சில மாதங்களுக்கு முன்பு சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்தபோது ,
மக்கள் தாங்களே களம் இறங்கி தங்களையும் தம் போன்ற மற்றவர்களையும் காப்பாற்றிக் கொண்டார்கள்; காப்பாற்றினார்கள்
இயந்திர வாழ்க்கையில் இருந்து விலகி இதயங்கள் கண் விழித்தன. யார் யாரோ யார் யாருக்கோ உதவினார்கள். பத்துப் பதினைந்து வருடமாக பக்கத்து வீட்டில் இருப்பவர யார் என்றே தெரியாத மடமை மாறி ,
புதிய நட்புகள் பூத்தன.
மத்தியில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை உயர் அதிகாரி ஒருவர் “பாதிக்கப்பட்டவர்களை விட உதவி செய்யும் கரங்கள் அதிகம் உள்ள ஒரு ஊரை,
நான் இப்போதுதான் இந்தியாவிலேயே பார்க்கிறேன் ” என்று சென்னை மக்களை வியந்தார் .
இன்னும் நூறாண்டு ஆனாலும் இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரம் என்ற சிறப்பு சென்னைக்கே உரியது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது.
மனிதம் மகோன்னதமாய் உயர்ந்த அந்த அற்புதத்தைப் பாராட்டி கட்டுரைகள் கதைகள் செய்திகள் வீடியோக்கள் வந்து கொண்டு இருந்தன ,
அந்த வகையில் சென்னையை மீட்டெடுத்த தன்னார்வத் தொண்டு உள்ளங்களுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்யும் வகையில் சென்னையின் பெருமையை கொண்டாடும்படி,
நாமும் எதாவது செய்ய வேண்டும என்ற எண்ணம் நடிகர் விக்ரமுக்குத் தோன்ற , அது பற்றி அவர் ஒளிப்பதிவாளர் –இயக்குனர் விஜய் மில்டன் உட்பட சிலரோடு பலமுறை விவாதிக்க ,
அப்படி ஊருவானதுதான் ஸ்பிரிட் ஆஃப் சென்னை என்ற வெள்ள நிவாரண கீதம் .
கிரிநாத் என்பவர் இரண்டு மணி நேரத்தில் கம்போஸ் செய்து இசை அமைக்க, மதன் கார்க்கி, கானா பால , ராகேஷ் மூவரும் பாடல்கள் எழுத,
எஸ்.பி. பால சுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், அருணா சாய்ராம், ஹரிஹரன், மாணிக்க விநாயகம், எஸ் பி பி சரண் , கானா பாலா, அந்தோணி தாசன் , சின்மயி , தர்ஷனா, தேவ்நாத் பாஸ்கரா, , ஹரிசரண்,
காக்கா முட்டை ரமேஷ், கார்த்திக் , கோபால் ராவ், மரணகானா விஜி, நரேஷ் அய்யர், பார்த்திபன், சாக்ஷி ஸ்ரீ கோபாலன், ஸ்வேதா மோகன், சித்தார்த், சுசித்ரா, சுஜாதா, விஜய் கோபால் , விஜய் பிரகாஷ்,
இவர்களுடன் விக்ரம் மற்றும் அவரது வாரிசுகள் அக்ஷிதா விக்ரம் , துருவ் விக்ரம் , ஆகியோர் சேர்ந்து பாட,
அபிஷேக் பச்சன் விக்ரம், சூர்யா, சித்தார்த், பிரபுதேவா, ஜெயம் ரவி , கார்த்தி, சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ஜீவா, நயன்தாரா விக்ராந்த், விஷ்ணு அசோக் செல்வன் ,
நித்யா மேனன் , வரலக்ஷ்மி, நிவின் பாலி, பிரித்விராஜ், பரத், நரேன் , குஷ்பூ, சார்மி, காக்காமுட்டை ரமேஷ், யாஷ் மற்றும் பலர் நடிக்க
உருவாகி இருக்கும் இந்த கீதத்தை பட வடிவில் டைரக்ட் செய்து இருப்பவர் சீயான் விக்ரம் .
ஒளிப்பதிவு விஜய் மில்டன் , பாஸ்கரன் , ஓம் பிரகாஷ்
நடனம் ஸ்ரீதர் .
பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்ட அந்தப் பாடல் மிக உணர்வுப் பூர்வமாக நம் உள்ளங்களைக் கவர்கிறது.
இறுதியில் ” கார்கில் போர், பூகம்பம் , பெரு வெள்ளம் இப்படி ஏதாவது ஆபத்து வந்தால்தான் நாம் அன்போடு பழக வேண்டுமா? எப்போதும் அப்படியே இருக்கக் கூடாதா என்று ..
ஏக்கக் குரலில் விக்ரம் கேட்கும் கேள்வியில் முடிகிறது .
நிகழ்ச்சியில் பேசிய விக்ரம்
“எவ்வளவு பெரிய பாடகர்கள் , நடிக நடிகைகள்…. ! பாட்டில் அவர்களின் குரல் அல்லது முகம் சில நொடிகள் மாட்டும்தான் வரும் என்றாலும்,
நான் கேட்டபோது பேதம் பாராமல் ஒத்துழைப்புக் கொடுத்ததை மறக்க மாட்டேன் .
பாடலில் வெரைட்டி வேண்டும் என்பதற்காகத்தான் கார்க்கி, கானா பாலா , எனக்கு பிடித்த ‘டங்கா மாரி ஊதாரி’ பாடலை எழுதிய ராகேஷ் மூவரையும் எழுத வைத்தேன் .
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து கொடுத்ததோடு மட்டுமல்ல .. பல ஒளிப்பதிவு உபகரணங்களை அவர் செலவில் கொண்டு வந்தார் .
ஒரு நிலையில் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் மாதிரி ஆர்ட் அசிஸ்டன்ட் மாதிரி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார் .
‘சார்… நீங்க இதுக்கு கேமராமேன் ,, நீங்க இருங்க” என்றாலும் கேட்க மாட்டார் . ஸ்ரீதரும் அப்படியே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார் .
இவர்கள் எல்லோரும் தந்த ஒத்துழைப்புதான் இது இவ்வளவு சிறப்பாக வரக் காரணம் ” என்றார் .
விஜய் மில்டன் பேசும்போது
“இந்தப் பாடலுக்காக விக்ரம் சார் போட்ட உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவ்வளவு கஷ்டப்பட்டார் . ஒரு சாதாரண செருப்பைப் போட்டுக் கொண்டு மண்ணில் நடந்தார் .
அந்த செருப்பு கடித்து அவர் காலில் காயமாகி விட்டது . ஆனால் அது பற்றிக் கூட கவலைப்படாமல் ஓடி ஓடி வேலை செய்து இந்த பாடல் காட்சியை உருவாக்கினர் .
நான் அசிஸ்டன்ட் டைரக்டர் மாதிரி ஆர்ட் அசிஸ்டன்ட் மாதிரி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததாக கூறினார் .
அதைவிட அவர் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார் .
மிக அட்டகாசமாக மிகத் தெளிவாக சிறப்பாக இயக்கினார் விக்ரம் . அவர் திரைப்பட இயக்குனராக ஜொலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .
இன்னும் சொல்லப் போனால் இந்தியாவின் கிளின்ட் ஈஸ்ட்வுட் என்று கொண்டாடப்படும் அளவுக்கு அவர் உயர்வார் ” என்று பாராட்டினர் .
மேற்படி ஸ்பிரிட் ஆஃப் சென்னை வெள்ள நிவாரண கீதப் படம் தொடர்பாக விக்ரம் கொடுத்திருக்கும் அறிமுகக் கடிதத்தில்
‘உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள், எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு, தண்ணீர் உட்பட எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை.
சில இடங்களில் உயிரைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த மழை.
இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்தனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள்.
வெள்ளத்தினைத் தாண்டி,உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை அது ஈர்த்தது.
வெள்ளத்திற்கு எதிராக இறங்கி,என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள்.
சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது.
உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த
இயற்கைப் பேரிடர் தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.
எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய,அந்த ஆயிரக்கணக்கான நல்உள்ளங்களை என் கேள்விக்கு பதிலாக,நான் பார்த்தேன்.
மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது. என்னை நான் இன்னும்சற்று மெருகேற்றிக் கொள்ளக் காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
விக்ரம்
— என்று குறிப்பிட்டுள்ளார் .
சீரிய படைப்பு . வாழ்த்துகள் கென்னி !
