பேபி @ விமர்சனம்

baby 1
ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே.என்டர்டெய்னர்ஸ் சார்பில் செந்தில் மற்றும் யோகேஷ் தயாரிக்க, தி வைப்ரன்ட் மூவீஸ் சார்பில் வெங்கடேஷ் ராஜா வெளியிட, பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும்  சில பல புதுமுகங்கள் நடிக்க, இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக இருந்த டி.சுரேஷ் இயக்கி இருக்கும் படம் பேபி . இந்த பேபி எவ்வளவு அழகு ?

பார்க்கலாம்

சிவா(மனோஜ்) — சக்தி (ஷிரா) தம்பதிக்குப் பிறக்கும் முதல் குழந்தை இறந்தே பிறக்க, அதனால் மிகவும் மனம் உடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட  சக்தி  மறுபடியும் தாய்மை அடைகிறாள் . இந்தப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையும் உடல் நலக் குறைபாடு காரணமாக தீவிர சிகிச்சைக்குப் போக , கண் விழிக்கும் போது பக்கத்தில் குழந்தை இல்லை என்றால் சக்தி மறுபடியும் உடல்நல பாதிப்புக்கு உள்ளாவாள் என்று பயப்படுகிறான் சிவா .

அதே மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றும் ஆன்னி என்ற செவிலிக்கு (அஞ்சலி ராவ் ) திருமணம் ஆகி…. அவள்  கர்ப்பமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில்,  அவளது கணவன் விபத்தில் இறந்து போகிறான். சக்திக்கு குழந்தை பிறக்கும் அதே சமயம் ஆன்னிக்கும் குழந்தை பிறக்கிறது .

பிரசவ மயக்கத்தில் இருந்து கண் விழிக்கும் சக்தியின்  முன்பு ஏதாவது ஒரு குழந்தையைக் காட்டி , உடல்நல பாதிப்புகளில் இருந்து அவளைக்  காக்க எண்ணும் சிவா , மருத்துவரின் உதவியோடு ஆன்னியின் குழந்தையை கொண்டுபோய்  சக்தியிடம்  காட்டுகிறான் . அதே நேரம் ஆன்னி எதிர்பாராத வலிப்பு நோய் காரணமாக மரணம் அடைகிறாள் . சக்திக்குப் பிறந்த குழந்தையும் பிழைத்துக் கொள்கிறது .

“குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்ட ஆன்னியின் பிறந்த குழந்தையை,  எந்த சூழ்நிலையிலும் அனாதையாக விட்டு விடாதீர்கள்” என்று ஆன்னியின் தோழி கேட்டுக் கொண்டதற்கு இணங்க , ஆன்னியின் குழந்தையை ”நமக்கு பிறந்த குழந்தை” என்றும் சொந்தக் குழந்தையை ”ஆன்னியின் குழந்தை” என்றும் சக்தியிடம்  சொல்லி விடுகிறான் சிவா. ஒரு நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சக்தியும் சிவாவும் பிரியும்போது தனது ‘சொந்தக் குழந்தை’யை வளர்க்கவே சக்தி விரும்ப , உண்மையில் ஆன்னிக்கு பிறந்த குழந்தையான  அதிதி சக்தியோடு போய் சிறுமியாக வளர்ந்து (பேபி ஸ்ரீவர்ஷினி) சக்தியுடன் வசிக்கிறது . சிவா சக்தி தம்பதியின் சொந்தக் குழந்தை அவந்திகாவும் அதே வயசுக்கு வளர்ந்து (பேபி சாதன்யா) சிவாவுடன் வசிக்கிறது .

baby

இறந்து போன ஆன்னியின் ஆவி தன் மகள் அதிதி கண்ணுக்கு  மட்டும் தெரியும்படி நடந்து கொண்டு ,சக்தி  தன் மகளை  பாசமாக  வளர்ப்பதை பார்த்து மகிழ்கிறது . சக்தியின் கண்ணுக்கு அது தெரிவது இல்லை . ஒரு நிலையில் சக்தி சிவா தம்பதி மீண்டும் இணைகிறது . தன்னோடு வளரும் அதிதி  தன் சொந்த மகள் இல்லை என்பதும் அவந்திகாதான் தன் ரத்தத்தில் உதித்த மகள் என்பதும் சக்திக்கு தெரிய  வருகிறது . சிறுமிகளுக்கும் இது புரிகிறது.

அந்த நிலையிலும் சக்தி இரண்டு குழநதைகள் மீதும் அன்பை சமமாகக் காட்டினாலும் , ஆன்னிக்குப் பிறந்து சக்தியின் செல்ல மகளாக இதுவரை வளர்ந்த அதிதிக்கு, இப்போது சக்தியின்  பாசத்தை –சக்தியின் சொந்த மகளான – அவந்திகாவும் பங்கு போட்டுக் கொள்வதைத்  தாங்க முடியவில்லை.அவள் ஏங்குகிறாள்

 எனவே மீண்டும் தன் மகளுக்கு சக்தியின் முழு பாசத்தையும் பெற்றுத் தர முயலும் ஆன்னி , அதற்காக அவந்திகாவை பயமுறுத்தி வீட்டை விட்டே துரத்த முயல்கிறது . அடுத்த கட்டமாக சிவாவையும் மிரட்டுகிறது .

ஆன்னி பற்றி சிவாவும் அதிதியும் கூறுவதை நம்ப மறுக்கிறாள் சக்தி. வேறு வழியின்றி அவந்திகாவை காப்பாற்ற சக்தியை விட்டுவிட்டு  அவந்திகாவை அழைத்துக் கொண்டு முன்பு வசித்த வீட்டுக்கே போய்விடுகிறான் சிவா .

ஆனால் அங்கே  போன அவந்திகா?

அம்மா பாசத்தை அனுபவித்து விட்ட நிலையில் அம்மாவுக்கு ஏங்கி,  அவந்திகா கண்ணீர் வடிக்க , சொந்த மகள் இப்படி கண்ணீர்வடிப்பதை சிவாவால் தாங்க முடியவில்லை . எனவே அதிதியை எங்காவது அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டு , தன் சொந்த மகளை அவளது அம்மா சக்தியுடன் சேர்த்து வாழ வைக்க முயல்கிறான் சிவா .

அதன் ஒரு விளைவாக அவன் அதிதியை வெறுக்க , அதிதி மனம் வருந்த … தன் மகள் அதிதியின் வருத்தம் பார்த்து பேயாக இருக்கும் ஆன்னி என்ன செய்தாள்? அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த பேபி

ஐந்தே முக்கியக் கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு… ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பு, இரண்டு வீடுகள் , ஒரு லிஃப்ட், படிக்கட்டுகள் , மொட்டை மாடி, கொஞ்சம் மருத்துவமனை என்று நான்கைந்து இடங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு அழகான திகில் , ஹாரர் , செண்டிமெண்ட் நிறைந்த படத்தை கொடுத்து இருக்கும் சுரேஷுக்கு ஓர்அழுத்தமான கைகுலுக்கல் . குருநாதர் பேரை காப்பாற்றி விட்டார் சுரேஷ் .

கிராபிக்ஸ் இல்லை .. தேவையில்லாத அலறல் இல்லை , அருவருப்பான உருவங்கள் இல்லை , விதம் விதமாக  பேயோட்டும் அனைத்து மத பேயோட்டிகளும் இல்லை, தேவையில்லாத எந்த இடத்துக்கும் எந்தக் கதாபாத்திரமும் அசட்டுத்தனமாக போகவில்லை …

இது போன்ற அரைத்த மாவுகள் இல்லாமல்…. திடுக்கிட வைக்கிற , அதிர வைக்கிற, பரபரப்பாக ரசிக்க வைக்கிற , அதே நேரம் கனமான செண்டிமெண்ட் என்று பக்குவமான திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள் .

baby 4

இயக்குனரின் ஷாட் ஸ்டைலோடு சேர்ந்து மிக அழகாக பணியாற்றி இருக்கிறது ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு.
படத்துக்கு மிகப் பெரிய பலம் சதீஷ் ஹரிஷின் அட்டகாசமான — சிறப்பான — வித்தியாசமான — இதயத் துடிப்பை எகிற வைக்கிற இசை . ரஹமத்துல்லாவின் ஒலி வடிவமைப்பு, பீட்டரின் விசுவல் எஃபக்ட்ஸ், ஆகியவையும் பயத்தை ஏற்படுத்தி ரசிக்க வைப்பதில் பெரும் உதவி செய்கின்றன.
மீண்டும் மீண்டும் ஒரே இடங்கள் , ஒரே மாதிரியான  சூழல்கள் இருந்தாலும் பகத் சிங்கின் படத்தொகுப்பு அதை அலுப்பு ஏற்படாதபடிக்கு சிறப்பாக தொகுத்துத் தருகிறது . மனோஜ் , ஷிரா , அஞ்சலி ராவ் ஆகியோர் கொடுத்த பாத்திரத்துக்கு குறை  இல்லாமல் சிறப்பாக செய்து இருகிறார்கள் . எனினும் நடிப்பில் பின்னிப் பெடல் எடுப்பது  ‘அதிதி’ ஸ்ரீவர்ஷினியும் அவந்திகா சாதன்யாவும்தான் .

பேயைக் கண்டு பயப்படும் நடிப்பில் சாதன்யாவும், அம்மாவின் பாசம் பங்குபோடப்படுவதை ஏக்கத்துடன் பார்த்து பொறாமைப்படும் நடிப்பில் ஸ்ரீ வர்ஷினியும்……  சும்மா வீடுகட்டி விளையாடுகிறார்கள். சபாஷ் பேபீஸ். !

அம்மாவின் பாசம் சகோதரிக்கும் பங்கு போடப்படுவது நியாயம் என்ற உணர்வைதான்  ஒரு திரைப்படம் குழந்தைகளுக்குத் தர வேண்டுமே தவிர , அதைப்  பார்த்து அதிதி பொறாமைப்படுவதாக , கதை சொல்வது சரியா ? அதைப் பார்க்கும் பிள்ளைகள் அப்படி பொறாமைப் படுவதுதான் நியாயம் என்று நினைத்தால் அது தவறான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தாதா என்ற கேள்வியும் …..

அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தையின் செத்துப் போன பெற்றோர்களின் ஆவியால்கூட  சிக்கல் வரும் என்று கதை சொல்வதன் மூலம், ஒரு திரைப்படம் தத்தெடுப்புக்கு எதிராகப் பேசலாமா என்ற கேள்வியும் எழுவதுதான்….

இந்தப் படத்தின் பெரிய   குறைபாடு .

baby 2

தவிர இந்தக் கதைக்கு இவ்வளவு கனமான முடிவு நியாயமா என்றும் தோன்றினாலும் படம் முடிந்த பிறகு எல்லா கதாபாத்திரங்களும் மனதில் நிற்கவும் அந்த முடிவுதான் காரணம் ஆகிறது .

அவந்திகாவையும் சிவாவையும் மிரட்டும் ஆன்னி,   சக்தியின் கண்ணுக்கு தெரியாமலேயே இருக்க வேண்டும் . சிவா ஆவி பற்றி சொல்ல , பேய் நம்பிக்கை இல்லாத சக்தி அவன் சொல்வதை ஏற்கக் கூடாது . மீண்டும் தன்னையும் தான் பெற்ற மகள் அவந்திகாவையும் பிரிக்க,  சிவா இப்படி பொய் சொல்வதாகவே சக்தி   தொடர்ந்து நம்ப வேண்டும்.

ஒரு நிலையில் இது பெரிய பிரச்னையாக வளர . அதனால் ஆன்னியின் மகளான அதிதியின் சந்தோஷமும் பறிபோக வேண்டும் . அதைப் பார்த்து மனம் வருந்தும் ஆன்னி , தன மகளுக்கு மட்டும் சக்தியின் பாசம் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தால் இப்போது தனது மகளே பாதிக்கபடுவதைக் கண்டு….

இந்த வகையில் இந்தப் படத்தின் திரைக்கதை போயிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்

இப்படி சில ஏரியாக்களில் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும் சுவாரசியம் , வேகம் , திகில் , செண்டிமெண்ட் ஏரியாக்களில் கொடி நாட்டுகிறது படம்

பேபி …….  பார்க்கத் தூண்டும் குமரி .

மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————

சுரேஷ், ஸ்ரீ வர்ஷினி, சாதன்யா, சதீஷ் ஹரிஷ்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →