெறுகின்றன .
என்றாலும் , இது மவுனப் படமாக இருக்க வேண்டிய அடிப்படை நியாயத்தை,
கதாபாத்திரங்களின் உடல் குறைபாடு மூலம் வெளிப்படுத்தும் விதத்தில் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் .
அதுவும் பிரபு தேவா கதாபாத்திரத்துக்கும் அந்த நியாயம் இருக்கிறது என்பது வெளிப்படும் இடம் திகிலில் மேலும் ஜிலீர் . சபாஷ் .
அட்டகாசமான பிரேம்கள் , ஷாட்கள் (குறிப்பாக 180 டிகிரிக்கு கீழ் இருந்து மேலாக கேமரா உயர்ந்து அரை வட்டம் அடித்து மறு பக்கத்தில் கீழே இறங்கும் அந்த ஷாட் ) ,
சிறப்பான இயக்கம் , கதையை கடைசியில் கனமாக சொல்லும் விதம் , அதன் மூலம் யார் எதிரி என்பதை சரியாக உணர வேண்டும் என்று சமூகத்துக்கு கொடுக்கும் விழிப்புணர்ச்சி,
இவற்றின் மூலம் ஓர் அற்புதமான இயக்குனராக மீண்டும் ஒரு முறை ஜொலிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . மனம் நிறைந்த பாராட்டுகள் .
திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிக சிறப்பான தரக் கூட்டல் செய்கிறது .
இரவு நேர மலைப்பாங்கான பகுதி காட்சிகள் எல்லாம் ஓர் அடர்த்தியான மர்மம் பூசிக் கிடப்பது போல அற்புதமான ஒளிப்பதிவு .
படத்தின் முதல் பலம் ஒளிப்பதிவு என்றால், சந்தோஷ் நாராயணின் பின்னாடி இசை நான் மட்டும் மட்டமா என ஒளிப்பதிவோடு அட்டகாசமாக போட்டி போடுகிறது .
இன்றைய நிலையில் ஒரு மவுனப் படத்துக்கு நல்ல பின்னணி என்பது ஆக்சிஜன் போல .
அந்த வகையில் மிக ஆரோகியமான ஆக்சிஜன் கொடுத்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்
பராமரிப்பில்லாத பேக்டரி உருவாக்கத்தில் அசத்துகிறார் கலை இயக்குனர் சதீஷ் குமார் .
வில்லன் கம் ஹீரோவாக இதுவரை செய்யாத வகையான கதாபாத்திரத்தில் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார் பிரபுதேவா.
பார்வை , முகபாவனை அலசல் நடை எல்லாம் அபாரம்
பிரபு தேவா கதாபாத்திரத்தை விட முக்கியக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார் இந்துஜா.
முகத்தை இறுக்கி வளைத்து நெளித்து முக பாவனைகள் கொடுக்கிறார் . வாழ்த்துகள்
சனத், , தீபக் பரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷாங்க் புருஷோத்தமன் ஆகியோரும் பொருத்தமாக இருக்கிறார்கள் . நடிக்கிறார்கள் .
கடைசி அரைமணி நேரம் படம் பார்ப்பவர்களே பேச மறந்து கனமான மனதோடு மவுனிக்கும் அளவுக்கு படம் உயர்கிறது .
அதற்கான முன்னேற்பாடாகவே படத்தின் மற்ற பகுதிகள் இருக்கின்றன .
மோதிக் கொள்ளும் இளைஞர்கள் மற்றும் பிரபு தேவா தரப்பில் யார் மீதும் சிறு தவறு கூட இல்லை என்று காட்சி இருந்தால் படம் கடைசியாக சொல்லும்,
சரியான எதிரியை அறிதல் குறித்த அந்த அறிவுரைக்கு இன்னும் கனம் சேர்ந்து இருக்கும் .
ஆனால் கார் ஓட்டுகையில் இரவில் லைட்டை அணைத்து அணைத்து விளையாடுவது குற்றம் அல்லவா ?
விபத்துக்கு காரணம் அவர்கள் எல்லோரும் மாற்றுத் திறனாளிகள் என்பதே மட்ட்ட்டுமே என்று காட்சி அமைத்து இருந்தால்,
அந்த அறிவுரை இன்னும் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கும் .
கார்பரேட் கம்பெனிகள் பூமியை அழித்து சாப்பிடுவதை , CORPORATE EARTH என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ள CORPOR என்பதை நீக்கி ATE EARTH என்று காட்டி,
அடுத்து ATE என்பதை நீக்கி கடைசியில் EARTH என்பதை மட்டும் காட்டி புரிய வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . சிறப்பு .
அதையே கடைசியில் EARTH என்பதை நீக்கி ATE என்பதை மட்டும் வைத்து EARTH ஐ சாப்பிட்டு விட்டார்கள் என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் .
சிறு சிறு குறைகள் , மேம்படுத்தும் வாய்ப்புகளை ஒரு சில இடங்களில் தவற விட்டு இருப்பது போன்றவற்றை மறுப்பதற்கு இல்லை . ஆனாலும் அது பெரிய குறையாக இல்லை என்பதே படத்தின் சிறப்பு
சரியான எதிரியை விட்டு விட்டு பாதிக்கப் படுபவர்கள் ஒருவரை அடித்துக் கொள்வது மடமை என்று படம் சொல்லும் அந்த அபாரமான அறிவுரை ,
இன்றைய அரசியல் சமூக சூழலில் மிக முக்கியமான ஒன்று .
அந்த அற்புதமான மெசேஜ், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிரான குரல் , நெகிழ்வில் ஆட்படுத்தும் இரண்டாம் பகுதி , மிகச் சிறப்பான இயக்கம்
மற்றும் பிற பல தொழில் நுட்பங்களின் சிறப்பு , முக்கிய நடிக நடிகையரின் சிறப்பான பங்களிப்பு இவற்றால் மனம் நெகிழ்ந்த பாராட்டுப் பெறுகிறது மெர்க்குரி
மொத்தத்தில் மெர்க்குரி … ஜொலிப்பு !