நிஜமான வெற்றியை கொம்பன் சுவைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொம்பன் படக் குழு .
விழா மேடையில் நடிகை கோவை சரளாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர்.
படத்தின் சின்னையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி பேசும்போது ,
” அலங்கா நல்லூர் மஞ்சுவிரட்டு பற்றி பலபேருக்கு தெரியும். ஆனால் எங்கள் ராமநாதபுரம் மண்ணின் எருது பிடி இன்னும் கடுமையானது . அங்கே கருமல் என்ற ஊரில் ராமு என்றொரு காளை இருந்தது. ரொம்ப வீரமான வலுவான காளை அது . கருமல் ராமு களம் இறங்குகிறான் என்றால் எதிர்க்க வேறு மாடும் இருக்காது . ஆளும் இருக்காது . இப்போது அந்த கருமல் ராமுவைப் போல எதிர்க்க ஆள் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது கொம்பன் ” என்றான் .
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் சக்தி பேசும்போது
” ஏழெட்டு சதவீதம் மட்டுமே உள்ள நகர மக்கள் , அந்த நகர மக்களின் கேளிக்கைகள் பற்றியே பெரும்பாலும் தமிழ் சினிமா பேசுகிறது . இதுதான் பொழுது போக்கு இதுதான் வாழ்க்கை முறை என்று அதைப் பற்றி மட்டுமே படம் எடுத்து, அதைக் கொண்டு போய் 93 சதவீத கிராமத்து மக்களிடம் திணித்தால் அவர்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்.?
ஆனால் இந்தக் கொம்பன் திரைப்படம் அந்த 93 சதவீத கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கேளிக்கைகளை காட்டியதால்தான் இன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு கிராம மக்கள் டிவி யை விட்டு விட்டு கூட்டம் கூட்டமாக படம் பார்க்க தியேட்டருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள் ” என்று குறிப்பிட்டது , நிஜமாகவே சிந்திக்க வேண்டிய விஷயம்.
கார்த்தி பேசும்போது
” இந்தப் படத்தை நான் ஒத்துக் கொள்ள சக்தி ஒரு முக்கிய காரணம் . பருத்தி வீரனுக்கு அப்புறம் கிராமத்துக் கதை . இது ஒரு நல்ல படம். நல்ல கருத்தை உணர்ச்சிகரமாக சொல்லியிருக்கும் படம்.சிலர் சொல்வதைப்போல, நினைத்துக் கொண்டிருப்பது போல தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல. வன்முறைக் கலாச்சாரம் நமதல்ல. ராமநாதபுரம் மண்ணும் அப்படித்தான்.
நான் படப்பிடிப்புக்கு போன போது பொள்ளாச்சி,போடிநாயக்கனூர், உடுமலை போன்ற இடங்களில் கூட ஆரவாரம் சலசலப்பு இருக்கும்.ஆனால் ராமநாதபுரம் மக்கள் மிகவும் அமைதியாக இருந்தார்கள். மரியாதையும் அன்பும் தந்தார்கள்.அவர்கள் பண்பு மிக்கவர்கள்.
அங்கு’கொம்பன் படத்தின் படப்பிடிப்பு நடத்தியதில் மகிழ்ச்சி. அங்குள்ள ஊர்கள் முன்னேறாமல் வசதிகள் இல்லாமல் இருப்பதைப் பார்த்து வருத்தமாக இருந்தது. கொம்பன் படம் போல பல படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடக்க வேண்டும். அந்த ஊர்கள் எல்லாம் வசதிகள் பெற வேண்டும் என்பதே என் ஆசை. படம் நன்றாக ஓடுவது சந்தோசம். தொடர்ந்து இனி செண்டிமெண்ட் நிறைந்த கிராமத்துக் கதைகளை எடுத்து நடிப்பேன் ” என்றார் .
“எனக்கு கிராமம் செண்டிமெண்ட் கதைகள்தான் தெரியும் . மக்களின் வாழ்க்கையில் அதுதான் இருக்கிறது . இந்தப் படத்தில், கூட மாப்பிள்ளை மருமகன் உறவை மையப்படுத்திதான் படம் எடுத்தேன் . இனியும் இதே பாணியில் தொடர்வேன் ” என்றார் இயக்குனர் முத்தையா .
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பேச்சில்
“மக்கள் அளித்துள்ள ஆதரவு சந்தோஷமாக இருக்கிறது . இந்தப் படம் வந்தால் சாதி மோதலால் ரத்த ஆறு ஓடும் என்று டாக்டர் கிருஷ்ண சாமி அய்யா சொன்னது போல எதுவும் நடக்கவில்லை . காரணம் படத்தில் அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை . அதற்காக நாங்கள் படம் எடுக்கவும் இல்லை.
படம் வெளியானபிறகு வழக்கமான வசூலைவிட மதுரை வட்டாரங்களில்இப்போது இருமடங்கு வசூலாகி வருகிறது. எந்தெந்த ஊர்களில் பிரச்சினை பதற்றம் என்று கூறப்பட்டதோ அங்குதான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சந்தோஷமாகப் படம் பார்க்க வருகிறார்கள்.
இப்போது கூட எல்லோரும் என்னிடம் ‘ இந்த வெற்றிக்காக சந்தோஷப் பட முடியாது . புலி வாலைப் பிடித்து விட்டீர்கள் . அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றே கூறுகின்றனர் .
அதே நேரம் படத்தின் வெளியீட்டுக்கு எதிராக அவர்கள் தேவை இல்லாமல் செய்த பிரச்னைகளால் பொருளாதாரம், தேவையில்லாத கெட்ட பெயர், மன உளைச்சல் என்று பல வகையிலும் பாதிக்கப்பட்டேன் . அதற்காக அவர்கள் மீது மான நஷ்ட வழக்குப் போடுகிறேன் “என்றார் .
அப்படி போடுங்க அருவாள !