தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க சிவ கார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா நடிப்பில் எதிர் நீச்சல் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் படம் காக்கிச் சட்டை . படத்தை வாங்கி இருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன், வரும் 27 ஆம் தேதி வெளியிடுகிறார் .
படப்பிடிப்பின்போது ரஜினி பாணியில் தனக்கு சில காட்சிகளை வைக்கச் சொல்லி சிவகார்த்திகேயன் வற்புறுத்தியதாகவும் அது பொருத்தமில்லாத நிலையில் அதற்கு இயக்குனர் மறுத்ததாகவும், தொடர்ந்து வற்புறுத்தல் வந்த நிலையில் இயக்குனர் , தனுஷிடம் புகார் செய்ய, தனுஷ் எடுத்து சொல்லியும் சிவகார்த்திகேயன் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது .
இதனால் சிவ கார்த்திகேயன் மீது தனுஷுக்கு மனத் தாங்கல் வர, தான் தயாரித்த படம் என்ற நிலையிலும், காக்கிச் சட்டை படம் தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் வராமல் புறக்கணித்தார் தனுஷ் .
இந்நிலையில் நேற்று காக்கிச் சட்டை படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் தனுஷ் வரவில்லை . (கதாநாயகி ஸ்ரீதிவ்யாவும் வரவில்லை என்பது வேறு விஷயம்)
பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த நிலையில் சிவ கார்த்திகேயன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளப் போக, அங்கிருந்த தனுஷ் சிவகார்த்திகேயனைப் பார்த்ததும் எழுந்து வெளியே போய்விட்டார். பின்னர் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மீண்டும் வந்த தனுஷ், சிவகார்த்திகேயனை கட்டிப்பிடிக்க, கிசுகிசு கொஞ்சம் நீர்த்துப் போனது .
அதே நேரம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மைக்கை பிடித்த சிவகார்த்திகேயன் எடுத்த எடுப்பிலேயே தானாகவே “எனக்கும் தனுஷ் சாருக்கும் பிரச்சனைன்னு எழுதுறாங்க. எந்த பிரச்சனையும் இல்லை. இந்த படத்தை ஆரம்பிச்சதிலிருந்தே அவர் எதிலும் தலையிடுறதில்ல . நீங்க நல்லாதான் செய்வீங்க. உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க பார்த்துக்கங்கனு சொல்லிட்டார். படம் சம்மந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கும் அவர் வராததற்கும் இதான் காரணம்” என்றார் .
சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் அதிகாரியாக இருந்து மறைந்தவர் . இப்போது இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேஷம் கட்டுகிறார் . ”செண்டிமெண்டாக எப்படி இருந்தது?’ என்று கேட்டால் “அப்பாவுக்கு என்னை ஐபிஎஸ் படிக்க வைக்கணும்னு ஆசை. முடியாம போச்சு. அவர் மறைவுக்கு பிறகு நானும் ரூட் மாறி சினிமாவுக்கு வந்துட்டேன். போலீசா நடிக்கப் போறத நினைச்சப்ப அப்பா நினைவு ரொம்ப ஆக்கிரமிச்சது.
போலீஸ் டிரஸ்சை போடும்போது என்னையறியாமல் அந்த கம்பீரம் வந்துச்சு. அந்த டிரஸ்சோட நான் எடுத்துகிட்ட ஸ்டில்களை அம்மா பார்த்துட்டு . ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. படத்தைப் பார்க்க ரொம்ப ஆவலா காத்து இருக்காங்க “என்றார்.
படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் பேசும்போது “இது ஏதோ போலீஸ் படம்னு மட்டும் நினைக்க வேணாம். காமெடி லவ் எல்லாம் இருக்கு . நம்பிக்கையோடு உழைத்தால் எதையும் அடையலாம்னு சொல்லி இருக்கோம் ” என்றார் . (அப்படித்தானே உழைச்சீங்க?)
சரி போலீஸ் அதிகாரி சிவ கார்த்திகேயன் எப்படி இருக்கிறார் .
ஸ்டில்களில் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் . கேரக்டருக்கு பொருத்தமாக அவரை வார்த்திருக்கிறார் இயக்குனர் .
இனி படம் பார்த்துட்டு பேசுவோம் .