கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் எம் .சசிகுமார் வழங்க
எம் .சசிகுமார், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி , பாலா சிங் ஆகியோர் நடிப்பில்,
சோலை பிரகாஷ் இயக்கி இருக்கும் படம் ”பலே வெள்ளையத் தேவா” படம் தேவனா? அரக்கனா ? பார்க்கலாம்.
வயலூர் என்ற கிராமத்துக்கு பணி மாற்றலாகி வரும் ஒரு விதவைப் பெண்மணியான தபால் துறை அலுவலரின் (ரோகினி) மகனான சக்திவேல் ( சசி குமார்) படித்து முடித்த நிலையில் வேலைக்காகக் காத்து இருப்பவன் .
வயலூரில் வாழ்கிற — செல்ஃபோன் , ஃசெல்பி போன்ற நவீன தொழில் நுட்பங்களில் ஆர்வம் கொண்ட அறுபது வயது கடந்த காத்தாயி ( (கோவை சரளா) — கணக்கு (சங்கிலி முருகன் ) தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை .
சக்திவேல் அவர்களிடம் பாசம் கட்டுகிறான் .
ஊரில் கறிக்கடை வைத்து இருப்பவரின் (பாலாசிங்) மகள் (அறிமுகம் தன்யா) மீது சக்திவேலுக்கு காதல் வருகிறது .
அதே ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் நபர் (வளவன்) , தன்னிடம் கேபிள் கனெக்ஷன் வாங்காமல் யாரவது டிஷ் ஆன்ட்டனா வைத்தால் அவர்களை அடித்து உதைத்து,
தன்னிடம் கனெக்ஷன் வாங்க வைக்கும் அளவு மோசமானவன். ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் , பக்கத்து ஊர் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் அவனுக்கு சப்போர்ட்டு .
காதலியின் அப்பாவுக்கு சக்திவேலை பிடிக்கவில்லை .
தபால்காரம்மா தன் வீட்டில் டிஷ் ஆன்ட்டனா வைத்த விசயத்தில் அந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர் கோபப்பட்டு ,பெண் என்றும் பாராமல் கேவலப்படுத்த ,
தன் அம்மாவை அவமானப்படுத்தியவர்களை சக்திவேல் அடித்து துவம்சம் செய்ய , எல்லோரும் சக்திவேலுக்கு எதிராக திரள, அவனது காதலும் பாதிக்கப்பட, ஃசெல்பி காத்தாயி சக்திவேலுக்கு உதவ,
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த பலே வெள்ளையத் தேவா .
மேலே சொன்ன இந்த எளிய கதையைக் கூட படத்தில் அக்கறையாக சொல்லவில்லை என்பதுதான் பரிதாவம் .
டைட்டிலில் கோவை சரளா பெயரை முதலில் போட்டு அப்புறம் தன் பேரை போட்டுக் கொள்கிறார் சசிகுமார் . ( நெகிழ்வு சசி சார் )
அந்த அளவுக்கு படம் முழுக்க கோவை சரளாதான் அடித்துக் கலக்குகிறார் . ஆனால் அந்த அவரது வழக்கமான ஓவர் ஆக்டிங் ஸ்டைலில் சிரிப்பாகவும் சிறப்பாகவும் சில சீன்களே உள்ளன . பெரும்பகுதி சோதிக்கிறது .
தன்னை மலடி என்று சொல்லும் இடத்தில் கோவை சரளா அழுது புலம்புவது நல்ல நடிப்புதான். ஆனால் படம் சொல்லல வரும் அடிப்படை விசயத்துக்கு,
அதனால் எந்த பயனும் இல்லாத நிலையில் அதுவும் விழலுக்கு இறைத்த நீர்தான் .
சசி குமார் இதுவரை நடித்த படங்களில் வந்த அதே மாதிரியான காட்சிகளில் செய்த அதே மாதிரியான வேலைகளை செய்து அதே மாதிரி நடித்து அதே மாதிரி ஆடி அதே மாதிரி சிரித்து ,
அதே மாதிரி சந்து முனையில் கதாநாயகியை சந்தித்து ….
புதுமுகம் தன்யா நடிப்பு ஒகே . இயல்பில் அழகான பெண்ணாக இருக்கும் அவர் படத்தில் சில இடங்களில் ரொம்ப அழகாகவும் பல இடங்களில் ரொம்ப சுமாராகவும் இருக்கிறார் .
காரணம் அக்கறை இல்லாத கேமரா கோணங்கள் .
சங்கிலி முருகன் தனது கேரக்டரை மிக இயல்பாக அழகாக நடித்துள்ளார் .
தர்புக சிவா இசையில் கிடாரி படத்தில் வந்த ” வண்டியில நெல்லு வரும் ” பாடல் நிஜமாகவே மிக சிறப்பான பாடல்தான் . அதற்காக அதே மெட்டில் இந்தப் படத்தின் முதல் பாடலைப் போட்டு இருப்பதோடு
படத்தின் தீம் மியூசிக் ஆகவும் அதையே பயன்படுத்த வேண்டுமா என்ன ? மற்ற பாடல்களும் சுரத்தில்லை . வளரும் நிலையில் ஆரம்பத்திலேயே இவ்வளவு வறட்சியா தர்புக சிவா?
கதாநாயகி மகளிர் சுய உதவிக் குழு தலைவி என்று சொல்வது ரொம்பவே ஃபிரஷ்ஷான விஷயம் . ஆனால் அதை சும்மா கடமைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்
பொதுவாக சசிகுமார் படம் என்றால் முக்கியமான பெண் கதா பாத்திரங்கள் எல்லாமே கண்ணியமாக சித்தரிக்கப்படும் .
ஆனால் இந்தப் படத்தில் ஒரு ஒருவர் விடாமல் எல்லா பெண் கதாபாத்திரங்களுமே அசிங்கப் படுத்தப்படுகிறார்கள் .
கதாநாயகிக்குப் பதில் கதாநாயகியின் அம்மா ஸ்லோ மோஷனில் ஓடி வந்து நிற்பது போலவும் அவரை முத்தமிடப் போவது போலவும் கற்பனை செய்து பார்க்கிறார் சசி குமார் .
கதாநாயகியின் தோழி ஆறு பேரைக் காதலிக்கிறாள்.
கோவை சரளா என் கையில் மட்டும் அந்தக் காலத்தில் செல்போன் இருந்து இருந்தால் அஞ்சாறு பேரையாவது கரெக்ட் செய்து இருப்பேன் என்கிறார் .
தவிர போட்டோவில் இருந்து பேசும் கதாநாயகியின் அம்மாவும் அதை இன்னும் கேவலமாக சொல்கிறார் .
இது போதாதென்று கடைசியில் கதாநாயகியையும் சீட்டு போட்டு பணத்தை ஏமாற்றி விட்டு ஓடும் பெண் என்கிறார்கள் . கேட்டால் காமெடியாம் . அதில் காமெடியும் இல்லை என்பதுதான் அநியாயம் .
இப்படி ஒரு மோசமான கேபிள் டிவி ஆப்பரேட்டர் எந்த ஊரிலாவது இருப்பானா என்பது கூட , சரி.. அவர்கள் பண்ணிய கதை அது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அதற்காக படத்தில் மருந்துக்குக் கூடவா லாஜிக் இல்லாமல் செய்வது?
ஊரை விட்டு ஓடுவது என்பது கதாநாயகி குடும்பம் போடும் பிளான் எனில் , கதாநாயகியின் அம்மாவுக்கு நள்ளிரவில் போன் வருவது போல காட்சி வைப்பது யாருக்காக அல்லது எதற்காக ?
கதாநாயகி ஏமாற்றிய ஒரு கோடி ரூபாயை , போஸ்ட் உமன் வேலையில் இருக்கும் ரோகினி அடைக்கிறாராம் .
ஒருவேளை அவர் சேகர் ரெட்டிக்கு ஒண்ணு விட்ட அக்காவாகவோ அல்லது ரெண்டு விட்ட தங்கச்சியாகவோ இருப்பாரோ ?
மொத்தத்தில் ”பலே வெள்ளையத் தேவா” … பொல்லாத சொப்பனம் !