சென்னையில் நடந்த 12வது உலகப் பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றது குற்றம் கடிதல் என்ற திரைப்படம் . நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினார் . (இரண்டாம் பரிசு இயக்குனர் மனோபாலா தயாரிப்பில் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்துக்கும், நடுவர் விருது ஆர். பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கும் நடுவர் சிறப்பு குறியிடல் பூவரசம் பீப்பி படத்துக்கும் வழங்கப்பட்டது)
வணிக ரீதியிலான திரையரங்குகளுக்கு விரைவில் கம்பீரமாக வரப் போகிற குற்றம் கடிதல் ஓர் அற்புதமான திரைப்படம் . விருதுகள் இந்தப் படத்துக்கு புதிதல்ல. இதற்கு முன்பே அண்மையில் கோவாவில் நடந்த உலகப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்று , உலகெங்கும் இருந்து வந்த சினிமா அறிஞர்களால் கொண்டாடப்பட்ட படம் இது.
பிரம்மா.ஜி என்ற புதிய படைப்புப் பிரம்மனின் (அதாவது இயக்குனரின் ) எழுத்து இயக்கத்தில் உருவாகி கிறிஸ்டி சிலுவப்பன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு வெற்றிப் படங்களை மட்டுமல்லாது தரமான வெற்றிப் படங்களை தருவதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமாரின் பார்வை பட்டு படைப்பு ரீதியாகவும் தயாரிப்பு ரீதியாகவும் புடம் போடப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு…. இன்று உயர்த்திப் பிடிக்கப்பட்டு விருதுகளை குவித்துக் கொண்டு இருப்பதோடு படம் பார்க்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் கனமாக்கி கண் கலங்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது .
தேவ ஊழியம் செய்யும் தீவிர மதப்பற்றுக் கொண்ட ஒரு பெண்மணிக்கு மகளாகப் பிறந்து, மென் பொறியாளராக பணியாற்றும் மணிகண்டன் என்ற இந்து இளைஞனை மணந்து கொண்டதால் பெற்ற தாயாலேயே புறக்கணிக்கப்பட்ட துவக்கப்பள்ளி ஆசிரியையான மெர்லின்… அந்த காதல் மனைவியின் மனச் சூழல் உணர்ந்த அற்புதமான கணவனான அந்த மணிகண்டன்…. விபத்தில் ஒரே மகளை இழந்த நிலையிலும் அந்தப் பள்ளியில் பிரின்சிபாலாக பணியாற்றியபடி குழநதைகளின் முன்னேற்றத்துக்கு உழைக்கும் ஒரு நல்ல மனிதர்…. அங்கே ஆசிரியையாக பணியாற்றும் அவரினும் சிறந்த அவரது மனைவி…. கணவனை இழந்த ஒரு ஆட்டோ ஓட்டும் ஏழைப் பெண்மணி…. அவரது ஒரே மகனான பள்ளி மாணவன்…. அந்த ஏழைப் பெண்மணியின் கோபக்கார அண்ணனான ஒரு ஆட்டோ டிரைவர்…. இவர்களை வைத்து பின்னப்பட்ட திரைக்கதை .
அவார்டுகளை குவிக்கும் அதே நேரம் படம் பார்ப்பவர்களை கொஞ்சமும் சோர்வடைய செய்யாமல் விறுவிறுப்பும் சுருசுறுப்புமாய் திரையில் இருந்து கண்களை விலக்க முடியாமல் கவர்ந்து வைத்துக் கொள்வது இந்தப் படத்தின் பெரும்பலம்
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மேற்சொன்ன கதாபாத்திரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதுதான் இந்த குற்றம் கடிதல் படம் .
படம் முடிந்த பிறகு சில நிமிடங்கள் இருக்கையை விட்டு எழவே முடியாத ஒரு கனமான சிலிர்ப்பு மனசை ஆக்கிரமிக்கிறது .
படம் திரையிடப்பட்டு முடிந்ததும் படம் பார்த்த அனைவரும் இயக்குனர் பிரம்மாவை கட்டிப் பிடித்து நெகிழ்ந்து பாராட்ட, பதிலுக்கு வார்த்தைகள் இன்றித் தவித்தார் அவர்.
2013 ஆண்டில் ‘தங்க மீன்கள்’இந்தியன் பனோராமா,தேசிய விருது, சென்னை சர்வதேச திரைப்பட விழா..
ஆகிய விழாக்களில்அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வென்றதை போல,
2014 ஆம் ஆண்டின் கௌரவத்தையும் ,அங்கீகாரத்தையும் ‘குற்றம் கடிதல்’ வென்று கொண்டு இருக்கிறது.
போகிற போக்கைப் பார்த்த்தால் ஒவ்வொரு வருடமும் ஜே எஸ் கே சதிஷ்குமார் தயாரிக்கும் ஒரு படம் உலகப்பட விழாக்களில் இனி மகுடம் சூடி வரும் போல இருக்கிறது.
விளைவாக,
”ஒரு வருடம் தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால்…
அதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் அல்ல. உழைப்பும், தேர்ந்து எடுக்கும் திறனும்தான் காரணமாக இருக்கும்.”
என்று எல்லோராலும் பாராட்டப்படுகிறார் சதிஷ்குமார்.
இயக்குனர் பிரம்மாவுக்கும் தனக்கும் கிடைக்கும் பாராட்டுகளால் உற்சாகத்தில் இருக்கும்,
சதிஷ்குமார் என்ன சொல்கிறார்?
“என்னுடைய பட நிறுவனமான ஜே எஸ் கே பிலிம்கார்ப்பரேஷன் தொடர்ந்து தரமான படங்களை வழங்கி
பெரும் மதிப்பு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.
இந்தியன் பனோரமாவை தொடர்ந்து தற்போது சென்னை சர்வதேச பட விழாவிலும் குற்றம் கடிதல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது சந்தோஷமாக இருக்கிறது
கடந்த வருடம் தங்க மீன்கள் பெரும் பெயரையும் புகழையும் ஈன்றதைபோல ,
இந்த வருடம் குற்றம் கடிதல் ஈன்று வருவதில் பெரும் மகிழ்ச்சி.வெற்றி பெறுவது ஒரு வாடிக்கையாக இருப்பதும் பெருமை.
இந்த பெருமையே எனக்கு மேலும் இது போன்ற படங்களை தயாரிக்க உத்வேகம் தருகிறது.
ஹாலிவுட் நிறுவனமான R V Weinstein எப்படி விருதுகளுக்கான படங்களை தயாரிப்பதில் உலகப் புகழ் பெற்றதோ, அப்படி ஒரு புகழை என் நிறுவனமும் அடையும் ” என்கிறார் நம்பிக்கையோடு !
வாழ்த்துகள் ! இந்த விருதுகள் உங்கள் நிறுவனத்துக்கு கிரீடங்களாக இருக்கட்டும் !