வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, தொட்டால் தொடரும் ஆகிய படங்களைத் தயாரித்த எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், அடுத்து தயாரித்துள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’.
ஹீரோவாக பரதன் நடிக்க, ஹீரோயினாக கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பரஞ்சோதி, திரிஷ்யம் ஆகிய படங்களில் நடித்துள்ள ஹன்சிபா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, கஞ்சா கருப்பு, ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை , வசனம், பாடல்கள் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார்.
‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, விஜய் நடித்த ‘சுறா’, சமீபத்தில் வெளியான ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், கவுண்டமணி, வடிவேலு நடித்த பல படங்களுக்கு காமெடி டிராக் எழுதியவர்.
சிறுவயதில் நாயகி ஒரு செடியை வளர்க்க, திடீரென்று தனது தந்தைக்கு பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்கு குடும்பத்தோடு செல்கிறார்கள். அப்போது தான் வளர்த்த செடியை யார் பராமரிப்பார்களோ என்று எண்ண, அந்த நேரத்தில் சிறுவயது ஹீரோ, செடியை தான் பராமரிப்பதாக கூறுகிறார்.
நாயகி வளர்ந்து மீண்டும் அதே ஊருக்கு வரும்போது, தனது செடி இருந்த இடத்திற்கு செல்கிறார். அங்கே செடி பெரிய மரமாக வளர்ந்திருக்க, அதன் கீழே நாயகன் பரதன் நின்றுக்கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் நாயகிக்கு நாயகன் மீது காதல் ஏற்படுகிறது. இப்படி காதல் ஏற்பட்டாலும், படம் முழுவதும் காமெடியாகவே நகரும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
படத்தை தயாரித்துள்ள துவார் ஜி.சந்திரசேகர் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ‘வீரசேகரன்’ படத்தில் அமலா பாலை நாயகியாக அறிமுகப்படுத்தியது உட்பட, மூன்று ஹீரோக்கள், நான்கு இயக்குநர்கள் என பலரை இவர் சினிமாவில் அறிமுகப்படுத்திருக்க, இவரை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
காமெடித்தனமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் துவார் ஜி.சந்திரசேகர், சூரி மற்றும் கஞ்சா கருப்பு காம்பினேஷனில் காமெடி போகிறதாம்.
”தயாரிப்பாளரை எப்படி காமெடி வேடத்திற்கு தேர்வு செய்தீர்கள்?” என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, “அவருக்கு இயல்பாகவே காமெடி சென்ஸ் அதிகம். சாதாரணமாக பேசும்போதே நகைச்சுவையாக பேசுவார், அதனால் தான் அவரை இந்த வேடத்திற்குத் தேர்வு செய்தேன்.
எனது எண்ணத்திற்கு ஏற்றவாறு படம் முழுவதும் வரும் அவருடைய காமெடி காட்சிகள் ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது.” என்கிறார்.
”நடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?” என்று சந்திரசேகரிடம் கேட்டதற்கு, “நான் இயல்பாக நகைச்சுவையான மனிதன்தான். தயாரிப்பு பணி ஒரு பக்கம் இருந்தாலும், நகைச்சுவையில் அதிக நாட்டம் உண்டு எனக்கு, இதை கவனித்துதான், என்னை இந்த வேடத்தில் இயக்குநர் நடிக்கச் சொன்னார்.
காமெடி வேடம் என்பதால் நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். தற்போது எனது காட்சிகள் ரொம்ப பிரமாதமாக வந்திருப்பதாக ஒட்டு மொத்த படக்குழுவினரும் தெரிவித்துள்ளார்கள்.
படத்தை பார்த்த பல இயக்குநர்கள் என்னை தொடர்ந்து நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்கள். தற்போது ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் வெளியீட்டில் பிஸியாக இருக்கிறேன். படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்கள் மட்டும் இன்றி, வெளிப் படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.” என்றார்.
விரைவில் வெளியாக உள்ள இந்த ‘பாக்கணும் போல இருக்கு’ படத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், அடுத்ததாக முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து நகைச்சுவைப் படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளார். இப் படத்தை ‘அசத்தப் போவது யாரு’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ்குமார் இயக்குகிறார்.