அவ்னி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்க, வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா , வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , ஆகியோர் நடிக்க, நாளைய இயக்குனர் ஐந்தாம் சீசனில் பரிசு வென்ற பாஸ்கர், இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. படத்துக்கு இசை சித்தார்த் விபின்
படத்தின் பாடல்களை மூத்த பத்திரிக்கையாளர் தேவி மணி வெளியிட சுந்தர் சி மற்றும் படக் குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்
விழாவில் நடிகர் வைபவ் பேசிய போது , ” கப்பல் என்ற படத்தில் என் நடிப்பு பிடித்துப் போய் குஷ்பூ மேடம்தான் என்னை சுந்தர் சி சாரிடம் சிபாரிசு செய்தார் .குஷ்பூ அவர்களுக்கு நன்றி. படத்தில் என்னுடன் ஐஸ்வர்யா , ஓவியா என்று இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவரும் பேய்களாக நடித்துள்ளனர் , அதுவும் அழகான பேய்களாக நடித்துள்ளனர்”
என்றார் நடிகர் வைபவ்.. (கடைசி வாக்கியம் சொல்லலன்னா ரெண்டு பேருமே நிஜ பேயாக மாறி இருப்பாங்க வைபவ்)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “இப்போது வாராவாரம் எக்கச்சக்க பேய்ப் படங்கள் வருது. ஆனால் இந்த படம் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. படத்தின் இடைவேளைக்குப் பிறகுதான் பேய் வரும்.
இது ஒரு கை பேசி பேய் கதை என்று கூட சொல்லலாம். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது இடைவேளைவரை பேய் வரவேயில்லை. முதல் பாதி முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையிலும் இரண்டாம் பாதி முழுவதும் நம்மை மிரட்டும் வகையிலும் இப்படம் இருக்கும்.
நான் இந்த படத்தில் முழு எனர்ஜியுடன் ஒரு சாவுக் குத்து பாடல் ஒன்றில் ஆடியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் அது பிடிக்கும்.” என்றார்
நடிகை ஓவியா பேசுகையில்
“நான் இந்த படத்தில் முதன் முதலாக பேய் வேடத்தில் நடிக்கிறேன். வைபவ் கூறியதுபோல் அழகான பேயாக வருகிறேன்.(நான் சொல்லல?) படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நம்மை சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சிஅவர்களுக்கும், இயக்குனர் பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி” என்றார்.
வி.டி.வி.கணேஷ் பேசும்போது
”நான் பல்வேறு பேய்ப் படங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போதுதான் முதல் முதலாக ஒரு பேய் படத்தில் நடிக்கிறேன். இது உங்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படமாக இருக்கும் ”என்றார்.
“இதுவரை நான் எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதல் தடவையாக இசை வெளியிட்டு விழா மேடையில் ஏறி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சிஅவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.நடிகர் யோகிபாபு
படத்தின் இயக்குனர் பாஸ்கர் தன் பேச்சில் ” பிப்ரவரி இருபதாம் தேதி என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றே சொல்லவேண்டும் , இந்த நாளில் தான் நான் இயக்குநரிடம் கதையை கூறினேன். முதல் பாதியை கேட்ட இயக்குநர் என்னை இயக்கச் சொன்னார்.
அப்படி என்னிடம் சொன்ன பிறகுதான் மீதி கதையையே கேட்டார். இயக்குநர் சுந்தர் சி அவர்களிடம் கதை கூறிய பிறகுதான் என்னுடைய வாழ்க்கையே மாறியது என்று கூறலாம். என்னுடைய குழந்தைக்கு நான் அவருடைய பெயரைதான் வைத்துள்ளேன். என்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்ததும் அவர்தான்” என்றார்
படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சுந்தர்.சி பேசிய போது , “இயக்குநர் பாஸ்கரை எனக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில்தான் தெரியும். அவர் எடுக்கும் நகைச்சுவை குறும்படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒரு நாள் போன் செய்து கதை சொல்ல வேண்டும் என்றார். வந்தவர் அமெரிக்க சயின்டிஸ்ட் என்று ஒரு கதை சொன்னார் .
‘உங்க குறும்படங்களில் உள்ள காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் .எனவே அப்படி ஒரு கதை சொல்லுங்க ‘ என்று கேட்டேன் . ஒரு கரு சொன்னார் . டெவலப் செய்து கொண்டு வர சொன்னேன் . பத்து நாள் சொன்னேன். அவர் மூன்றே நாளில் வந்தார். ஆரம்பித்து விட்டோம். படம் நன்றாக வந்துள்ளது , மக்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் ” என்றார் .
படம் பேசப் படட்டும்.