சாய் அமீர் புரடக்ஷன் சார்பில் கே. அமீர் ஜான் தயாரிக்க , ஜகதீஷ், கவுதம் கிருஷ்ணா , பிரவீன் குமார் , கணேஷ், சாந்தினி , நிஷா … இப்படி பல புதுமுகங்கள்…. இவர்களுடன் இயக்குனர் சரவண சுப்பையா ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி ஜி.கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு கைல பூமாலை’ .
யார் குரங்கு? யார் பூமாலை? என்று பார்ப்போம் .
ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்கும் ஒரு பெண்ணை உண்மையாக காதலித்து, அதனால் அவமனனங்களையும் இழப்புகளையும் சந்திக்கும் ஒருவன், அதன் பிறகு எல்லா காதலர்களின் பிரச்னையிலும் தலையிட ஆரம்பிக்கிறான் .
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவன் , பார்க்கும் பெண்களை எல்லாம் என்ன விலை கொடுத்தாவது வீழ்த்துகிறான். அதில் இருந்து தப்பும் பெண்களையும், தன்னை கண்டிக்கும் பெண்களையும் வஞ்சத்தோடு பழிவாங்க முயல்கிறான்.
பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பது தெரியாமல் அக்கா மகளைத்தான் திருமணம் செய்வேன் என்று வலுக்கட்டாயம் செய்கிறான் ஒருவன்.
இந்த மூன்று பேரிடமுமே ஒரு பெண் சிக்க ,
அந்தப் பெண் மீது உண்மையான காதல் கொண்டு அதை அவளிடம் சொல்ல வழி தெரியாமல், முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போக முடங்கும் ஓர் உண்மையான காதலன் ..
” இவங்க கிட்ட அந்தப் பொண்ணு மாட்டிக்கிட்டாளா ? இல்ல அந்தப் பொண்ணுகிட்ட இவங்க மாட்டிக் கிட்டாங்களா? இல்ல… இந்த அஞ்சு பேர் கிட்டயும் படம் பாக்கப் போற நீங்க மாட்டிக்கப் போறீங்களா? தியேட்டர்ல முடிவு பண்ணிக்குவோம் வாங்க ” என்று முதல் காட்சியிலேயே சொல்லித் துவங்குவதே இந்தப் படம்.
ஓர் அயோக்கியனை திட்ட விரும்பும் நாயகி , நம்பரை மாற்றிப் போட்டு நாயகனை வண்டை வண்டையாய்த் திட்ட , பின்னர் அதை புரிந்து கொண்டு அவனிடம் மன்னிப்புக் கேட்க முயலும்போதெல்லாம் அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் அந்த ஏரியா , சுவாரசியம்.
ஷேர் ஆட்டோவில் உரசும் அயோக்கியனைக் கண்டிக்காமல் அமைதி காப்பதற்கு வேலைக்குப் போகும் ஓர் ஏழைப்பெண் சொல்லும் காரணம் யதார்த்த நெகிழ்வு .
அவள் ஒரு தொடர்கதை படத்தின் நாயகியின் பெயரான கவிதா என்ற பெயரை இந்தப் படத்தின் நாயகிக்கு வைத்து இருக்கிறார் இயக்குனர் .
ரியல் எஸ்டேட் வில்லனை நாயகி போலீசில் மாட்டி விடும் விதம் , ஆபாசப் படம் எடுத்து ஒரு பெண்ணை துன்புறுத்தும் ஒருவனை அவன் மனைவியிடம் மாட்டி விடுவது போன்ற காட்சிகள் சிறப்பு.
ஆஹாஹா மாட்டிக்கிச்சு பாடல் புழு மீனுக்கு உணவு. மீன் கொக்குக்கு உணவு . கொக்கு மனிதனுக்கு உணவு . மனிதன் புழுவுக்கே உணவு ” போன்ற பாராட்டத்தக்க பாடல் வரிகளும் படத்தில் இருக்கின்றன.
கதாநாயகிக்குத் தோழியாக நடித்து இருப்பவரின் குரல் அவ்வளவு இயல்பாக இருக்கிறது .
படத்தில் வரும் ஐந்து ஏதாவது ஒரு கேரக்டரை எடுத்துக் கொண்டு, அதோடு பயணித்து……
அந்தக் கேரக்டர் வழியே ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தி திரைக்கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிக்க வைத்து…..
நாடகத்தனம் இல்லாமல் இன்னும் யதார்த்தமாக……… நம்பக் கூடிய சூழல்களை அமைத்து..
பெண்களை எல்லாம் ‘தொட்ட உடனே படுத்து விடும் பொம்மைகள்’ என்று காட்டாமல் … ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு யதார்த்தமான குணாதிசயம் கொடுத்து ….
லாஜிக் சொதப்பல்கள் இல்லாமல் இன்னும் புத்திசாலித்தனமாக..
இன்னும் சிறப்பான இசை , முக்கியமாக ஒளிப்பதிவு
கேரக்டர்களுக்குப் பொருத்தமான வசனங்கள் இவற்றை எல்லாம் அமைத்து இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம்.
குரங்கு கைல பூமாலை !