இவ்விழாவின் மூலம் வேருக்கு மரியாதை செய்யும் விழுதுகளுக்கு நன்றி.
தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரும் தனக்கென தனியான சரித்திரம் படைத்தவர்கள். அவர்களுக்குச் சற்றும் குறையாமல் சரித்திரம் படைத்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்
.அவரது தாத்தா காலத்திலேயே வசதியான குடும்பம். அவரது தாத்தா சென்னையில் நாலுகிரவுண்ட் இடத்தில் வீடு வைத்திருந்தவர். .
பிலிம் நியூஸ் ஆனந்தன் 90 வயது நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்.அவரது அஞ்சலி நிகழ்ச்சியில் துக்கமோ வருத்தமோ படத் தேவையில்லை. ஏனென்றால் அவர் பூரணமான வாழ்க்கை வாழ்ந்தவர்.
அவர் போல வாழும் வாய்ப்பு இனி எவருக்கும் கிடைக்காது. அவர் போல வாழவும் முடியாது.
அவரது நண்பர் தேவராஜ் நடத்திய ‘பிலிம் நியூஸ்’ பத்திரிகைக்கு போட்டோகிராபராக இருந்தார். அது முதல் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்றாகி விட்டார் .முதல் படம் ‘காளிதாஸ்’ 1931 அக்டோபர் 31ல் வந்தது.
அந்தப் படம் முதல் 7000 படங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்து இருந்தார் பிலிம் நியூஸ் ஆனந்தன் . இரவு 12 மணிக்கு போன் செய்தால்கூட தகவல் தருவார்,
அலுக்க மாட்டார். கோபமே வராது. சாந்தசொரூபி.
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மென்மையான மனிதர்.. யாரையும் அதட்டிகூட பேச மாட்டார். தனக்கான ஊதியத்தைக்கூடகேட்க மாட்டார்.
என் முதல் படம் முதல் என்னைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து உதவி வந்தவர். இப்போது உள்ளவர்கள் போல நான் சம்பாதிக்கவில்லை. என் 125 வது படம் வந்த போதுதான் நான் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன்.
அப்போது ஒவ்வொரு படத்தின் போதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க எனக்கு ஆனந்தன்தான் உதவினார். 1979-ல் என் நூறாவது படம் வந்தபோது,
அந்த நூறு படங்களையும் தயாரித்த தயாரிப்பளர்களை வரவழைத்து அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் கையால் அவர்களுக்கு ஷீல்டு கொடுக்க வைத்தேன் . அந்த யோசனையை சொன்னவரே ஆனந்தன்தான்.
1974ல் எனக்குத் திருமணம் ஆனது. இங்கிருந்து எல்லா பத்திரிகையாளர்களையும் கோயமுத்தூர் அழைத்து வந்து சிறப்பு செய்தவர் அவர்.
1980 முதல் ப்ளஸ்டூவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறேன். இதற்குப் பின்னணியில் இருந்தது அவர்தான்.
எனக்கு மட்டுமல்லாமல் என்னுடைய மகன்கள் நடிக்க வந்தபோது துவக்கக் காலத்தில் அவருடைய ஆசிர்வாத்த்தை பெற்றுத்தான் திரையுலகத்திற்குள்ளேயே நுழைந்தார்கள்.
அவரைப் போன்ற மனிதர் இனி இந்த திரையுலகில் இருக்கப் போவதில்லை. சினிமாவுலகத்திற்காக இனிமேல் யார் இந்த்த் தகவல் களஞ்சிய வேலையை செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
அந்த இடம் இப்போது வரையிலும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது.
அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றெல்லாம் சொல்வதைவிட அவர் போல பல பிலிம் நியூஸ் ஆனந்தன்கள் உருவாக வேண்டும் என்று சொல்லலாம்.
ஏனென்றால் அதுவே அவருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்.” என்றார்.
நடிகர் ராஜேஷ் “ஒரு தந்தைக்கு தனக்குப் பிறகு நல்லவை எல்லாம் தொடர்ந்து செய்யும் ஒரு மகன் தேவை . அப்படிப்பட்டவராக டைமண்ட் பாபு இருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் மிக உயர்ந்த மனிதர் .
அரசு செய்ய வேண்டிய பணிகளை ஒரு தனிமனிதராகச் செய்தவர்” என்றார் .
நடிகர் எஸ்.வி.சேகர் ” பிலிம் நியூஸ் ஆனந்தன் தன் பணியை விரும்பிச் செய்தார். விருப்பமுடன் சுமந்தால் இரும்பு கூட கரும்பு மாதிரி இருக்கும் என்று நிரூபித்தவர்.
தந்தை விரும்பியதை மகன் டைமண்ட் பாபு நிறைவேற்ற வேண்டும் .மற்றவர்கள் பற்றிக் கவலைப்படக்கூடாது” என்றார்
நடிகை குட்டிபத்மினி “வெளிநாட்டிலிருந்து அதிபர்கள், மன்னர்கள் வரும் போதெல்லாம் என்னை குழந்தையாக நின்று பூங்கொத்து கொடுக்க வைத்தவர் மாமாபிலிம் நியூஸ் ஆனந்தன்.
அவர் பூரணமான வாழ்க்கை வாழ்ந்தவர்” என்றார் .
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி “சினிமா பற்றி எனக்குத் தெரிந்தது எல்லாம் அவர் மூலம் தெரிந்ததுதான் .இயக்குநர் சங்கத்துக்காக ,
நாங்கள் 3 மாதம் தேடிய போது கிடைக்காத தகவல்களை அவர் ஒருவர் மட்டுமே தந்தார்.
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் ஐயா பெயரில் திரைப்பட கண்காட்சி அமைப்பதுடன், அவருடைய திருவுருவச் சிலையையும் பிலிம் சேம்பர் வளாகத்தில் அமைத்தாக வேண்டும்” என்றார்
ஜாகுவார் தங்கம் “இவருக்கு உரிய பெருமை இன்னும் கிடைக்க வில்லை.இவரது தபால்தலை வெளியிட எங்கள் சங்கமான கில்டு சார்பில் முயற்சி செய்வோம்.” என்றார்
இயக்குநர் பேரரசு “படைப்பாளிகளின் சாதனைகளின் பின்னால் தான் புகழடைய வேண்டும். என்கிற அவர்களது சுயநலம் இருக்கும்.
ஆனால் இவரது சாதனையின் பின்னே முழுக்க முழுக்க இவரது பெருந்தன்மைதான் இருக்கிறது. இவருக்கு சரியான நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்.”என்றார்
தயாரிப்பாளர் கே.ராஜன் “பிலிம் நியூஸ் ஆனந்தன் அண்ணா அவர்கள், ‘திரைப்பட வரலாறு’ நூல் வெளியிட்ட போது யாரும் வாங்க முன்வரவில்லை. நன்றி கெட்ட திரையுலகம் இது .
அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டத்தில் இதற்காக எல்லாரையும் நான் திட்டினேன் ” என்றார்
எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்:” பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுடன் எழுத்தாளர் சுஜாதா அவர்களைச் சந்திக்க வைத்தோம்.
பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அமுதசுரபி பத்திரிகையில் வெளியிட்டோம். அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவரது வாழ்க்கையை ஆவணப்படமாகத் தயாரிக்க வேண்டும்” என்றார் .
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்,
“ஐயா ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மட்டும் இல்லையென்றால் இந்த்த் தமிழ்ச் சினிமாவின் சரித்திரமே இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது.
அவர்தான் ஊமை படங்களில் துவங்கி, முதல் பேசும்படத்தில் ஆரம்பித்து இப்போதுவரையிலும் அனைத்து படங்களின் தகவல்களையும் திரட்டி அனைத்தையும் ஒரு கலைப் பொக்கிஷமாக சேர்த்து வைத்தவர்.
அவருடைய சேகரிப்புகள், படைப்புகள் எல்லாம் இப்போது எங்கோ ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் வெளியில் எடுத்து ஒரு கண்காட்சிபோல் அமைக்க வேண்டும்.
அதனை இப்போது கட்டி வரும் பிலிம் சேம்பர் வளாகத்திலேயே அமைக்க வேண்டும்.
இதற்கான முயற்சிகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், பிலிம் சேம்பரும் இணைந்து செய்ய வேண்டும்..
அந்த மகத்தான மனிதரின் செயல்கள் யாருக்குமே தெரியாமல் போய்விடக் கூடாது..” என்றார்
நிகழ்ச்சியில் மேலும் நடிகர்கள் மன்சூரலிகான், ராகவா லாரன்ஸ்,பூவிலங்கு மோகன், பாடகர் கானாபாலா, தயாரிப்பாளர்கள் கதிரேசன்,எச் முரளி, ‘பெப்ஸி’ செல்வராஜ்,
இயக்குநர் சக்தி சிதம்பரம், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் ,கவிஞர்கள் சொற்கோ, கிருதியா, பத்திரிகையாளர் நெல்லைபாரதி ,
தென்னிந்திய திரைப்படப் பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் செயலாளர் பெரு. துளசி பழனிவேல் ,தலைவர் விஜயமுரளி ,
கௌரவத் தலைவர் நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனின் மனைவி, மகன் பத்திரிகை தொடர்பாளர் டைமண்ட்பாபு உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
புகழஞ்சலி செலுத்துவதற்கு முன் வந்திருந்த பத்திரிகை தொடர்பாளர்கள்,பத்திரிகை ஊடகத்துறையினர் பிலிம்நியூஸ் ஆனந்தன் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர் .
முன்னதாக பிரசாத் ஆர்க்கெஸ்ட்ராவின் இசையஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தது.