
இயக்குனர்கள் பி.வாசு, வெற்றி மாறன் ‘இருவர் மட்டும்’ ராகவன், ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய மனோன் .எம் என்பவர் தனது முதல் படமாக இயக்கியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘கா..கா..கா..’
படத்தின் பெயரோடு ஆபத்தின் அறிகுறி என்று ஒரு சப் டைட்டிலும் போட்டுள்ளார்கள். பொதுவாக காகம் கத்துவது என்பது விருந்தினர் வரவின் அறிவிப்பு என்று நம்பப் படுகிறது.

ஆனால் இந்தப் படத்தில் காகம் கத்துவது ஆபத்து வரும் அறிகுறியாக காட்டப்படுகிறது . படத்தில் காகம் ஒரு பாத்திரமாகவே வருகிறது.
அர்பிதா கிரியேஷன்ஸ் சார்பில் கிரண் பதிகொண்டா என்பவர் தயாரிக்க அசோக்,மேகாஸ்ரீ ,நாசர்,ஜெயசுதா,யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் தெலுங்கு என ஒரு மொழிகளில் தயாராகியிருக்கிறது.
படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ,
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் முன்னோட்டத்தை வெளியிட இயக்குநர் வெற்றி மாறன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் நாசர் பேசும் போது ”புதுமுக இயக்குநர்கள் படம் பண்ணும் போது நம்பிக்கைக் கனவோடு வருகிறார்கள்.அவர்களை நான் ஆதரிக்கத் தயங்குவதில்ல்லை.
இந்த மனோன் என்னிடம் நடிக்கக் கேட்டு கதை சொன்னபோது ‘ நான் எந்த அளவுக்கு இந்தப் படத்துக்கு அவசியம்? ஏன் நான் நடிக்க வேண்டும்? ‘என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது; திருப்தியாக இருந்தது
ஒவ்வொரு புதுமுக இயக்குநரிடமும் நான் கற்றுக்கொள்கிறேன்.இந்தப் புதுமுக இயக்குநரிடமும் நான் கற்றுக்கொண்டேன்.எது வேண்டும் எது தேவை என்பதில் அவர் தெளியாக இருந்தார்.
இன்று டிஜிட்டல் வந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.ஆனால் மனோன் அப்படிப்பட்ட ரகமல்ல. அவரிடம் நல்ல திட்டமிடல் இருந்தது.தொழில் சிரத்தை உள்ளவர். முழுப் படத்தையும் திட்டமிட்டு எடுத்தார்.
இன்று தினசரிப் பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தால் 60படங்களின் விளம்பரங்கள் வருகின்றன.எதைப் பார்ப்பது என்று மக்களுக்கே குழப்பம் வருகிறது . .இருத்தாலும் இந்தப் படம் அதிலும் தனித்துத் தெரியும்படி வெற்றிபெற வேண்டும்.
சினிமாவுக்குத் தயாரிப்பாளர் முக்கியம்.தயாரிப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இப்படம் நூறு நாள் ஓடவேண்டும் என்பதை விட, முதலில் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ”என்று வாழ்த்தினார்.
இயக்குநர் வெற்றி மாறன் தன் பேச்சில் ”
இந்த மனோன் ,என் தயாரிப்பில் பணியாற்றியவர்.ஆர்வமாக உழைப்பவர்.என்னிடம் இப்படம் தொடங்குவது பற்றி சொன்னபோது “தயாரிப்பாளர் கஷ்டப்படாமல் திட்டமிட்டு எடுக்க வேண்டும்” என்றேன். அதை அவர் செய்திருப்பதில் மகிழ்ச்சி. படத்தின் ட்ரெய்லர் சுவாரஸ்யமாக இருக்கிறது.
பொதுவாக ஹாரர் படத்தில் ஒலியை கையாளும் விதம் முக்கிய இடம் வகிக்கும். அதை இதில் சரியாகக் கையாண்டு இருக்கிறார்கள்.ஒளிப்பதிவும் இசையும் நன்றாக இருக்கிறது.” என்றார்.
அடுத்துப் பேசிய நாயகன் அசோக்
” படத்தில் கதை புதியதாக இருக்கிறதா என்பதை விட புதுமையாக சொல்லி இருக்கிறோம் என்று நிச்சயமாகக் கூறலாம். திறமையான தொழில்நுட்பக் குழுவினர் உருவாக்கிய படம் இது. ஒரு படம் பெரிய படமா சிறிய படமா என்பதை யாரும் சொல்ல முடியாது அதை ஆடியன்ஸ்தான் முடிவு செய்வார்கள் .அவர்கள் தருகிற ஆதரவு ஆசீர்வாதம்தான் முடிவு செய்யும் ” என்றார்.
இயக்குநர் மனோன் பேசும் போது ”
வெற்றி மாறனின் ‘விசாரணை’ உலகெங்கும் பாராட்டப் படுவது எனக்கும் பெருமையாக இருக்கிறது. வாசு சார் அப்டேட்டாக இருப்பவர். இந்தப் படத்தில் நான் புதியவன் என்று பார்க்காமல் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் .
நாசர் சார் சீனியர் அனுபவசாலியாக இருந்தாலும் முதல் நாளே எடுக்க வேண்டிய காட்சிகளைக் கேட்டு வாங்கி தயாராகி வருவார் . நீருக்கடியில் அசோக் குதிப்பது பில எடுத்த காட்சியில் அவருக்கு அடிபட்டு உதடு கிழிந்து ரத்தம் கொட்டியும் நடித்து முடித்து விட்டுத்தான் மருத்துவமனை போனார். அவ்வளவு அர்ப்பணிப்பானவர்.

மேகாஸ்ரீ நள்ளிரவு 2 மணி வரை நடித்துக் கொடுத்தார். இப்படி அனைவரும் உதவியதால்தான் படத்தை விரைவில் முடிக்க முடிந்தது. தயாரிப்பாளர் கிரண் ஒரு உதவி இயக்குநர் போல உழைத்தார்” என்றார்.
திறமையும் உழைப்பும் ஒன்று சேரும் மனிதனை வெற்றியே கா கா கா என்று கத்திக் கொண்டு தேடி வரும் , நிரந்தர உறவாக !