62வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு மொத்தம் ஏழு விருதுகள் கிடைத்திருக்க , அதில் காக்கா முட்டை படத்துக்கு சிறந்த குழந்தைகளுக்கான திரைப்பட விருதும், இப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களான ரமேஷ் மற்றும் விக்னேஷ், இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதும் அறிவிக்கப்பட்டது தெரிந்த விஷயம்தான் .

சேரிப் பகுதியில் வாழும் ஏழைச் சிறுவர்கள், உயர் வர்க்கத்தினரின் பணத்தை தண்ணீராக இறைக்கும் வாழ்வு முறையைக் கண்ணுறும்போது, என்ன மாதிரியான மன உணர்வுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதை — ஆயிரக் கணக்கான ரூபாய் விலை உள்ள நாய்க்குட்டி , மேற்கத்திய உணவான பிட்ஸா போன்றவற்றின் மூலம் சொல்லி , அதன் மூலம் தனித் தன்மை அழிப்பு, மண் சார்ந்த தன்மைகளின் மறைவு , உலகமயமாக்கலின் விளைவுகள் என்று பல உள்ளார்ந்த சமூக அரசியல் கூறுகளைப் பேசும் படம் இது .
அண்மையில் டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் இந்தப் படத்துக்காக சிறந்த திரைப்படத்துக்கான விருதை நடிகர் தனுஷ், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதுகளை விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு .
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘காக்கா முட்டை படத்தில் நான் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் போது பல பேர் என்னிடம் ஏன் அம்மா வேடத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். மேலும் உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றும் கூறினார்கள். ஆனால் நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நல்ல ஆக்டிங் ஸ்கோர் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆதலால் இப்படத்தில் நடித்தேன். இதில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என்றார்.வெற்றிமாறன் பேசும் போது, ‘இந்த ஸ்கிரிப்டை நான் முதலில் படித்தபோதே எனக்கு மிகவும் பிடித்தது. என் வாழ்க்கையில் நடந்த விஷயம் போல் இருந்தது. இந்த ஸ்கிரிப்டை தனுஷுக்கு அனுப்பினேன். தனுஷுக்கும் பிடித்ததால் சேர்ந்து பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று நம்பினோம். முதலில் இப்படத்தை வெளியிடுவதற்கு முன்னதாகவே பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு தனுஷும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி பிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்பி விருதுகளை பெற்றோம். மேலும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
தனுஷ் பேசும் போது, ‘இந்தக் ஸ்கிரிப்டை எனக்கு வெற்றி மாறன் அனுப்பினார். பத்து பக்கம் படித்துப் பார்த்த உடனேயே படிப்பதை நிறுத்தி விட்டு தயாரிக்க முடிவு செய்தேன் . இந்தப் படத்தில் இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது சிறுவன் நானாகவும், பெரியவன் என் அண்ணனாகவும் எனக்கு இருந்தது. இந்த கதை என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. அதனால் இப்படத்தை தயாரிக்க முன்வந்தேன். இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காக்கா முட்டை படம் வெளியாவதற்கு முன்பே எனக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’ என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிகண்டன் ” இந்தப் படம் வெளிவந்த பிறகு எல்லோரும் பாராட்டப்படுவார்கள் . ஆனால் மூன்று பேர் மட்டும் கவனிக்கப்படாமல் போகலாம் . எனவே அவர்களை இப்போதே பாராட்டி விடுகிறேன். கலை இயக்குனர், ஆப்பரேட்டிவ் கேமரா மேன், ஒலி வடிவமைப்பாளர் இந்த மூவர்தான் . படத்தில் நடித்த சிறுவர்களை அவர்கள் நடிக்கும்போது கேமராவுக்காக ஒரு இடத்தில் நிற்க சொல்லி கட்டிப் போட முடியாது. கட்டுப்படுத்தினால் இயல்பான நடிப்பு வராது. எனவே அவர்களை இஷ்டத்துக்கு உலவவிட்டு ஓடி ஓடி படம் பிடித்தார் ஆப்பரேட்டிவ் கேமரா மேன். மூவருக்கும் நன்றி ” என்றார்.
தேசிய விருது பெற்ற சிறுவர்கள் இருவரும் வருங்காலத்தில் என்ன படிக்க விரும்பினாலும் அதற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொள்வதாக தனுஷ் அறிவித்தது நிஜமாகவே பாராட்டுக்குரிய விஷயம் .
“உங்களுக்கும் நீங்கள் வளர்த்து விட்ட சிவ கார்த்திகேயனுக்கும் மனஸ்தாபம்னு சொல்றாங்களே …?” என்ற கேள்விக்கு சைலண்டாகவே சுதாரித்த தனுஷ் ” ரெண்டு பெரும் சகோதார்கள் மாதிரிதான் பழகிட்டு இருக்கோம் ” என்றார் .
அண்ணனுக்கு அப்படியே அமுக்குணி விருது ஒன்னும் பார்சல்ல்ல்லல்ல்ல்ல் !