தமிழகமே அறிந்த இந்தப் படத்தின் முழுக் கதையும் இங்கே சொல்லத் தேவை இல்லை . ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் .
பாகுபலி படத்தில் தன் அம்மா தேவசேனா காலிலும் கையிலும் பூட்டப்பட்ட விலங்கை உடைக்கத்தான் மகேந்திர பாகுபலி அவ்வளவு சண்டை எல்லாம் போடுவார் .
ஆனால் அடிமைப் பெண் படத்தின் லெவலே வேறு .
ஒரு நாட்டின் அரசனை (பெரிய எம் ஜி ஆர் ) வஞ்சகமாகக் கொன்று அந்த நாட்டைக் கைப்பற்றும் பக்கத்து நாட்டு அரசன் (எஸ் ஏ. அசோகன்),
அடிமைப்பட்ட நாட்டின் பெண்களை எல்லாம் சிறைபிடித்து அவர்களின் காலிலும் கையிலும் விலங்கு பூட்டிக் கொடுமைப் படுத்துகிறான் .
இந்த நிலையில் இறந்து போன அரசரின் மனைவி (பண்டரி பாய்) பக்கத்து நாட்டு அரசனிடம் சிக்காவிட்டாலும் , தன் நாட்டுப் பெண்கள் கஷ்டப்படும்போது,
தான் மட்டும் இயல்பாக வாழ்வது முறை அல்ல என்று , தன் காலிலும் கையிலும் தானே ஒரு விலங்கைப் பூட்டிக் கொண்டு அடிமையாக வாழ்கிறாள் .
அதே நேரம் அந்த கொடிய அரசனால் சிறை பிடிக்கப்பட்டு குழந்தை பருவத்திலேயே சிறையில் தள்ளப்பட்டு , ஒன்றும் அறியாத சிறைமகனாய் வாழ்ந்து இளைஞனாகும் இளவரசன் (எம் ஜி ஆர் ) ,
ஒரு விசுவாசமிக்க இளம் பெண்ணால் (ஜெயலலிதா) உலகறிந்த மனிதானாக மாற்றப் பட்டு , அம்மாவை சந்திக்கப் போகிறான் .
அப்போது மகனிடம் அந்த அடிமைப் பெண் ராணி , ”என் முகத்தை நீ பார்க்க வேண்டுமானால் என் கால் கைகளில் உள்ள விலங்கு உடைபடவேண்டும் .
இந்த விலங்கு உடைபட வேண்டுமானால் அந்தக் கொடிய அரசனிடம் சிக்கி உள்ள நம் நாட்டுப் பெண்களின் விலங்குகள் அனைத்தும் உடைபட வேண்டும்.
எனவே அவர்களை மீட்டு வந்து என் விலங்கை உடைத்து அப்புறம் என் முகத்தைப் பார் ” என்கிறார் .
அந்த வகையில் பார்த்தால் ஒரே அடிப்படை என்றாலும் அடிமைப்பெண் கதை பாகுபலி கதையை விட நூறு மடங்கு உசத்தி .
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு கதையை யோசித்த எம் ஜி ஆரையும் அவரது எம் ஜி ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவையும் (ஆர் எம் வீரப்பன், வித்வான் லட்சுமணன், எஸ் கே டி சாமி) பாராட்ட வார்த்தைகளே இல்லை .
தவிரே அப்போதே , எம் ஜி ஆர் அணிந்து இருக்கும் ஐரோப்பிய பாணி உடைகள், ஹாலிவுட் ஹீரோ போன்ற தோற்றம் , என்று பல வியப்பான அம்சங்கள் .
அழகான நாயகியாக மட்டும் இன்றி அசததாலான வில்லி வேடத்திலும் மிரட்டி இருக்கிறார் ஜெயலலிதா
இந்தப் படத்தில் ஜெயலலிதா ஆடிய டேப் டான்சை அதற்கு முன்னும் பின்னும் தமிழ் சினிமாவில் எந்தக் கதாநாயகியும் யோசித்துக் கூடப் பார்க்கவில்லை
மெட்டுகளின் மேதையான கே வி மகாதேவனின் இசையில் காதில் தேன் ஊற்றுகின்றன பாடல்கள் .
இன்றைய ட்ரெண்டிலும் ‘காலத்தை வென்றவன் நீ…’ பாடலும் , ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலும் மயங்கித் திளைக்க வைக்கிறது .
தாயில்லாமல் நானில்லை பாடலும் உனைப் பார்த்து இந்த உலகம் பாடலும் நாடி நரம்புக்குள் முறுக்கேற்றுகிறது .
“பொய்கை எனும் நீர் மகளாள் பூவாடை போர்த்து நின்றாள். தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்…” (புலவர் புலமைப் பித்தன் )
”இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே ! இனத்தை இனமே பகைப்பதெல்லாம் மனிதன் வகுத்த் வாழ்க்கையிலே.

அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ? இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால் சரித்திரம் உன்னை இகழாதோ ” (வாலி)
– போன்ற பாடல் வரிகளை கேட்கும்போது , எப்பேர்ப்பட்ட உன்னதமான திரைப்பாடல் பாரம்பரியத்துக்கு சொந்தக்கார்கள் நாம் என்ற பெருமிதத்தில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கசிவதை தவிர்க்க முடியவில்லை .
அதுவும் இந்த ”அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ? இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால் சரித்திரம் உன்னை இகழாதோ ”
— என்ற வரியை யாரவது மோடிக்கு மொழி மாற்றிச் சொல்ல வேண்டும்
பாலைவனம், ஒட்டகம் என்று அன்றே அசத்தி இருக்கிறார்கள் .
அடேயப்பா…! ஒகனேக்கல் அருவியை வைத்து அன்றே எவ்வளவு அழகாக காட்சிகளை அமைத்து எடுத்துள்ளார்கள் என்று வியக்க வைக்கிறது
தாயில்லாமல் நானில்லை பாடலில் வரும் ”ஜீவ நதியாய் வருவாள்.. என் தாகம் தீர்த்து மகிழ்வாள்” என்ற வரிகளுக்கு ஆர்ப்பரித்து ஓடும் அருவியில்,
எந்தப் பிடிமானமும் இல்லாத வழுக்குப் பாறையில் நீரின் வேகத்தை எதிர்த்து , தனது ஐம்பத்தி இரண்டாவது வயதில் எம் ஜி ஆர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் !
35 MM படத்தை சினிமாஸ்கோப்புக்கு மாற்றியதால் மேலும் கீழும் பிரேம் கட் ஆகிறது . அது தவிர்க்க முடியாதுதான் .
ஆனால் காலத்துக்கு ஒவ்வாத முறையில் மாறி விட்ட சில காமெடிக் காட்சிகளை நீக்கி இருக்கலாம் .
ஆயிரம் நிலவே வா பாடலுக்கு புதிய, வாத்திய இசைக் கோர்ப்பு செய்து சேர்த்து இருப்பது ஒட்டவில்லை . பழைய இசையை அப்படியே விட்டு இருக்கலாம் .
தாயில்லாமல் நானில்லை பாடலின் முதல் பி ஜி எம் எங்கே போச்சு ?
”ஏமாற்றாதே ஏமாறாதே” பாடலைப் பார்க்கும்போது , நாம் பார்ப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் படமா?
அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தை ஹெச் பி ஓ சேனலில் இருந்து பெரிய திரைக்கு இணைப்பு கொடுத்து பார்க்கிறோமா என்ற பிரம்மிப்பு ஏற்படுகிறது .
படத்தின் கிளைமாக்சில் வரும் உன்னைப்பார்த்து பாடல் ஒரு அழகியல் கவிதை என்றால் , இன்றைக்கும் பிரமிக்க வைக்கிறது சிங்கத்தோடு எம் ஜி ஆர் சண்டை போடும் காட்சி.
அதில் சிங்கத்தை பயன்படுத்தி இருக்கும் விதமும் அசத்தலான படத் தொகுப்பும் .பிரம்மிக்க வைக்கிறது.
இந்தி நடிகர் ராஜ்கபூரே அந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதத்தை வியந்து பாராட்டி எம் ஜி ஆருக்கு கடிதம் எழுதியதோடு,
அது எப்படி எடுக்கப்பட்டது என்பதை எம் ஜி ஆரிடம் ஆர்வத்தோடு கேட்டுத் தெரிந்து கொண்டார் எனும்போது ,
நமது பாராட்டு எல்லாம் எந்த மூலை?
பாகுபலியை பார்த்து பாரட்டியவர்களே .. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பாகுபலியை விட சிறப்பான கதையை எடுத்துக் கொண்டு ,
எந்த கிராபிக்ஸ் வசதியும் இல்லாத நிலையில் நம் முந்தைய கலைத் தலைமுறை விஸ்வரூபம் எடுத்து இருக்கும் அடிமைப் பெண் படத்தைப் பாருங்கள் .
நெஞ்சு நிமிரும் !
அடிமைப்பெண்… என்றும் வெற்றியின் தலைவி !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————-
எம் ஜி ஆர், ஜெயலலிதா, கே.வி மகாதேவன், கே.சங்கர், ஆர் எம் வீரப்பன், வித்வான் லட்சுமணன், எஸ் கே டி சாமி,
புலமைப் பித்தன், வாலி , ஆலங்குடி சோமு, அவினாசி மணி, டி எம் சவுந்திரராஜன், பி.சுசீலா, எஸ் ஜானகி, எஸ் பி பால சுப்பிரமணியம் ,
ஒளிப்பதிவு வி. ராமமூர்த்தி, கலை இயக்குனர் அங்க முத்து, உடை அலங்கார நிபுணர்கள் எம் ஜி நாயுடு, சீனிவாசன்,
சண்டைப் பயிற்சி ஷியாம் சுந்தர், நடன இயக்குனர்கள் ஏ கே சோப்ரா, பி எஸ் கோபால கிருஷ்ணன், தங்கப்பன், எடிட்டர் நாராயணன், மேக்கப் மென் பீதாம்பரம், ஏ ராமதாஸ், கோபால் , செட் சொக்கலிங்கம்,