சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது @ விமர்சனம்

chennai 2
ஏ டி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வழங்க , காரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி மருதுபாண்டியன் இயக்கி இருக்கும் படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.  ரசிகர்கள் படத்தை வரவேற்பார்களா? பார்ப்போம் .

மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சியங்களோடு  சென்னைக்கு வந்து தங்கி போராடி வரும் உதவி இயக்குனர் ஒருவர் (பாபி சிம்ஹா), நடிப்பு ஆசை உள்ள சில இளைஞர்கள் , சினிமா ஆசை மட்டுமல்லாது பிழைப்புக்காக சென்னை வரும் நபர்கள்….

இவர்களில் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் , ஊரில் மனைவி குழந்தையை  விட்டு விட்டு சென்னையில் தனியாக வசிக்கும் நபர்கள் , இவர்கள் சரியான தங்கும் இடம் அமையாமல் கஷ்டப்படுவதை சொல்லும் கதை . ஒவ்வொருவருக்கும் உள்ள கிளைக் கதைகள்…. பிரச்னைகள்….. ஒன்றோடொன்று இணைந்தும் பிரிந்தும் வளர்வதே இந்தப் படம்.

இதில் படித்து வேலைக்கு செல்லும் ஒருவனின் அறையில் தங்குவதால் அவனது தவறுக்கெல்லாம் உடந்தையாகி கஷ்டப்படுகிறார்கள் சினிமா ஆசை கொண்ட இளைஞர்கள் . பெண்களை காமத்துக்கு பயன்படுத்துவது வழக்கமாக கொண்ட அந்த வசதியான  இளைஞன் விவாகரத்தான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு அவள் கர்ப்பம் ஆனதும் கை விடுகிறான்.

ஒரு குடிகார மனிதர் குடும்பத்தை ஊரில் விட்டு விட்டு பிழைப்புக்காக சென்னைக்கு வந்து அவமானங்களை சந்தித்து , சேர்த்த பணத்தோடு  ஊருக்குப் போகக் கிளம்பும்போது…

இப்படி சில கதைகள் ஒவ்வொன்றும் எப்படி முடிகிறது என்பதை சொல்கிறார் இயக்குனர் .

chennai 3

கேரக்டர்களுக்கான முகங்கள் மிகப் பொருத்தம்.

மிக இயல்பாக நடித்துள்ளார் பாபி சிம்ஹா .  பெண்களை  வீழ்த்தும் பாத்திரத்தில் அல்போன்ஸ் புத்திரன் நைஸ் . அவனிடம் ஏமாறும் பெண்ணாக நடித்து இருப்பவர் (சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங் என்றாலும் கூட ) நன்றாகவே நடித்துள்ளார் .

அல்போன்ஸ் புத்திரனை காட்டிக்  கொடுக்கும் நண்பனாக நடித்து இருப்பவரும் படம் முழுக்க அசத்துகிறார்.

நான்கைந்து பேர் ஒன்றாக தங்கும் பேச்சிலர் ரூமில் ஏற்படும் சண்டைகள், பிரச்னைகள், நட்புகள் , சமாதானங்கள் , சின்னச் சின்ன கால்வாரல்கள் ஆகியவற்றை சிறப்பாக காட்சிப் படுத்துகிறார் இயக்குனர். நாமும் அந்த அறையில் ஒரு நபராக இருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற பிரம்மை .

காட்சி அமைப்புகளில் யதார்த்தத்தின் கைகளை அழுத்தமாக பற்றும் இயக்குனர் , திரைக்கதையில் யாதார்த்தத்தை வெகுவாக கோட்டை விடுகிறார் . . பேச்சலர்களுக்கு வீடோ அறையோ கிடைப்பது ஒரு காலத்தில் ரொம்ப கஷ்டம் . இப்போ பணம் மட்டுமே விஷயம் . இன்னொரு பக்கம் நல்ல பையன்கள் என்றால் பேச்சலர்களுக்கு வீடு கிடைப்பது கடந்த இருபது வருடமாகவே பிரச்னையாக இருந்ததில்லை.

chennai 1

தவிர, இந்தப் படத்தில் வரும் பேச்சிலர்கள் குடித்து விட்டுக் கூத்தடிப்பார்கள். காமப் பெண்களை வீட்டுக்கு கொண்டு வருவார்கள். அடித்துக் கொள்வார்கள் . வீட்டு ஒனரையே மரியாதை இல்லாமல் பேசுவார்கள்.   ஓனர்கள் வீட்டை காலி பண்ணச் சொன்னால் , “பாருங்க .. நாங்க எல்லாம் எவ்வளவு பாவம்?” என்று படம் பார்க்கும் ரசிகனைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பார்கள். எந்த ஊரு நியாயம்ங்க இது ?

சென்னையில் எதோ வீடு கிடைப்பது மட்டுமே பெரிய பிரச்னை என்பது போல அதை மட்டுமே படம் முழுக்க சொல்லிக் கொண்டிருப்பது சலிப்பு . கால்பந்து மைதானத்தில் கோலிகுண்டா ஆடுவது ?

அம்மா சீரியஸ் என்று தந்தி வந்து ஊருக்குப் போகையில் , போன் செக்ஸ் காதலி நிஜ செக்சுக்கு அழைக்க,  அவளோடு போய் விடுகிறான் அந்த வசதியான இளைஞன். முகம் பார்க்காமலே அம்மா இறந்து போகிறார் . அதன் பின்னர் ஒரு பெண்ணை ஏமாற்றி அவளை கர்ப்பமாக்குகிறான். கடைசியில் அவனுக்கு வரும் மாற்றத்தில் அம்மா மரண சம்பவத்தை திரைக்கதையில் இணைக்க வேண்டாமா ? இப்படி எதுவும் இல்லாமல் உதிரி உதிரியாக நிற்கிறது கதைப் போக்கு.

அப்பாவிப் பெண்ணை அநியாயமாக ஏமாற்ற முயல்பவனை  காட்டிக் கொடுக்கிறான் சக நண்பன் . அந்த நண்பனே  பின்னர் ” நான் என்  நண்பனைக் காட்டிக் கொடுத்து துரோகம் பண்ணிட்டேன் . அவன்கிட்ட மன்னிப்புக் கேட்கணும் ” என்கிறான் . அதுவும் அவனிடம் போனால் மது கிடைக்கும் என்பதற்காக . கதாபாத்திரச் சீர்குலைவு . இது போன்ற மாற்றங்கள் ரசிகனுக்கு மனோ ரீதியாக அலைக்கழிப்பையே ஏற்படுத்தும் .

சிவாஜி பாடல்களின் பின்னணியில் உருவாகும் பாபி சிம்ஹாவின் காதலும் அது சொல்லப் படாமலே போகும் விதமும் அழகிய கவிதை .

எளிமை இந்தப் படத்தின் பலம். அதை அப்படியே மனசுக்குள் கொண்டு போகிறது வினோத் ராமசாமியின் ஒளிப்பதிவு .

சென்னை உங்களை ….. வரவேற்கிறது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →