சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிட,
சூர்யா , சமந்தா, நித்யா மேனன் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களையும் தெலுங்கில்
இஷ்க் , மனம் ஆகிய படங்களையும் இயக்கிய விக்ரம் குமார் இயக்கும் படம் 24.
ஒரு கடிகாரம் கண்டுபிடிக்கப் படுவதால் ஏற்ப்படும பிரச்னைகளை மையமாகக் கொண்டு சயின்ஸ் பிக்ஷன் படமாக வரும் இந்தப் படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கிறார் . அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் .
இசை ஏஆர் ரகுமான் . படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பாடல்களை வெளியிட்டது… வேறு யார், ஏ ஆர் ரகுமான்தான் !
படத்தின் மூன்று பாடல்களை மேடையில் பாடகர்களும் இசைக் கலைஞர்களும் இசைத்துப் பாடினர் . அதில் ஒரு தாலாட்டுப் பாடலை தெலுங்குப் பதிப்பில் பாடி இருக்கும் நித்யா மேனன் மேடையிலும் தோன்றிப் பாடினார்.
அந்தப் பாடலுக்கு மேடையில் வந்து கீ போர்டு வாசித்தார் ஏ ஆர் ரகுமான் .
மூன்று பாடல்களின் சில பகுதிகளை திரையிட்டனர். பாடல்கள் நன்றாக இருந்தன .
முன்னோட்டம் பிரம்மாதமாக இருந்தது .
தயாரிப்பாளர்கள் தேனப்பனும் டி.சிவாவும் “கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டு போகப்போகிற நடிகர் சூர்யாதான் ” என்று பாராட்டினார்கள்
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார் ” சூர்யா பிறந்ததும் நடிகர் திலகம் சிவாஜி, புரட்சித் தலைவர் எம் ஜி ஆர், சாண்டோ சின்னப்ப தேவர் மூவரிடமும் ஆசி பெற்றேன் . சூர்யா ரொம்ப சைலன்ட் பிள்ளையாக வளர்ந்தார் .
மார்பு வரை தூக்கிப் போட்ட பேண்ட்டுடன் காலேஜ் போவார் அப்போ ரொம்ப சைலன்ட்டா இருப்பார். ஆனா இப்படி சைலன்ட் கில்லரா இருப்பார்னு நினைக்கவே இல்லை .
ஒரு முறை வீட்டுக்கு வந்த ஒரு ஜோசியக்காரர் என்கிட்ட ‘உங்க பையன் பெரிய நடிகரா வருவார்’னு சொன்னார் . நான் ‘கார்த்தியா?’ன்னு கேட்டேன் . அவர் சூர்யாவை காட்டினார் . நான் நம்பவே இல்ல.
அவர்ட்டயே அதை சொன்னேன் . அதுக்கு அவர் ”சினிமாவில் இவர் உங்களை விட எல்லாம் சாதிப்பாரு’ன்னு சொன்னார் . இன்னிக்கு அது நடக்குறது சந்தோசம் ” என்றார் .
கவிஞர் வைரமுத்து பேசும்போது “சிவகுமார் வாழ்வில் உயர்ந்தபோது அதைப் பார்க்க அவரது அப்பா உயிரோடு இல்லை .
ஆனால் தன் பிள்ளைகள் தனக்கு முன்னாலேயே பெரும் உயரங்களைத் தொடுவதைப் பார்க்கும் பேறு சிவகுமாருக்கு வாய்த்து இருப்பது பெரிய சந்தோசம் .
தன்னைச் சுற்றி சூர்யா அறிவாளிகளை வைத்துக் கொள்கிறார் . அவரிடம் ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் இருக்கிறது.அது அவரை மேலும் மேலும் உயர்த்தும் ” என்றார் .
கார்த்தி பேசும்போது,
” இந்தப் படத்துல அண்ணன் வில்லனாவும் நடிச்சு இருக்காரு . எனக்கு அதுல ஆச்சர்யம் இல்ல. ஏன்னா என் பத்து வயசு வரை அவர்தான் எனக்கு வில்லன் .
என்னை அவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்காரு . அண்ணனுக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோது அண்ணன் ஒத்துக்கல . ஒரு ராத்திரி பூரா அண்ணனை வற்புறுத்தி நடிக்க சம்மதிக்க வச்சேன் .
அதுக்காக இன்னிக்கு பெருமைப் படறேன் “என்றார்
“நான் சமீபத்தில் கேட்ட கதைகளிலேயே இப்படத்தின் கதை தான் மிகச் சிறந்தது எனலாம் , நான் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆற்றலைக் கண்டு மிகவும் வியந்தேன்.
2 டி யும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து 24. என்ற இந்த மிகச் சிறந்த பிரம்மாண்ட படைப்பை வெளிக்கொண்டு வருகிறது” என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய போது, “நான் இப்படத்தில் இன்னும் பணியாற்றிக் கொண்டு இருப்பதால் என்னால் இப்படத்தை பற்றி பேச இயலாது.
படம் பார்த்துட்டு ரசிகர்களாகிய நீங்கதான் எப்படின் இருக்குன்னு சொல்லணும் உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்றார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசிய போது“படத்தின் ட்ரைலரை இப்போது பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நாங்கள் உழைத்த உழைப்புக்கான பலன் இது. வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அழகான பாதையை அமைத்து கொடுத்தது ரசிகர்கள் தான்..
சரியான படம் பண்ணின வெற்றி பெற வைங்க , தப்பான படத்தை நான் பண்ணினா கூட என்னையும் கூட ஆதரிக்காதிங்க , அப்படி தப்பான படத்தை நீங்க ஆதரிக்காம இருந்தால்தான்,
நாங்கள் நல்ல கதையை தேடிப் பிடித்து சிறந்த படத்தில் நடிக்க முடியும் , உங்களை மகிழ்விக்கவும் முடியும்.
இயக்குநர் விக்ரம் குமார் மிகச் சிறந்த இயக்குநர். அவர் படத்தின் கதையை நான்கரை மணி நேரம் என்னிடம் கூறினார். சொல்லி முடித்ததும் நான் எழுந்து நின்று கை தட்டி ரசித்தேன்.
படத்தின் கதையை கேட்க வேண்டும் என்று இசைய்புயல் ஏ. ஆர். ரஹ்மானிடம் நான் கூறியதும், முதலில் அரைமணி நேரம் கதை கேட்க நேரம் ஒதுக்கினார்.
பின்னர் கதை பிடித்துப் போய் ஆறு மணி நேரம் எங்களுடன் விவாதித்தார் .‘இப் படம் ஒரு லட்சிய படைப்பு’ என்று இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பேசலாம் அவர் மிகப்பெரிய உச்சங்களை தொட்டும் எளிமையாக இருக்கிறார்.. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன்.
சமீபத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர், தேர்வில் கேள்வித் தாள் கஷ்டமாக இருந்தது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டதைக் கேட்டபோது நான் மிகவும் வருந்தினேன் , மனசு வலித்தது.
பிளீஸ் அப்படி யாரும் செய்ய வேண்டாம் . படிக்கும்போது ஒழுங்காகப் படியுங்கள் . அதன் பின்னர் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் .
நல்லவர்கள் எல்லாருக்கும் ஒரு களம் அமையும். எல்லாருக்கும் நல்ல நேரம் வரும். வெற்றி வரும்
நான் ஒரு தற்குறி . அதனால்தான் இப்போது என்னைச் சுற்றி அறிவாளிகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
கல்லூரி படிக்கும் போது நானும் எதுவும் செய்யமால் இருந்தேன் , ஆனால் நான் இங்கு இப்படி நின்று பேசுவதற்கு காலம் தான் காரணம். எனவே எந்த நிலையிலும் மனம் உடையாதீர்கள் ” என்றார் .
அர்த்தமுள்ள பேச்சு !