அதிகாரத்தின் அலட்சியத்தால் பேரிடர் ஆக்கப்பட்ட பெருமழைக் காலத்தில் வந்த படங்களில் வெற்றிக் கோட்டை நெருங்கிய படம் ஈட்டி . அதையொட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் படத்துக்கு அதர்வா கொடுத்த உழைப்பைப் பாராட்டினார்கள் . மிக நியாயமான பாராட்டு அது . நாம் விமர்சனத்தில் எழுதியது போல , மறைந்த திரு. முரளி இப்போது உயிரோடிருந்திருந்தால் , ஒரு கேரக்டருக்கு மகன் எப்படி உழைக்கிறான் என்று பார்த்து பெருமைப்பட்டிருப்பார் .
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு பேசும்போது ” படத்தில் எனது பணியை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இயக்குனர் ரவி அரசுவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சாரும்தான் . நான் என்ன எக்யூப்மென்ட் கேட்டாலும் உடனே தயங்காமல் ரவி அரசு , மைக்கேல் ராயப்பனிடம் சொல்லுவார் . அவர் கொடுப்பார் ” என்றார் .
படத்தை வாங்கி வெளியிட்ட காஸ்மாஸ் சிவகுமார் பேசும்போது ” படத்தைப் பார்த்த உடனே இது வெற்றிப் படம் என்று புரிந்தது. எப்படி, நான் வாங்கி வெளியிட்ட நாய்கள் ஜாக்கிரதை , ரோமியோ ஜூலியட் ஆகிய படங்கள் வெற்றி பெற்றதோ, ‘அப்படி இதுவும் வெற்றி பெறும்’ என்று தோன்றியது . வாங்கி வெளியிட்டேன் .” என்றார் .
” இந்தப் படத்துக்காக நானும் என் உதவியாளர்களும் நான்கு வருடங்கள் உழைத்தோம் . எங்களை நம்பி எல்லா உதவிகளும் செய்து கொடுத்தார் . தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் . அதர்வா நம்பி தன்னைக் கொடுத்தார் . அதனால் நம்பிக்கையாக படம் உருவாக்க முடிந்தது ” என்றார் இயக்குனர் ரவி அரசு .
மனம் நெகிழ்ந்து பேசிய அதர்வா ” இந்த நாளுக்காக நான் காத்திருந்தேன். அதாவது ஒரு சக்சஸ் மீட்டில் உங்களை சந்திக்க ! ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சோம. படம் ரிலீசுக்கு ரெடி ஆன போது, டிசம்பர் நாலாம் தேதி ரிலீஸ் பண்ணுவோம்னு முடிவு பண்ணோம் .
ஒண்ணாம் தேதி அடிச்ச மழை எல்லாத்தையும் மாத்திருச்சி . நானும் இயக்குனரும் ரொம்ப வருத்தத்துக்கு ஆளானோம் . மக்கள் பெருத்த சோகத்தில் இருக்கும்போது, ‘பதினொன்னாம் தேதி ரிலீஸ் பண்றது கூட சரி வருமா?’ன்னு தோணுச்சு .
அப்போதான் ” மக்கள் ரொம்ப சோகத்தில் இருக்கும் நேரமிது. அவங்களுக்கு ஒரு மன மாற்றம் தேவைப்படுது . சந்தோசம் தேவைப்படுது . மக்களை சந்தோஷப்படுத்தறதுதான் சினிமாக்காரனோட வேலை. அதை நாம செய்வோம்’ அப்படின்னு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் வாங்கி வெளியிடும் சிவகுமார் சாரும் முடிவு பண்ணாங்க . அது நல்ல முடிவா இருந்தது . அதனால படத்தின் வெற்றிக்கு அவங்களே காரணம் ” என்றார் ,
இறுதியாகப் பேசிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
” நாடோடிகள் படத்துக்கு அப்புறம் நானும் ஒரு வெற்றிக்காக காத்திருந்தேன் . தன்னுடைய கேரியரில் ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக அதர்வாவும் காத்திருந்தார். ரெண்டு பெரும் ஈட்டியில் வெற்றி பெற்றோம் .
எப்படி நாடோடிகள் படத்தின் கதையை சமுத்திரக்கனி சொல்லும்போது நுணுக்கமா விவரமா சொன்னாரோ, அதே மாதிரி ஈட்டி படத்தின் கதையை ரவி அரசு சொன்னார் . அப்போதே எனக்கு நம்பிக்கை வந்தது . அந்த நம்பிக்கையும் எல்லோரின் உழைப்பும் இந்த வெற்றியைக் கொடுத்தது ” என்றார் .