இன்னும் திரையரங்குக்கே வரவில்லை. அதற்குள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றதோடு , இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே உலகப் பட விழா, மும்பை உலகப் பட விழா, பெங்களூர் உலகப் பட விழா என்ற பல களங்களில் கம்பீரமாகக் கலக்கிக் கொண்டிருக்கிறது குற்றம் கடிதல் திரைப்படம் .
ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் வழங்க , கிறிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன் தயாரிக்க, புதுமுகங்கள் சாய் ராஜ்குமார், ராதிகா, பாவல் நவகீதன், மாஸ்டர் அஜய் ஆகியோர் நடிப்பில் பிரம்மா என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் இந்தப் படம், எவ்வளவு சிறப்பான படம் என்பது , இப்படி வெளிவரும் முன்னரே விருதுகளைக் குவிப்பதில் இருந்தே புரிகிறது .
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல படங்களையும் பார்த்து நான் களைத்துப் போயிருந்த வேளையில், இறுதிநாள் நிகழ்ச்சி முடிந்த நிலையில் இந்தப் படம் திரையிடப்பட இருந்தது .
களைப்பு காரணமாக , படம் ரிலீஸ் ஆகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி நான் அரங்கை விட்டு வெளியே வர, எதிர்ப்பட்ட தயாரிப்பாளர் ஜெ சதீஷ் குமார் , ”படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று அன்புக் கட்டளை இட்ட காரணத்தால், வசமாக சிக்கிக் கொண்ட உணர்வோடுதான் ,அரங்கில் மீண்டும் போய் அமர்ந்தேன்.
பத்து நிமிடத்துக்குள் படம் கவராவிட்டால் , அப்போதே அதை போன் மூலம் சதீஷ்குமாருக்கு சொல்லிவிட்டு, வீட்டுக்குப் போய் விடுவதில் உறுதியாக இருந்தேன் .
ஆனால் படம் துவங்கிய மூன்றாவது நிமிடம் , எல்லாக் களைப்பும் அயற்சியும் போய், நான் அவ்வளவு பிரஷ்ஷாக ஆனேன் . பத்தாவது நிமிடம் மானசீகமாக திரைக்குள் நுழைந்து இணைந்து , இயைந்து ….அப்படியே கதை மாந்தர்களோடு கலந்து….
குற்றல் கடிதல் ஒரு அற்புதப் படம் !
படம் முடித்து வெளியே வரும்போது, ஒரு ஓரத்தில், என்ன மாதிரியான கருத்துகள் வருமோ என்ற உணர்வில் தயங்கி நின்று கொண்டிருந்தத இயக்குனர் பிரம்மாவை , கனத்த இதயத்தோடு கரகரத்த குரலோடு கட்டிப் பிடித்துப் பாராட்டினேன் . அநேகமாக அவரது திரைக்குழு மற்றும் திரைப்பட விழாவுக்கு படம் பார்த்த நபர்களுக்கு அப்பால் அந்தப் படத்தை பாராட்டிய முதல் வெளி மனிதன் நானாகத்தான் இருப்பேன் .
பொதுவுடைமை மற்றும் தமிழின உணர்வு இவைகளைக் கொண்டு வாழ்கிற — நல்லாசிரியருக்கான தேசிய விருது பெற்ற ஒரு தமிழ் ஆசிரியரின் மகனான இயக்குனர் பிரம்மா…
மக்களுடன் நின்று மக்கள் வழியே மக்களைப் பார்க்கும் கோணத்தில் மிக சிறப்பாக இயக்கி இருக்கும் படம் இது .
தவறு செய்பவரின் குற்றத்தை கடிந்து கொள்ளும்போது சில சமயம் அப்படிக் கடிந்து கொள்வதே குற்றமாகிறது . அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடமையின் அங்கமாகவே அப்படிக் கடிந்து கொண்ட கனிவான உள்ளத்தின் கதி என்ன? என்பதே இந்தப் படம் .
புதுமுகங்கள் , புதிய தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து கொடுத்திருக்கும்…
பக்குவமான இந்தப் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் ராம், கார்த்திக் சுப்புராஜ், மகிழ் திருமேனி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
மூன்று மாதம் முன்பே நான் பார்த்து விட்ட படம் என்னும்போதும் படத்தின் முன்னோட்டம், இதுவரை பார்த்திராத ஒரு படத்தின் பாடல்கள் போல சிறப்பாக இருந்தது. பாடல்களும் அப்ப்ப்ப்பப்ப்ப்படி ஈர்த்தது .
நிகழ்ச்சியில் பேசிய ராம்
” குற்றம் கடிதல் படம் ஓர் ஆதி வனம் போன்றது . ஆதி வனம் என்றால் மனிதர்கள் நுழையாத வனம் . அங்கே எந்த நெற்பயிரையும் விளைவிப்பதற்காக நதிகள் ஓடுவதில்லை . எந்த மேசையையும் உருவாக மரங்கள் வளர்வதில்லை . பூக்களின் தேன் முழுக்க வண்டுகளுக்கே உரியது . அப்படித்தான் இந்தப் படம் . இதன் நோக்கம் அவார்டு வாங்குவது அல்ல . இது மக்களுக்கான படம் . அவார்டு என்பது அவர்கள் கொடுத்தது . எந்த பாசாங்கும் இல்லாத ஆதிவனம் போன்ற காட்டுத்தனமான படம் குற்றம் கடிதல் ” என்றார் .
கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது
” நான் எனது ஜிகிர்தண்டா படத்தை விருதுகளுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தபோது எல்லோரும் இந்த குற்றம் கடிதல் படம் பற்றி மட்டுமே பேசினார்கள் . அப்படி என்ன பெரிய படம் இது என்ற கேள்வியோடுதான் படம் பார்த்தேன் . நெகிழ்ந்து போனேன் . ரிலீஸ் ஆகும்போது இந்தப் படத்தை மீண்டும் பார்க்கக் காத்திருக்கிறேன் ” என்றார் .
படக் குழுவினரை , சரத்குமார் வாழ்த்திப் பேசிய பிறகு . சிறப்புரை ஆற்றிய பாரதிராஜா ” நான் எனது படங்களில் நிஜமாக சொல்ல விரும்பிய விஷயங்களை எல்லாம் பூடகமாக – இடைப்பட்ட நிலையில் — ஒரு மாதிரி ‘வயா மீடியா’ வாகத்தான் சொல்லி இருக்கிறேன். காரணம் நிழல்கள் படத்துக்கு ஏற்பட்ட தோல்வி! அது மட்டும் வெற்றி பெற்று இருந்தால் என் பாதையே மாறி இருக்கும் . ஆனால் நான் செய்ய முடியாமல் போனதை இந்தப் படத்தில் பிரம்மா செய்திருக்கிறார் .
நான் பல சாதாரண முகங்களை எல்லாம் நடிக்க வைத்து இருக்கிறேன் . ஆனாலும் மேக்கப் போட்டு சில சினிமா விசயங்களை செய்து விடுவேன் . ஆனால் இந்தப் படத்தில் கேரக்டருக்கு பொருத்தமான முகங்களை எளிய முகங்களை புழுதியில் இருந்து கண்டு பிடித்து கொஞ்சமும் மேக்கப் போடாமல் இயல்பாக அந்தந்தக் கேரக்டர்களில் வாழ விட்டு .. அதில் இந்தப் படத்தின் இயக்குனர் பிரம்மா என்னையும் மிஞ்சி விட்டார் .
இந்தப் படத்தில் நடித்திருக்கும் புதுமுகம் ராதிகாவை நான் இந்தியாவின் மிகச் சிறந்த மூன்று நடிகைகளில் ஒருவராக சொல்வேன் . குற்றம் கடிதல் என்ற பெயர் முதற்கொண்டு, எதிலும் சமரசம் ஆகாத முழுமையான படம் இது ” என்றார் .
இப்படி ஒரு அற்புதமான குழுவை படத்தை இனங்கண்டு அதை தயாரித்த கிரிஸ் பிக்சர்ஸ் கிறிஸ்டி சிலுவப்பனை பாராட்டிய ஜெ எஸ் கே சதீஷ் குமார்
“அவார்டு படம் என்ற உடன் மெதுவாக நகர்கிற பொறுமை இழக்க செய்கிற படம் இது என்று யாரும் என்ன வேண்டாம் . பரபரப்பான விறுவிறுப்பான உணர்வுப் பூர்வமான படம் இது ” என்றார்.
உண்மை !