போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் மலேசியாவைச் சேர்ந்தவரும் கபாலி படத்தின் இணை தயாரிப்பாளருமான அப்துல் மாலிக் என்பவருக்கும் போதைப் பொருள் ரீதியாகத் தொடர்பு உண்டு என்று அண்மையில் ஆதன் மீடியா யூ டியூப் சேனல் உட்பட ஒரு சில சேனல்களில் காணொளி வெளியானது.
இதையடுத்து அப்துல் மாலிக் தரப்பில் ஆதன் தமிழ் மீடியா பிரைவேட் லிமிடெட், அதன் நெறியாளர் மாதேஷ் மற்றும் வராகி,சவுக்கு சங்கர் உட்பட சில யு.டியூப் சேனல்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடையோர் மீது உண்மைக்குப் புறம்பாக பொய்ச் செய்தி வெளியிட்டதால், சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்துல் மாலிக் சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவரது தரப்பு மற்றும் வழக்கறிஞர்கள் குழு, ” திரு.அப்துல் மாலிக் மலேஷியாவில் புகழ் பெற்ற தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ் படங்களை மலேஷியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராக பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்த சேவைகளை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதை கொடுத்து கெளரவித்துள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேஷியா வரும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழி நடத்துதலையும் திரு.அப்துல் மாலிக்கிடம் அவர்கள் கேட்பதுண்டு.
இதன் காரணமாக திரு.அப்துல் மாலிக்கின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியீட்டுள்ளனர்.
குறிப்பாக ஆதன் மீடியாவைச் சேர்ந்த திரு.மாதேஷ், திரு.வராகி பாலாஜி மற்றும் திரு.சவுக்கு சங்கர் ஆகியோர் எந்தவித ஆதரமும், ஆவணங்களும் இல்லாமல் திரு.அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்துவதோடு அதன் மூலம் மறைமுக ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
அதை அடிப்படையாக கொண்டு மேலும் பல யு-டியூப் சேனல்கள் செவி வழி செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லமால் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
முக்கியமாக அவர் மக்கள் சேவகர். ஆனால் அவரை டான் என்று எல்லாம் தவறாக சித்தரிக்கின்றனர்.
மேற்கண்ட வீடியோ பதிவுகள் திரு.அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்தியிருப்பதோடு, மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதை சட்டபூர்வமாக அணுகும்விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம்.
அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் திரு.அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்து கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்’’ என்றனர்.