
மெலடி மூவீஸ் சார்பில் வி ஜி எஸ் நரேந்திரன் தயாரிக்க, நெடுஞ்சாலை ஆரி, குமாரவேல், கர்ணா , சாண்ட்ரா ஆகியோர் நடிக்க, பி என்சன் இசையில் குகன் சம்பந்தம் இயக்கி இருக்கும் படம் தரணி .
படம் இந்த தரணிக்கு என்ன சொல்ல வருகிறது ? பார்க்கலாம் .
சுய தொழில் செய்வதற்காக கந்து வட்டிக்காரனிடம் கடன் வாங்கி விட்டு வியாபாரமும் விருத்தி ஆகாமல் கந்து வட்டிக்காரனின் கொடுமைகளையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் ஆரி
கூத்து கட்டி ஆடும் தஞ்சாவூர் மண்ணின் எளிய கலைஞன் ஒருவனுக்கு மகனாக பிறந்து, நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து, ஹீரோவாக முடியாமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபடி நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கும் பாத்திரத்தில் குமாரவேல் .
வேலை கிடைக்காத நிலையில் வீணாப் போன பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து , ”ரெண்டே வருடத்தில் கோடீஸ்வரனாகி காரும் பங்களாவும் வாங்கலாம்” என்ற கனவு போதை மருந்து போல திணிக்கப்பட்டு , “இந்த புத்தகத்தை வாங்கிக்க முடியுமா சார் ?” என்று பசி தாகம் பரிதாபத்தோடு ரோட்டில் வருவோர் போவோரை கெஞ்சும் பாத்திரத்தில் கருணா .
யதார்த்தம் மூவரையும் அடித்து துவைக்கிறது . ஒரு நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் குமாரவேல் சொந்த ஊருக்கு போய் மாமாவின் கூத்துக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சொல்லி கெஞ்சுகிறார் . அப்படியே அமைகிறது . மாமன் மகளின் காதலும் கிடைக்கிறது .
கந்து வட்டிக்காரனின் கொடுமை பொறுக்க முடியாமல் அவனை அடித்து உதைத்து விடுகிறார் ஆரி . விளைவாக அந்தக் கந்து வட்டிக்காரனின் இடத்துக்கு வந்து அவனை விட அதிகமாக கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறார்
ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பல அப்பாவி மக்களை ஏமாற்றும் ஒருவனுடன் சேர்ந்து அந்த ஏமாற்று வேலையை தீவிரமாக செய்கிறார் கர்ணா . புறம்போக்கு நிலத்தை வளைத்து திட்டமிட்டு ஏமாற்றி அப்பாவி மக்களுக்கு விற்று பெரும் மோசடியை செய்கிறார் .
இந்த மூவரின் வாழ்கையும் கடைசியில் என ஆனது என்பதே தரணி .
ஆரம்பத்திலேயே நல்ல வழிக்கு போனவனுக்கு என்ன நடக்கிறது என்பதையும் , ஒரு நிலையில் உணர்ந்து திருந்துபவனுக்கு என்ன கிடைக்கிறது என்பதையும் காட்டி விட்டு , ஒருவன் தொடர்ந்து அயோக்கியனாக இருப்பதோடு படத்தை முடித்து அவனுக்கு இன்னும் என்ன இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பும் வகையில் ….கவனம் கவர்கிறார் இயக்குனர் குகன் சம்பந்தம்
கூத்துக் கலையை நிஜமான அந்த கலைஞர்களையும் அந்த கிராமத்து வாழ்க்கைப் பின்னணியை நிஜமான அந்த கிராமத்து மனிதர்களை வைத்தும் படமாக்கிய விதமும் இயக்குனருக்கு ஜே போட சொல்கிறது .
நேர்மையான மென்மையான இளைஞன், பிறகு கரடு முரடான கொலை குத்து தாதா என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் அழுத்தமான வித்தியாசம் காட்டி அழகாக நடித்து இருக்கிறார் ஆரி. சபாஷ் .
குமாரவேலும் அப்படியே . அதிலும் கூத்துக் கட்டி ஆடும் காட்சிகளில் அவரும் அவரது தாய்மாமனாக வரும் அந்த நிஜமான கூத்துக் கலைஞரும் மனம் கவர்கிறார்கள் .
கர்ணாவின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது எனினும் பணக்காரராக ஆன பிறகு காட்சிகளில் ரொம்ப கேஷுவலாக ஆகிவிட்டார் . இன்னும் கொஞ்சம் கேரக்டரை உணர்ந்து செய்திருக்கலாம் .
சாண்ட்ரா …. ஜஸ்ட் ஒகே மற்றும் ஜஸ்ட் மிஸ் .
என்சனின் பின்னணி இசை மென்மை . ஆனால் ரிப்பிட்டேஷன்கள் அதிகம் .
பாரதி ராஜாவின் நிழல்கள் படத்தை ஞாபகப் படுத்தும் அளவுக்கு யதார்த்தமான முதல் பாதியும் அதை இயக்குனர் சடாரென்று ஆக்ஷனை நோக்கி திருப்பும் விதமும் பாராட்டுகுரியது.
தாசில்தாரை ஆற்று மணலில் குத்திக் கொள்ளப் போகும்போது ஆருக்கு ஏற்படும் மனோநிலை மாற்றம் பாராட்டுக்குரிய டைரக்டோரியல் டச் !
தரணி… பாராட்டு