பெரும்பாலும் படத்தில் நடிக்கும் நாயகன் நாயகியர் , நடிக்க வந்த பிறகு கஇருவர் ஒன்றாகி படம் எடுத்து முடிக்கும் முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ , திருமணம் செய்து கொள்வதுண்டு. இப்படித்தான் பாக்யராஜ்- பூர்ணிமா,பார்த்திபன் -சீதா, ,செல்வமணி -ரோஜா, சூர்யா- ஜோதிகா போன்ற ஜோடிகள் உருவானார்கள்.
ஆனால்’இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்திருக்கும் ஹீரோ நடிகர் பி.ஆர்.பிரபுவும், ஹீரோயின் கிருத்திகா மாலினியும் ஆறு வருடம் காதலித்த நிலையில் படத்திலும் ஜோடியாக நடிக்க வந்தவர்கள்.
இதுபற்றிக் கூறும்பி.ஆர்.பிரபு ” எனக்கு சொந்த ஊர் சேலம்..வீட்டுக்கு ஒரே பையன் நான். அப்பா அட்வகேட். நான் சென்னையில் இந்துஸ்தான் கல்லூரியில் பி.இ.முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தேன்.
படித்ததெல்லாம் குடும்பத்தினர் திருப்திக்காக மட்டுமே. எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. நண்பர்கள் தொடர்பில் பல படப்பிடிப்புகள் சென்று ஒரு உதவி இயக்குநர் போல இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்ததுண்டு.
இப்படி ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் பல படங்களில் வேலை பார்த்தபோதுதான் இந்த இருவர் ஒன்றானால் படத்தின் தயாரிப்பாளர் சம்பத்குமார், இயக்குனர் அன்பு. பழக்கமானார்கள். அவர்கள் படமெடுக்க முடிவு செய்தபோது நான் நடிப்பது என்றானது. ஒரு கதாநாயகி தேடிய போது, நான் கிருத்திகா மாலினியைப் பற்றிக் கூறினேன்.நேரில் பார்த்துவிட்டு தேர்வு செய்தார்கள்.
நான் சினிமாவுக்கு வருவது என்று முடிவெடுத்த போது அதற்காக டான்ஸ் கற்றுக் கொண்டேன். அப்போது கிருத்திகா மாலினி அங்கு வருவார். இருவருக்கும் பழக்கமானது. ஒரு கட்டத்தில் இருவரிடையேயும் உள்ளது வெறும் நட்பு அல்ல. ‘அதுக்கும் மேல’ என்று புரிந்து, ஐலவ் யூ சொல்லிக் கொண்டோம்.
இப்படி காதலித்து ஆறு ஆண்டுகள் ஆன பின்புதான் சினிமாவில் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்தோம்.
திருமணத்துக்கு இருவர் வீட்டு சம்மதமும் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்ததும் காதலர் தினத்தின் மறுநாள் அதாவது 15.2.2015ல் சேலத்தில் திருமணம் நடந்தது. 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடந்தது.
இருவர் ஒன்றானால்’ படத்தில் வருவது போல கிருத்திகாவுக்கு முன்பே என்னை சில பேர் விரும்பினார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டேன். இன்றும் அவர்கள் என் நண்பர்கள்தான்.” என்கிறார்.(அவங்களும் இந்தப் படத்தில் நடிச்சு இருக்காங்களா தம்பி?)
”ஆரம்பத்தில் எங்கள் காதலுக்கு வீட்டில் சம்மதிக்க வில்லை. சினிமாவில் நடிப்பதற்கும் சம்மதிக்க வில்லை. படத்தில் கவர்ச்சி, கட்டிப்பிடிக்கிற காட்சி எல்லாம் கூட இல்லை என்று கூறினோம்.’இருவர் ஒன்றானால்’படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் என்றதும் சம்மதித்தார்கள்.
நான் விஸ்காம் படித்துள்ளேன். விஜய் டிவியில் கூட உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளேன். நான் விளம்பரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.
இனி சினிமாவில் நடிப்பதா இல்லையா என்பதை’இருவர் ஒன்றானால்’ பட வரவேற்புக்குப்பின் தான் சொல்ல முடியும்.இருந்தாலும் விஸ்காம் படித்த நான் சினிமாவில் ஈடுபட எவ்வளவோ துறைகள் இருக்கிறதே ” என்கிறார்.
நிஜம்தான்…. சீக்கிரம் புரடியூஸ் பண்ணும்மா !