தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் , இயக்குனர் ஏ எல் விஜய்யின் அண்ணன் ……
இப்படி குடும்ப அளவில் ஒரு பலமான சினிமா பின்னனி இருந்தாலும் , தனது சொந்தக் காலில் தன்னம்பிக்கையோடு முயல்வது உதயாவின் வழக்கம் .
”உங்கதம்பி இயக்கத்தில் நீங்க ஹீரோவாக ஏன் நடிக்கவில்லை ?” என்று கேட்டால் “அதை நீங்க அவர்கிட்டதான் கேட்கணும் . அழைத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் ” என்கிறார் கம்பீரமாக . (அண்ணேன் டா !)
இன்று உதயாவின் பிறந்த நாள் .

காமெடி ஸ்கிரிப்டுகள் மீது ரொம்ப ஆர்வம் கொண்டவர் உதயா ,
ஆவிகளுடன் பேசும் ஆவி அமுதா என்ற பெண்ணை பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா ?
அது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் குமார் என்ற பெயரில் இவர் நடித்து இருக்கும் ஆவி குமார் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது .
சூட்டோடு சூடாக அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார் உதயா .
ஜி வி அய்யரிடம் பணியாற்றிய ஆசிப் குரைசி என்பவரது இயக்கத்தில் இவர் அடுத்து நடிக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’
பொதுவாக, படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதோ அல்லது முடிந்த பிறகோ படத்துக்கென்று டீசர் வெளியிடுவார்கள் . ஆனால் இன்னும் ஷூட்டிங்கே போகாத நிலையில் படத்துக்கென்று ஒரு டீசரை வெளியிட்டிருக்கிறார் உதயா .
அதில் உதயா தன்னந்தனியாக பரபரப்புடன் பேசிக் கொண்டு வாகனங்கள் அடர்ந்து விரையும் தேசிய நெடுஞ்சாலைகளில் – பாலங்களில் , இரவு – பகல்களில் , காலை –அந்திகளில் , ஓடுகிறார் – உட்காருகிறார்; நடக்கிறார் – படுக்கிறார் , பேசுகிறார் – மவுனிக்கிறார்.
” டீசரை பார்ப்பதற்கு ஆக்ஷன் படம் போல தெரிந்தாலும் இது முழுக்க முழுக்க காமெடி படம் ” என்கிறார் உதயா
படம் பற்றி இயக்குனர் என்ன சொல்கிறார் ?
”ஒரு காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன . எது நல்லது எதுகேட்டது என்று சொல்லித் தரும் வழக்கம் இருந்தது . இன்று அவை இல்லாமல் போனதால் , சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது . அது தப்பு. மனம் நல்லதை சொல்லும்போது பணிந்து கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும் ” என்கிறார் .
படத்தில்அந்த மகாராஜா கேரக்டரில் அநேகமாக எஸ் ஜே சூர்யா நடிப்பார் என்கிறார் உதயா .
இந்த , தனது பிறந்த நாளையொட்டி புதுப்பட அறிவிப்பை வெளியிட்டிருக்கும் உதயா ,
தனது உடல் உறுப்புகளை தானம் செய்து அறிவித்திருக்கிறார் . உதயாவுக்கு உறுப்பு நன்கொடையாளர் அட்டையை வழங்கிய மோகன் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்தவர்கள் இது பற்றிக் கூறும்போது ” உதயாவே எங்களை அணுகி உறுப்பு தானம் செய்யும் விருப்பத்தை சொன்னபோது நெகிழ்ந்து போனோம் .
நாட்டில் எவ்வளவோ நோயாளிகள் உடலின் ஒரு உறுப்பு பழுதுபடுவதால் மரணத்தை நோக்கி திரும்பி விடுகிறார்கள் . அதே நேரம் வேறு காரணங்களால் மரணம் அடையும் நபர்களில் உடல் உறுப்புகள் யாருக்கும் பலன் இன்றி அநியாயமாக எரிந்து சாம்பலாகவோ, மண்ணில் புதைந்து மட்கியோ போகின்றன . அவற்றை தானம் செய்வதன் மூலம் பல உயிர்களை வாழ வைக்க முடியும் .
இப்படி ஈர இதயம் உள்ளவர்களிடம் இருந்து உறுப்பு தானம் பெற்று, பலர் அதை விலைக்கு விற்று சம்பாதிப்பதாக பயப்படத்தேவை இல்லை . இப்போது சட்டப்படி அது சாத்தியம் இல்லாத ஒன்றாகி விட்டது . தானமாக பெறப்படும் உறுப்புகள் முன்பே பதிவுசெய்து கொண்டு, காத்திருப்பவர்களுக்குதான் வழங்கப்படும் . அதில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது .
கண் தானம் , உறுப்பு தானம் , உடல் தானம் செய்ய ஒத்துக் கொண்டு டோனர் கார்டை (நன்கொடையாளர் அடையாள அட்டை ) வாங்கிக் கொண்டால் அப்புறம் சொன்னபடி கொடுத்துதான் ஆக வேண்டும்என்ற கட்டாயம் இல்லை . அந்த சூழ்நிலையில் இறந்தவரின் குடும்பத்தார் ஒத்துக்கொண்டால் மட்டுமே உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படும் எடுக்கப்படும். எனவே இந்த தானத்தால் தத்தம் குடும்ப உறுப்பினரின் பின்னாளில் வருந்த வேண்டிய சூழ்நிலை வருமோ என்று பயப்படத் தேவை இல்லை .அவர்கள் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது.
அப்புறம் …. ஒரு மனிதன் இறந்த உடன் அவனது ஆன்மாதான் சொர்க்கத்துக்கு போக முடியும் . உடலோ , உறுப்புகளோ போகப் போவது இல்லை. தவிர உடலையும் உறுப்புகளையும் தானம் செய்தால் சொர்க்கத்துக்குப் போவதும் உறுதி ” என்கிறார்கள் .
ஆர்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம்
Dr. Sumana navin, course director , MOHAN Foundation ,
phone : 044 – 26 44 7000 Mobile : 94446 07000
Helpline Number : 1800 419 3737
Email ; mohanfound@gmail.com
www.mohanfoundation.org