ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற — டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியபடம் ‘பரியேறும் பெருமாள்’ இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. படத்தை இயக்கவிருக்கும் காந்தி மணிவாசகம் இதற்கு முன்பு களவாணி மாப்பிள்ளை – 2 படத்தை இயக்கியவர்.
பரியேறும் பெருமாள் கன்னடத்துக்குப் போகும் செய்தியை அறிந்து, தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர்.
ஆனால், இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால்,
கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்த இயக்குனர், இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாகத் தேர்வு செய்திருக்கிறார்.
இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளில் அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி,
அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார்.
கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.
விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.