‘பாயும் புலி’ படத்தில் பவானி என்ற அதிரடி வில்லன் வேடத்தில் நடித்த சாமி, பேரரசு இயக்கிய திருப்பாச்சி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர்.
தொடர்ந்து ‘தொட்டி ஜெயா’, ‘லாடம்’, ‘சுயேச்சை எம்.எல்.ஏ’, ‘பழனி’, ‘வருசநாடு’, ‘நாடோடிப் பறவைகள்’, ‘மருதவேலு’, ‘கலவரம்’ என்று பல படங்களில் சிறு சிறு வில்லன் வேடங்களில் நடித்து வந்தவர், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ‘பூஜை’ படத்தின் மூலம் விஷாலை கவர, அவர் இயக்குனர் சுசீந்திரனிடம் சாமியைப் பற்றி சொல்ல, ‘பாயும் புலி’ பவானியாக ஆனார்.
இதுவரை தாடியுடனேயே நடித்த சாமிக்கு பாயும்புலியில் தாடி ஃபிரீ வேடமும் கிடைத்தது
,”நிஜத்திலும் நான் ஒரு வில்லனாகதான் வாழ்ந்திருந்தேன். அப்போது என்னைப் பார்ப்பவர்கள் “நீ சினிமாவில் நடிக்கலாமே” என்று சொல்ல, எனக்கு சினிமா ஆசை அதிகரித்துவிட்டது. உடனே சென்னை வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன்.
பேரரசு சார், எனக்கு திருப்பாச்சி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக ஒரு சில படங்களில் நடித்து வந்த எனக்கு, விஷால் சாரின் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் பாயும் புலி படத்தில் பவானி வேடம். இந்த வேடத்தில் எனது நடிப்பைப் பார்த்து அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
எனக்கு வாய்ப்பு கொடுக்காதவர்கள் கூட, தற்போது என்னை அவர்களது படத்தில் நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு விஷால் சாருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அவருடன் பூஜை படத்தில் நடித்தேன். பிறகு தான் பாயும் புலி படத்தில் எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார்.
பேரரசு சார் எனக்கு முதல் குரு என்றால், விஷால் சார் எனக்கு இரண்டாவது குரு. அவரைப் போல ஒரு நபரை தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. ரொம்ப இயல்பாக எளிமையாக பழகுவார். அனைவரையும் சமமாக நடத்துகிறார். பாயும் புலி படத்தில், பெரிய நடிகர்களுக்கு என்ன என்ன வசதிகள் செய்துக் கொடுத்தாரோ, அதே வசதிகளை எனக்கும் செய்து கொடுத்தார்” என்கிறார். பவானி
தொடர்ந்து , “மருதவேலு என்ற படத்தில் ரியலாக ஒரு ஆக்ஷன் காட்சியில் நடித்தேன். அப்போது காலில் அடிபட்டு 17 தையல் போடவேண்டி வந்தது ஆக்ஷன் காட்சிகளில் எப்படி ஆர்வமுடன் நடிப்பேனோ, அதேபோல நடிப்பிலும் ரொம்ப ஆர்வம் தான். நடிப்பை பொருத்தவரை, சுசீந்திரன் சார், எனக்கு ஒரு குரு என்று சொல்லலாம், அவர் நிறைய விஷயம் சொல்லிக்கொடுத்துள்ளார்.
பாயும்புலிக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் நான் இதுவரை எதையும் ஏற்கவில்லை. தற்போது கன்னடத்தில் ஒரு படத்தை தயாரித்து அதில் வில்லனாக நடித்து வருகிறேன். அப்படம் முடிந்த பிறகு அடுத்தடுத்த படங்களை முடிவு செய்வேன். இதற்கிடையில், தமிழில் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தின் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. விரைவில் அதைப் பற்றி அறிவிப்பேன்.
கன்னட மொழிப் படங்களிலும் வாய்ப்பு வருகிறது. இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக ஆக வேண்டும் என்பது தான் எனது லட்சியம்” என்கிறார் பவானி .