நான் ஈ சுதீப் , நித்யா மேனன் ஆகியோர் நடிக்க , கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வரும் 12 தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்து கொண்டு இருக்கும் படம் முடிஞ்சா இவன புடி .
லிங்கா படத்தை தயாரித்த ராக் லைன் வெங்கடேஷின் நெருங்கிய நண்பரான ராம் பாபு என்ற கன்னட தயாரிப்பாளர், ராம் பாபு புரடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரித்ததாக சொல்லப் படும் படம்
படத்தின் விளம்பரத்தில் ராக் லைன் வெங்கடேஷ் வழங்கும் முடிஞ்சா இவன புடி என்றே அறிவிக்கப்படுகிற படம் இது .
இந்தப் படம்தான் வரும் வெள்ளிக் கிழமை வெளிவர முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டு நிற்கிறது .
“என் படத்தை வெளிவர விடாமல் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி தடுக்கிறார் ” என்று குற்றம் சாட்டுகிறார் ராம் பாபு .
ஏனாம் ?
“லிங்கா படப் பிரச்னையில் ராக் லைன் வெங்கடேஷ் மீது உள்ள பிரச்னைக்காக என் படத்தை தடுக்கிறார்கள் ” என்பதுதான் ராம் பாபுவின் குற்றச் சாட்டு
‘அய்யய்யோ … லிங்கா படப் பிரச்னை இன்னும் முடியலையாஆ ஆ ஆ ஆ ?’ என்று நீங்கள் அலறுவது காதில் விழுகிறது .
அதுவே இன்னும் முடியல என்பதுதான் உண்மை .
ராம் பாபுவே தொடர்ந்து சொல்லட்டும்
” லிங்கா படம் துவங்குவதற்கு முன்பே நான் கே எஸ் ரவிகுமாரின் இயக்கத்தில் சுதீப் நடிக்க , இந்த படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக்க முடிவு செய்தேன் .
வேலையைத் துவங்கும்போது , கே எஸ் ரவிக்குமாருக்கு லிங்கா பட வாய்ப்பு வந்தது . ரஜினி சார் ஹீரோ . தயாரிப்பாளரும் நம்ம ஆளு ராக்லைன் வெங்கடேஷ் .
நல்லா வரட்டும்னு லிங்கா படம் முடிஞ்ச அப்புறம் என் படத்தை ஆரம்பிக்க முடிவு செஞ்சேன் . லிங்கா படம் முழுக்க கூடவே இருந்தேன் .
அந்தப் படம் வந்த அப்புறம்தான் என் படத்தை ஆரம்பிச்சேன் .” என்று இவர் கூறினாலும் ,
முடிஞ்சா இவன புடி படத்தின் நிஜமான தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்தான் என்று ஒரு நம்பிக்கையான தகவல்
தொடர்கிறார் ராம் பாபு ” லிங்கா படப் பிரச்னையில் திருப்பித் தர வேண்டிய பணத்தில் தொண்ணூறு சதவீத பணத்தை ராக்லைன் வெங்கடேஷ் கொடுத்து விட்டார் .
இன்னும் பத்து சதவீதத்தைதான் கொடுக்க வேண்டி இருக்கிறது .
அதுவும் இந்த முடிஞ்சா இவன புடி படத்துக்கு பிரச்னை என்றதும் அதையும் கொடுக்க தயாராக உள்ளார் .ஆனால் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள மறுக்கும் அருள்பதி,
என்ட படத்தை தமிழகம் எங்கும் வெளியிட முடியாமல் தடுக்கிறார் ” என்று, ஒரு வினோத குற்றச் சாட்டை வைக்கிறார் .
“அவரிடம் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று போன் செய்தேன் . ஆனால் அவர் போனில் பேசவே இல்லை .
அவர் வீட்டு வாசலில் காத்திருந்தேன் . வீட்டுக்கு வந்தவர் என்னை பார்த்ததும் காரை அப்படியே திருப்பிக் கொண்டு போய் விட்டார் .
அவர் வீட்டில் அதற்கு பிறகும் நான்கு மணி நேரம் காத்திருந்தேன் . அவருக்கு மெசேஜும் அனுப்பினேன் அவர் வரவில்லை . தமிழ்நாடு முழுவதும் என் படத்தை வர விடாமல் தடுப்பதில் குறியாக இருக்கிறார் ” என்றார் .
என்ன காரணம் என்பதற்கும் ராம் பாபுவே காரணம் சொல்கிறார் ” பணம் கொடுக்கப்பட வேண்டியவர்களில் வேந்தர் மூவீஸ் மதனும் ஒருவர் . அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை .
அவரது பணததை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டால் அப்புறம் அவர் வந்து கேட்டால் என்ன சொல்வது ?” என்கிறார் .
ஆனால் காரணம் மதன் மட்டுமில்லை . ராக் லைன் வெங்கடேஷ் தர வேண்டிய பணத்தை யார் யாருக்கு எவ்வளவு என்று பிரித்துத் தருவதிலும் உள்ள குழப்பம் முக்கியக் காரணம் என்கிறார்கள் .
அந்த அளவுக்கு லிங்கா பட நஷ்ட ஈட்டுப் பண விவகாரத்தில் பல பெரிய தலைகளும் சேர்ந்து சூப்பராகக் குழப்பி இருக்கிறார்கள் .
“இது விசயமாக நான் தயரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவைப் பார்த்து முறையிட்டேன் . அவர் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார் .
இத்தனைக்கும் லிங்கா நஷ்ட ஈடு விசயத்தில் முக்கியப் பங்கு வகித்து பலன் பார்த்தவர் தாணு . அப்படி இருக்க, தாணு இப்படி செய்யலாமா? இது நியாயமா ?” என்கிறார் ராம்பாபு
ராம்பாபு தன்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் என்று சொல்லிக் கொள்கிறார் .ஆனால் உண்மையில் இவர் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் இல்லை .
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உறுப்பினர்தான் என்று கூறப்படுகிறது. .
“சரி… படம் ரிலீஸ் ஆகா விட்டால் உங்கள் அடுத்த நடவடிக்கைன் என்ன ?”
— என்ற கேள்விக்கு பதில் சொன்ன ராம் பாபு “இந்தப் படத்தில் பதினேழு கோடி ரூபாய் போட்டு இருக்கிறேன் . படத்தை ரிலீஸ் செய்ய அருள்பதி விடவில்லை என்றால்,
அவரே இந்த பதினேழு கோடி ரூபாயையும் தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் ” என்கிறார் .
ஆனால் ராம் பாபு அடுத்தது சொல்வதுதான் வேண்டாத பேச்சு
” கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வருடம் நூறு கோடி ரூபாய் வருகிறது . ஆனால் தமிழ் நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு ஒரு பைசா கூட வருவது இல்லை (?!?!?!)
எனவே இந்தப் பணத்தை எப்படி வாங்குவது என்பது எனக்குத் தெரியும் . அதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று பார்க்கிறேன் .
அருள்பதி ஒன்றும் தயாரிப்பாளர் இல்லை . ஆனால் பாதிப்பு தயாரிப்பாலர்களுக்குதான் ” என்கிறார் .
கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வருடம் நூறு கோடிதான் வருகிறது .
ஆனால் தமிழ் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிக்கும் எத்தனை கன்னட கலைஞர்கள் கன்னட இன வெறியோடு கர்நாடகா கொண்டு போய் தமிழ் நாட்டில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்கள் ,
என்பது யாருக்கும் தெரியாத விஷயமா ? மேற்படி ராம் பாபுவுக்குதான் தெரியாதா?
இது ஒரு பக்கம் இருக்க,
‘பிரச்னை முடிந்து விட்டது . நாளை படம் ரிலீஸ் ஆகும்’ என்று சொல்லப்பட்டாலும், படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் தயங்குவதாக ஒரு தகவல் .
“நான் வெளியூரில் இருக்கிறேன். வந்து பணத்தை வாங்கிக் கொள்கிறேன் ” என்று அருள்பதி கூறி இருக்கிறார்
நடக்கும் பிரச்னையை பார்த்தால் முடிஞ்சா இவன புடி படத்தை தியேட்டர்களில் புடிக்க முடியும் என்று தோன்றவில்லை .