சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் மருத்துவரான டாக்டர் பரத் விஜய் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்க , தாரை தப்பட்டை படத்தில் நடித்த சஹானா கதாநாயகியாக நடித்து இருக்கும் படம் ஆறாம் அறிவு .
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்கிறது ஒரு காதல் ஜோடி. சந்தோஷமாக மண வாழக்கை போய்க் கொண்டிருந்த சூழலில் திருமணத்துக்கு உதவிய நண்பர்களில் ஒருவன் இறக்கிறான் . அதில் இருந்து பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது .
அவளுக்குள் ஏதோ ஒரு சக்தி புகுந்தது போல நடந்து கொள்கிறாள் . எதிர்ப்படும் எல்லோரையும் மூர்க்கத்தனமாகத் தாக்குகிறாள் .
அவளை ஆட்டிப் படைக்கும் சக்தி என்ன என்று ஆராயும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப் படமாம் .
பெரும் மருத்துவக் குடும்பத்தில் பிறந்த பரத் விஜய்க்குள் இருந்த சினிமா ஆர்வம் அவரை முதலில் மாடலிங் துறைக்குள் கொண்டு போய் , விளம்பரம் மற்றும் கார்ப்பரேட் படங்களில் முகம் காட்ட வைத்து, இப்போது நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறது.
“டைரக்ஷன் கோர்ஸ் படித்த பிறகே படம் இயக்கினேன். சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.” என்கிறார் அவர் .
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட விழாவில் இரண்டு முன்னோட்டங்களையும் இரண்டு பாடல்களையும் போட்டுக் காட்டினார்கள். அகிலா என்ற புதுப் பாடகி ஒரு பாடலை மிக அழகாகப் பாடியிருக்கிறார் .
”உனக்காக வாழ்வது சுய அறிவு ”என்று துவங்கும் ஒரு பாடலை மலேசியாவில் உள்ள அவுட் லா என்ற ட்ரூப் பாடகர்களுடன் மரண கானா விஜி , பிரின்ஸ் ஆகியோர் இணைந்து வெஸ்டர்ன், ராப் , கிளாசிகல் ஆகிய மூன்று வகை இசையையும் கலந்து பாடி இருக்கிறார்கள் .
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகை தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜயமுரளி ” பரத் , விஜய் ஆகிய இரண்டு ஹீரோக்களின் பெயரை , இந்தப் படத்தை உருவாக்கி உள்ள டாக்டர் பரத் விஜய் வைத்துக் கொண்டிருக்கிறார் . அதற்கேற்ப பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ” என்றார் .
கலைப்புலி ஜி சேகரன் பேசும்போது “புதிதாகப் படம் எடுக்க வருபவர்கள் முன் அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு விஷயம் அறிந்து படம் எடுத்தால் வீண் செலவுகளைக் குறைக்கலாம் ” என்று கூறினார் .
அடுத்த பெப்சி தலைவராக மீண்டும் வர இருப்பவர் என்று நம்பப்படும், பழம்பெரும் சினிமா எழுத்தாளர் , இயக்குனர் , தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பேசும்போது ” ஜி சேகரன் சொல்வது மிக நல்ல விஷயம் . ஆனால் பரத் விஜய் ஒரு மருத்துவர் . திட்டமிட்டு முறைப்படி சினிமாவுக்கு வந்திருக்கிறார் .
ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டு பணியாற்றி இருக்கிறார் . இந்த தெளிவு எல்லோருக்கும் வேண்டும் ” என்றார் .
வாழ்த்துகள் டாக்டர் !