ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ எம் ரத்னம் மற்றும் ஐஸ்வர்யா தயாரிக்க, விஜய் சேதுபதி, தான்யா ரவிச்சந்திரன் பாபி சிம்ஹா ,
சிங்கம் புலி நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’.
படத்தின் பாடல் வெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னோட்டம் மற்றும் சிறு முன்னோட்டம் திரையிடப்பட்டது.
கிராமத்துப் பின்னணியில் காதல், நட்பு , கணவன் மனைவி உறவு, ஜல்லிக்கட்டு இவற்றை களங்களாகக் கொண்டு படம் இருக்கும் என்பது அவற்றின் மூலம் தெரிந்தது
நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் டி. இமான் “இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் கருப்பன்தான் வெளி வருகிறது .
மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நபர் விஜய் சேதுபதிதான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார்.
அவரது ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும். ஒரு சில ஹீரோக்களின் படங்கள்தான் வெற்றி தோல்வி தாண்டி நமக்குப் பிடிக்கும் படமாக இருக்கும்.
அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உடல் எடையைக் குறைத்து வருகிறேன்.
படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை” என்றார் இசையமைப்பாளர் டி இமான்.
” நாலு வாரங்களில் சிகப்பழகு தரும் கிரீம்களின் விற்பனை கொடி கட்டிப் பறக்கும் இந்த நேரத்தில் கருப்பன் என்றபெயரில்,
ஒரு படம் இயக்கவும் நடிக்கவும் தமிழ் உணர்வு இருந்தால்தான் முடியும் . வாழ்த்துக்கள் ” என்றார் பாடலாசிரியர் யுக பாரதி
“படம் ஆரம்பிப்பதற்கு முன்பே விஜய் சேதுபதியை சந்தித்து நீங்கள் இன்னும் பெரிய இடத்துக்கு போவீர்கள் என சொன்னேன். அதன் பிறகு இந்த வருடம் வெளியான விஜய் சேதுபதியின் இரண்டு படமும் சூப்பர் ஹிட்.
இந்த கருப்பன் சஸ்பென்ஸ் , திரில்லர் மாதிரி இல்லாமல் ஒரு லைவான படம். விஜய் சேதுபதி உட்பட எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம்.
“என் மாமா கொடுத்த ஆதரவு மற்றும் அறிவுரை பேரில் இந்தப் படம் எடுத்துள்ளேன் ? என்றார் ஐஸ்வர்யா .
வெற்றிகரமான இந்தப் படத்துக்கு என்னை கதாநாயகியாகப் போட்ட விஜய் சேதுபதி சார், ஏ எம் ரத்தினம் சார், பன்னீர் செல்வம் சார் ஆகியோருக்கு நன்றி ” என்றார் தான்யா ரவிச்சந்திரன்
“நான் பஸ்ஸூக்காக காத்திருந்து காத்திருந்து தளர்ந்து போன நேரத்தில் எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது.
டிரைவராக விஜய் சேதுபதியும், கண்டக்டராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம்.
எனது இந்தக் கதை பற்றி அறிந்த இயக்குனர் சீனு ராமசாமி என்னை அழைத்து ” என் தம்பிக்கு இந்த கதையை சொல்லுங்க” என்றார் அவரே விஜய் சேதுபதியை சந்திக்கச் சொன்னார்.
விஜய் சேதுபதி இருக்கிற பிஸியில் ஆரம்பத்தில் அவரால் கதை கேட்க முடியவில்லை. பல பேரின் உதவியால் இந்தப் படம் எனக்கு கிடைத்தது. விஜய் சேதுபதியின் மேனேஜர் ராஜேஷ், இயக்குனர் ரத்தினசிவா,
தயாரிப்பாளர் காமன்மேன் கணேஷ், மேனேஜர் ஸ்ரீதர் என இந்த படம் அமைய காரணமாய் இருந்த அனைவருக்கும் நன்றி.
இரண்டு படம் இயக்கிய எனக்கே இந்த நிலை என்றால் முதல் படம் இயக்க காத்திருக்கும் உதவி இயக்குனர்களின் நிலை ரொம்பவே கொடுமையானது.
இந்த படத்தின் போது விஜய் சேதுபதியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். தூங்கும் போது கூட படத்தை பற்றிய சிந்தனையில்தான் இருப்பார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது”. என்றார் இயக்குனர் பன்னீர் செல்வம்.
விஜய் சேதுபதி தனது பேச்சில் ” ரேனிகுண்டா படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தை கூட மிகவும் கண்ணியமாக காட்டியிருப்பார் இயக்குனர் பன்னீர் செல்வம். துளி கூட கவர்ச்சி இருக்காது.
இந்த படத்தில் கூட ஒரு முதலிரவு பாடல் உண்டு . அதை மிகவும் கண்ணியமாக படம் பிடித்துள்ளார். நான் பழகியதில் இது நாள் வரை ஒருவரை பற்றிக் கூட பன்னீர் செல்வம் குறை சொன்னதில்லை.
அவ்வளவு நல்ல மனிதர். ஒரு கமர்சியல் படத்தை எப்படி எடுத்துச் செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏஎம் ரத்னம். இந்த படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை.
ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த போது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். அவனும் என் நண்பன் என்பதால் எதுவும் கேட்காமல் நடித்தான்.
சங்குத்தேவன் படம் டிராப் ஆனது எனக்கு பெரும் வருத்தம். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இந்தப் படத்தில் அமைந்தது .
ஆனால் அதோடு தற்செயலாக அதே இடத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை.
நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர். என் கருத்தை எந்த இயக்குனரிடம் நான் திணிப்பதில்லை.
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும். அதனால் அவர்கள் இயக்குனரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாக சொல்ல முடியாது. விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து.
அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது” என்றார்