MSG மூவிஸ் சார்பில் ஹரி நாராயணன் மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரிக்க , கோகுல்நாத், அஞ்சனா கீர்த்தி , பேபி ஹம்சி ஆகியோர் நடிக்க ,
அம்புலி 3D , ஆ ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கிய ஹரி -ஹரீஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜம்புலிங்கம் 3D.
இந்தப் படத்தின் 90 சதவீதம் ஜப்பான் நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது
படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர் ஹரி நாராயணன், பல காலமாக ஜப்பானில் வாழ்பவர் .
தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்களை ஜப்பானுக்குக் கொண்டு போய் நாடகங்கள் மற்றும் திரைப்படக் கலை நிகழ்ச்சிகள் நடத்துபவர் .
ஸ்ரீவித்யா என்ற பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகி இருக்கும் படம் இது . ஒளிப்பதிவு சதீஷ் . கலை இயக்கம் ரெமியன் .
வரும் 13 ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறது சேலம் எம் பி எல் பிலிம்ஸ் . இதற்குக் காரணமாக இருந்தவர் எஸ் வி சேகர் .
இதையொட்டி நடந்த, படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்,
ஜப்பானுக்கான சென்னை துணைத் தூதரக கலாசாரம் மற்றும் தகவல் பிரிவு அதிகாரி திரு புக்காவோ ஜுனிச்சி (FUKAO JUNICHI),
எஸ் வி சேகர், இயக்குனர் பி வாசு, கங்கை அமரன் , ஓய ஜி மகேந்திரன் கிரேசி மோகன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்கள் .
நிகழ்ச்சியில் படத்துக்கான இரண்டு முன்னோட்டங்களும் நான்கு பாடல்களும் திரையிடப்பட்டன .
உலகப் படங்களை தமிழ் சப் டைட்டிலோடு பார்த்துதான் பழக்கப்பட்டு இருக்கிறோம் .
ஆனால் ஒரு உலகப் படத்தை தமிழிலேயே பார்க்கப் போகிறோம் என்ற உணர்வை தரும் அளவுக்கு இருந்தன முன்னோட்டத்தில் உள்ள காட்சிகள் .
இது தவிர கோகுல்நாத்தின் காமெடியான மைம் கலைக் காட்சிகள் , அழகழகான ஜப்பான் குழந்தைகள் , (ம்… ம… ஜப்பான் அழகுப் பெண்களும்தான் ), தமிழ் பேசும் ஜப்பானியர்களான ரஜினி ரசிகர்கள் என்று ….
வித்தயாசமான காட்சிகளுடன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன அந்த முன்னோட்டங்கள் .
மறுபக்கம் ஜப்பானியப் பெண்கள் மற்றும் ஆண்கள் நம்ம ஊர் குத்துப் பாட்டுக்கு ஆடும் பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன .
மேஜிக், மைம் கலை , கடத்தப்படும் ஒரு சிறுமிக்கும் , ஜப்பானுக்குப் போயிருக்கும் அப்பாவி தமிழ் நாயகனுக்கு ஏற்படும் பாசம் , மேஜிக் நிபுணரின் உதவியாளப் பெண்ணோடு அவனுக்கு வரும் காதல் என்று…
படத்தில் வெரைட்டி வெரைட்டியாய் ….. வெரைட்டிகள் !
இதற்கிடையிலும் “நானே தானா என்ற கேள்வியில் ….”என்ற ஒரு ஒரு காதுக்குள் தேனூற்றும் மெல்லிசைப் பாடலைக் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யா .
வாழ்த்துகள் ஸ்ரீவித்யா ! பெண்கள் மெட்டி போட்டா மட்டும் போதாது . இது மாதிரி நிறைய மெட்டும் போடுங்க ஸ்ரீவித்யா .
பாடலுக்கு ஹரீஷ் ராகவேந்தர் எழுதி இருக்கும் வரிகள் இசையோடு அவ்வளவு இழைந்து போகின்றன .
நிச்சயமாக இந்தப் பாடல்தான் இந்த வருடத்துக்கான சிறந்த மெலடியாக இருக்கும் என்று (ஏழு மாதம் மிச்சம் இருக்கும்போதே) தோன்றுகிறது .
தவிர, இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கான கொண்டாட்டமாக ஜம்புலிங்கம் 3D இருக்கும் என்பதும் புரிகிறது .
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாஸ்கி ” பொதுவாக ஒவ்வொரூ இயக்குனரும் தங்களுக்கென்று ஒரு வித்தியாசமான பாணியை உருவாக்கிக் கொள்ள முயல்வார்கள் .
ஆனால் இந்தப் படத்தின் இயகுனர்களான ஹரி ஹரீஷ் இருவரும் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வித்தியாசமான பாணியை உருவாக்குபவர்கள். அம்புலி படத்தை 3Dயில் கொடுத்தாங்க .
அடுத்து ஆ என்ற , தமிழின் முதல் ஹாரர் அந்தாலாஜி (பேய்க் கதைத் தொகுப்புப் ) படத்தைக் கொடுத்தாங்க .
இப்போ மறுபடியும் ஜம்புலிங்கத்தை 3Dயில் கொண்டு வர்றாங்க . ஆனா இதுல மேஜிக் மைம் செண்டிமெண்ட் அப்புறம் ஜப்பான் எல்லாம் சேர்த்து வித்தியாசமா கொண்டு வர்றாங்க .
இந்த 3D கண்ணாடி தயாரிக்கிறவங்க எல்லாம் , இந்த இயக்குனர்களுக்கு ஒரு கோயில் கட்டணும்
கமல்ஹாசன் நடித்த ஜப்பானில் கல்யாண ராமன் படத்துக்குப் பிறகு ஜப்பானில் எடுக்கப்பட்ட தமிழ் படம் இது ” என்றார் .
படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவளும், ஹரி நாராயணனின் மகளுமான ஹம்சியைப் பாராட்டிப் பேசிய கிரேசி மோகன் ,” இவ ஜப்பன்லயே பொறந்து வளர்ந்த கொழந்த. ஆனா எவ்வளவு நல்லா தமிழ் பேசறா பாருங்க .
அது மட்டுமில்ல குழந்தைகளைக் கவரும்படி எடுக்கப்பட்டு உள்ள இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் இவதான் .
இது இவளுக்கு முதல் படம் .
ஆனா கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் மெச்சூர்டா சிற்ப நடிச்சிருக்கா ” என்று பாராட்டி, பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
பி .வாசு தனது பேச்சில் ” நகைக் கடையில் பொம்மையின் உடம்பில் விதமான அழகிய நகைகள் இருக்கும் . ஆனா அதுக்குப் பக்கத்தில் ஒரு பெண் எளிய உடையில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்.
பொம்மை அங்கேயே இருக்கும் . ஆனால் அந்தப் பெண் ஓடியாடி இயங்குவார் . பொம்மை உயிர் இல்லாதது . பெண் உயிருள்ள மனுஷி .
அந்த பொம்மை மீது போடப்பட்டு இருக்கும் நகைகள்தான் நவீன தொழில்நுட்பம் . ஆனா அந்த உயிருள்ள பெண்தான் கதை திரைக்கதை . பொம்மை மேல இருக்கும் அந்த நகையை எடுத்து,
பெண்ணுக்கு அணிவித்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ? அதுபோல நல்ல கதை திரைக்கதையை எடுத்துக் கொண்டு அதற்கு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தணும் .
கதை திரைக்கதை இல்லாத தொழில் நுட்பம் என்பது பொம்மைக்கு நகை போடுவது போல தான்
இந்தப் படத்தில் உயிருள்ள பெண்ணுக்கு நகைகளை போட்டு அழகு பார்த்திருக்காங்க
படத்தில் கோகுல்நாத்தின் பங்காளிப்பு பிரம்மாதம் .
பொதுவாக ஒரு சீனை நடிகரிடம் இயக்குனர் சொல்லி நடிக்க வைக்கலாம் .
ஆனால் இந்தப் படத்தில் கோகுல்நாத் செய்து இருக்கும் மைம் உள்ளிட்ட பல விசயங்கள் இயக்குனர் சொல்லி வருவதல்ல.
எனது அனுபவத்தில் படத்துக்கு தனது சொந்த பங்களிப்பை செய்யும் வேலையை சத்யராஜ் சிறப்பாக செய்வார் . ரஜினி சாரும் அப்படிதான். அந்த வரிசையில் கோகுல்நாத் வருவதற்கு பாராட்டுகள் .
நான் 3D படம் எடுத்தது இல்ல . அதனால ஒரு நாள் இந்த ஜம்புலிங்கம் 3D ஷூட்டிங் போய் எப்படி இருக்குன்னு பார்த்தேன் . அசந்துட்டேன் .
ஒரு 3D படத்தை இவ்வளவு குறைந்த செலவில் எடுக்க முடியுமா என்று எண்ணி வியந்து இயக்குனர்களான ஹரி ஹரீஷ் இருவரையும் பாராட்டினேன் .
உலகம் சுற்றும் வாலிபன், ஜப்பானில் கல்யாண ராமன் ஆகிய படங்களுக்குப் பிறகு ஜப்பானில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார்
ஒய் ஜி மகேந்திரன் பேசும்போது
” சினிமா என்பது ஒரு ரயில் என்றால் அதில் காலியாக இருக்கிற ஒரு கம்பார்ட்மெண்டைப் பார்த்து ஏறி இருப்பது இந்த இயக்குனர்களின் புத்திசாலித்தனம் .
எல்லோரும் பேய்ப்படம் என்ற கம்பார்ட்மெண்டிலேயே ஏறிக் கொண்டு இருக்க, குழந்தைகள் படம் என்ற கம்பார்ட்மென்ட்டில் இவங்க ஏறி இருக்காங்க .
இன்னிக்கு பல நடன நிகழ்சிகளில் கேவலமான அர்த்தம் வருகிற பாடல்களுக்கு எல்லாம் ஏழு வயசு எட்டு வயசுக் குழந்தைகளை ஆட வைப்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது .
இதுக்கு மார்க் போட ஜட்ஜுகள் வேற.
உலகம் எங்கும் குழந்தைகளுக்கென்று தனியாக படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன . அது ரொம்ப சிறப்பான விஷயம் . ஆனால் தமிழில் அது மாதிரி படங்கள் வருவதே இல்லை .
அந்தக் குறையைத் தீர்த்து மாபெரும் வெற்றி பெறப் போகிற படம் இது ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் தமிழ் சினிமாவின் ஹாரி பாட்டர் என்று எல்லோரும் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் .
அதில் சந்தேகம் இல்லை ” என்றார்
எஸ் வி சேகர் தனது பேச்சில்,
“முதல்ல இந்த புரடக்ஷன் மேனேஜர்களை ஃபெஃப்சியில் இருந்து பிரித்து, புரடியூசர் கவுன்சிலில் சேர்க்கணும். அவங்க பணம் கொடுக்கறவங்க தரப்புக்குதனே வேலை செய்யறாங்க .
ஏன் சொல்றேன்னா இங்கே புரடியூசர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல .
வருடத்துக்கு பத்து படங்கள் வெற்றி அடையுது . பல படங்கள் தோல்வி அடையுது . ஆனா வருஷம் சுமார் நானூறு படம் வெளியாகாமலே போய்டுது . எவ்வளவு பணம் வீணாகுது . .
நான் இந்தப் படம் பார்த்தேன் . படம் நல்லா இருந்தது . படம் ஆறு ஏழு மாசத்துக்கு முன்னாடியே முடிஞ்சிட்டாலும் இதை குழந்தைகளுக்காக மே மாசம்தான் வெளியிடனும் என்று தயாரிப்பாளர் உறுதியா இருந்தார் .
அது எனக்கு பிடிச்சு இருந்தது . நான் சொல்லித்தான் எம் பி எல் பிலிம்ஸ் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுது . படம் வெற்றிகரமா ஓடும் ” என்றவர் ,
தொடர்ந்து ” சென்சார் போர்ட்லயும் நான் இருக்கறதால சில விஷயங்கள் சொல்ல வேண்டி இருக்கு .
படத் தயாரிப்பாளர்கள் சென்சாருக்கு வருவதை முறைப்படி திட்டமிடணும் . ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணிட்டு கடைசி நேரத்தில் வந்து நிற்கக் கூடாது . ஒரு ஆபீசுக்கு போற மாதிரி வரணும் .
பலி பீடத்துக்கு வர ஆடு மாதிரி வரக் கூடாது. அங்க வந்து கெஞ்சக் கூடாது .
சில பேரு கியூபுக்கு எல்லாம் படத்தைக் கொடுத்துட்டு அப்புறம் சென்சாருக்கு வருவாங்க . அது தப்பு . ஏன்னா சென்சார்ல கட் கொடுத்தா ,
அப்புறம் அதை நீக்க நீங்க கியூபுக்கு நாற்பதாயிரம் செலவு பண்ணனும்” என்று , அவர் சொன்னது எல்லாம் பயனுள்ள விஷயங்கள். சபாஷ் எஸ் .வி.சேகர் !
கங்கை அமரன் பேசும்போது ,
” இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் தெளிவா புரியுது . அதுக்காகவே இசையமைப்பாளர் ஸ்ரீவித்யாவை பாராட்டணும். இந்த பெண் குழந்தை சிறப்பா நடிச்சு இருக்கு .
எல்லாரும் பதினாறாம் தேதி அரசியல் ஓட்டுப் போடப் போறீங்க. அதுக்கு முன்னாடி 13 ஆம் தேதியே போடுங்கம்மா ஒட்டு ஜம்புலிங்கத்தைப் பார்த்து ! போடுங்கய்யா ஒட்டு ஜம்புலிங்கத்தைப் பார்த்து !!” என்றார் .
மிக அற்புதமாக அழகான தமிழில் பேசி எல்லோரையும் பரவசப்படுத்தினார் ஜப்பானுக்கான சென்னை துணைத் தூதரகத்தில் கலாசாரம் மற்றும் தகவல் பிரிவின் அதிகாரியான திரு புக்காவோ ஜுனிச்சி ) FUKAO (UNICHI),.
” ஜப்பானில் நடக்கும் பல தமிழ் நிகழ்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது . அவற்றில் சினிமா தொடர்பானவையும் அடங்கும் .சந்திர முகி படத்துக்கு ஜப்பானிய மொழியில் சப் டைட்டில் எழுதியதும் நான்தான்
ஜப்பானில் எல்லோருக்கும் டோக்கியோதான் தெரியும் . ஆனால் அங்கிருந்து ஆறு மணி நேரப் பயணம் செய்தால் , தொயோமா என்ற இடம் வரும் அங்கு அழகான மலைகள் உண்டு . கடல் உண்டு .
பனிக் காலத்தில் பனி கொட்டும். சில மீட்டர்கள் உயரத்துக்கு பனி இருக்கும் மிக அழகான பகுதி அது . அங்குதான் இந்தப் படத்தின் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டன.
தமிழ்ப் படங்களை ரசிக்கும் ஜப்பானியர்கள் நிறைய இருக்கிறார்கள் . நிறைய படங்களை எடுக்க தமிழ் தயாரிப்பாளர்கள் ஜப்பானுக்கு வர வேண்டும் .
அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் “
என்று பேசி முடித்த போது, அரங்கமே பரவசத்தோடு எழுந்து நின்று கை தட்டியது . அவர் பேசியதில் சப் டைட்டில் , மீட்டர் என்ற இரண்டே ஆங்கிலச் சொற்கள் மட்டுமே இருந்தது .
மற்ற எல்லாம் தமிழ் . இது தமிழ் நாட்டில் நம்மவர்களால் கூட முடியாத சாதனை . அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார் எஸ் வி சேகர் .
இயக்குனர்களில் ஒருவரான ஹரி பேசும்போது ” அம்புலி , ஆ படங்களுக்குப் பிறகு அடுத்து ன்ன செய்யலாம் என்று யோசித்து இப்படி ஒரு கதையை தயார் செய்தோம் .
இதை ஜப்பானில் எடுப்பது பற்றி ஆலோசனை கேட்கத்தான் ஹரி நாராயணனை சந்தித்தோம் . அனால் அவரே படத்துக்கு தயாரிப்பாளராக வந்தார் . இசை அமைப்பாளர் ஸ்ரீவித்யாவையும் அவரே கொடுத்தார் .
கோகுல்நாத் , அஞ்சனா இருவரும் மட்டுமல்லாது படத்தில் நடித்துள்ள அத்தனை சிறப்பாக நடித்தனர்
பகல் இரவு பார்க்காமல் எல்லோரும் வேலை செய்தனர் . படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது . படம் எல்லோரையும் கவரும் என்று நம்புகிறோம் ” என்றார் .
ஹரீஷ் பேசும்போது “ஜப்பானில் எங்களுக்கு கிடைத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது . அங்குள்ள ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி நன்றி சொல்ல வேண்டும் ” என்றவர் ,
அப்படி அவர்கள் பெயரை சொன்னதோடு , ஜப்பானிய மொழியிலும் நன்றி சொன்னார்.
தொடர்ந்து பேசும்போது ” இது 3D படம் மட்டும் அல்ல . குழந்தைகளுக்கான 3D படம் . அதே நேரம் பெரியவர்கள், இளைஞர்கள், தமிழை ரசிப்பவர்கள், ரஜினி ரசிகர்கள் , நல்ல மெலடி பாடல் விரும்பிகள் …
மைம் , மேஜிக் போன்ற கலைகளை ரசிப்பவர்கள் , செண்டிமெண்ட் ரசிகர்கள் எல்லோருக்கும் பிடித்த விசயங்களைக் கொண்ட படம் . அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும் ” என்றார் .
மொத்தத்தில் ஆவலோடு எதிர்பார்க்கும்படி இருக்கிறது, ஜம்புலிங்கம் 3D படத்தின் பாடல்கள் முன்னோட்டம் உள்ளிட்ட படம் பற்றிய தகவல்கள் !
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462