உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில், இமான் இசையில் எழில் இயக்கத்தில் வெளியான படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.
பாகுபலி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பி, சி சென்டர்களில் அமோக வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வெற்றி விழா சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் படக்குழுவுடன் கடலூர் கிருஷ்ணாலயா துரைராஜ், வட ஆற்காடு வினியோகஸ்தர் ஸ்ரீனிவாசன், கோயமுத்தூர் வினியோகஸ்தர் ராஜமன்னார்,
மதுரை வினியோகஸ்தர் குணசேகரன், ஐடிரீம்ஸ் திரையரங்கு உரிமையாளர் மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
”சரவணன் இருக்க பயமேன் ரிலீஸுக்கு முதல் நாள் வரை ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது.
ஒரு வழியாக பாகுபலி ஓடிக்கொண்டிருக்கும் போது தைரியமாக ரிலீஸ் செய்தார் உதயநிதி, படமும் வெற்றியை பெற்றுள்ளது.” என,
தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள்.
”படத்தை குறித்த விமர்சனம் வேறு விதமாக இருந்தாலும், ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடித்து போய் விட்டது. வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது,
இயக்குனர் எழில் ரசிகர்களின் நாடி துடிப்பை சரியாக கணித்து வைத்திருக்கிறார்” என்றார் நடிகர் சாம்ஸ்.
நடிகர் சூரி பேசும்போது, ” எழில் இருக்க பயமேன், எழில் ஒரு மினிமம் கேரண்டி இயக்குனர். ‘எழில் சார் என்ன கொடுப்பார் என ரிலீஸுக்கு முன் நினைத்தேனோ அது படம் ரிலீஸுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது’
– என உதயநிதி என்னிடம் திருப்தியோடு சொன்னார். உதயநிதி மாதிரி நல்ல மனிதருக்கு எல்லாமே நல்லதாக தான் நடக்கும்” என்றார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பிறகு பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது சரவணன் இருக்க பயமேன்.
இடையில் சில படங்கள் சரியாக ஓடவில்லையே தவிர, அவை தவறான படங்கள் இல்லை. பாகுபலி சுனாமிக்கு மத்தியில் படத்தை ரிலீஸ் செய்யலாமா? வேணாமா? என்ற தயக்கத்தில்தான் இருந்தேன்.
என் வினியோகஸ்தர் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தான் ரிலீஸ் செய்ய முடிந்தது. குறிப்பிட்ட அளவு, நல்ல திரையரங்குகளை பிடித்து கொடுத்தார்கள்.
இன்னும் கூட 80 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றார்.
படத்தின் இயக்குனர் எழில், நாயகி ரெஜினா கஸாண்ட்ரா, நடிகர் யோகிபாபு, ஒளிப்பதிவாளர் கே ஜி வெங்கடேஷ், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் நன்றி தெரிவித்துப் பேசினர்.