தியா மூவீஸ் சார்பில் பிரதீப் தயாரிக்க, விஜய் ஆண்டனி, அர்ஜுன், நடிப்பில் , ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கும் படம் கொலைகாரன் . இன்னும் ஓரிரு வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை பாஃப்டா தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார் .
படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரைலர் , டீசர், இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன .

முகேஷ் என்ற இளைஞரின் அற்புதமாக ஒளிப்பதிவு, சைமன் கிங் தந்திருக்கும் இசை இவற்றோடு விஜய் ஆண்டனியின் மேஜிக், கூடுதலாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்ற பவர் த்ரில்லான கதை இருப்பது தெரிந்தது .
விஜய் ஆண்டனி மிக இயல்பான முறையில் அழகாக நடித்திருக்கிறார் . மற்றவர்களும் அப்படியே .
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சசி, வசந்த பாலன், புஷ்கர் – காயத்ரி, வாய்மை செந்தில் குமார், ராதா மோகன், தயாரிப்பாளர்கள் டி. சிவா, பெப்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ” ஆரம்பத்தில் இந்த கதையை நான் தயாரிப்பதற்காக விஜய் அன்டனி அனுப்பி வைத்தார் . ஆனால் கதையில் எனக்கு சில கேள்விகள் இருந்ததால் அப்போது செய்யவில்லை . படம் முடிந்ததும் பார்க்க சொன்னார் விஜய் ஆண்டனி . பார்த்தேன் பிரமாதமாக இருந்தது . நானே வாங்கி ரிலீஸ் செய்கிறேன். ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன் . ராதா மோகன் இயக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கிறேன் ” என்றார் .

இயக்குனர் சசி பேசும்போது, ” பிச்சைக்காரன் படம் முடிந்த நிலையில் நான் ஒரு இரட்டை ஹீரோ படத்துக்கு விஜய் ஆண்டனியை கேட்டேன் . இப்போதைக்கு இரட்டை வேடம் வேண்டாம் சார் என்றார் . இப்போது நடித்திருக்கிறார் . ஒளிப்பதிவும் இசையும் நன்றாக உள்ளது வாழ்த்துகள் ” என்றார் .

அற்புதமாக பேசிய வசந்தபாலன், ” எந்த ஒரு படத்திலும் வாழ்வின் தரிசனம் இருக்க வேண்டும் என்பது என் ஆசை . வணிகத்துக்காக கமர்சியல் செக்ஸ் இரண்டும் வைத்தால் கூட அதையும் மீறி எங்காவது அந்த வாழ்வின் தரிசனம் இருக்க வேண்டும் . சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தின் அந்த வாழ்வின் தரிசனம் இருந்தது .

எங்கள் இயக்குனர் ஷங்கர் சார் இயக்கி ரஜினி சார் நடித்த எந்திரன் படத்தின் இறுதியில் ரோபோ தன் தலையை தானே கழட்டி வைக்கும்போது, , அர்ஜுன் சார் நடித்த முதல்வன் படத்தில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே டா என்ற அந்த கிளைமாக்சில் அந்த வாழ்வின் தரிசனத்தை பார்த்தோம் . இந்த படத்திலும் அது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார் .

விஜய் ஆண்டனி, ஆண்ட்ரூஸ் இவர்களோடு லயோலா கல்லூரியில் படித்த புஷ்கர் காயத்ரி இருவரும் அப்போதே விஜய் ஆண்டனி இசை மீது காட்டிய ஆர்வத்தை , ஆண்ட்ரூஸின் திறமையை புகழ்ந்தனர் .

அர்ஜுன் சாருக்கு இன்னும் முடி கூட கொட்டவில்லை . அப்படியே இருக்கிறார் ” என்றார் ராதா மோகன் .

டி. சிவா தனது பேச்சில் , ” மிக எளிமையாக இயல்பாக பழகும் குணம் கொண்டவர் விஜய் ஆண்டனி சார் . சிறந்த உழைப்பாளி. அப்படி ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. அர்ஜுன் , விஜய் ஆண்டனி காம்பினேஷன் சிறப்பாக வந்துள்ளது. தனஞ்செயன் ஒரு படத்தை எடுக்கிறார் என்றால் அது கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார் .

” ஆறு மணி கால்ஷீட் என்றால் அஞ்சு மணிக்கே வந்து விடுவார் விஜய் ஆண்டனி சார் ” என்றார் ஃபெஃப்சி சிவா .

ஆண்ட்ரூஸ் தனது பேச்சில், ” இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி , அர்ஜுன் மற்றும் அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு அற்புதமானது ” என்றார் .

விஜய் ஆண்டனி தன் பேச்சில், “இந்தப் படம் ஆண்ட்ரூஸின் உழைப்பின் பலன் . அவருக்கு வாழ்த்துகள் . படப் பிடிப்பில் அர்ஜுன் சாரைப் பார்த்து வியந்தேன் . பிச்சைக்காரன் படம் மாதிரி இன்னொரு படம் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை . ஒவ்வொரு முறை பிச்சைக்காரன் படத்தை டிவியில் போடும்போதும் இண்டஸ்ட்ரியில் எனது மார்க்கெட் வேல்யூ கூடுகிறது . சசி சாருக்கு மறக்க முடியாத நன்றிகள்.

அடுத்து வரும் அக்கினி சிறகு, தமிழரசன், காக்கி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் வாழ்த்த வந்துள்ளார்கள் . அவர்களுக்கு நன்றி. பொதுவாக எனக்கு கதாநாயகியோடு கெமிஸ்ட்ரி இல்லை என்று பலர் வருத்தப் பட்டார்கள் . இந்தப் படத்தில் உள்ள கெமிஸ்ட்ரி எப்படி இருக்குன்னு சொல்லுங்க . நன்றி” என்றார் .

அர்ஜுன் தனது பேச்சில், ” விஜய் அன்டனி என்ற மிகச் சிறந்த மனிதரோடு இந்தப் படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் . கொஞ்சமும் பாசாங்கு இல்லாத அவரது பண்பு சிறப்பானது . ஆண்ட்ரூ சிறப்பாக படத்தை உருவாக்கி உள்ளார் . படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .