
கவிதாலயா புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தயாரிக்க, எஸ் வி சேகர் விசு, சாந்தி கிருஷ்ணா நடிப்பில் , விசு எழுதி இயக்க , 1982 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும்புகழ் பெற்ற படம் மணல் கயிறு .
இன்றும் பல்வேறு இடங்களில் பல்வேறு விஷயங்களுக்காகக் குறிப்பிட்டுப் பேசப்படும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது .
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்க, விசு, எஸ் வி சேகர், அஷ்வின் சேகர், பூர்ணா , ஜெகன், ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு,
எஸ் வி சேகர் கதை திரைக்கதை எழுதி வசன மேற்பார்வையாளராகவும் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்ற , யாருடா மகேஷ் படத்தை இயக்கிய மதன் குமார் வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னோட்டததையும் மூன்று பாடல்களையும் திரையிட்டனர் .
மணல் கயிறு முதல் பாகத்தில் இருந்த விசு , எஸ் வி சேகர், குரியகோஸ் ரங்கா ஆகிய மூவரும் அதே பாத்திரத்தில் இந்தப் படத்திலும் வருகின்றனர் .
முதல் பாகத்தில் எஸ் வி சேகர் எட்டு கண்டிஷன்கள் போடுவார் . இதில் அவரது மகளாக நடித்துள்ள பூர்ணா எட்டு கண்டிஷன்கள் போடுகிறார் .
அதில், எட்டு கண்டிஷன்களையும் ஏற்று வரும் பெண்ணாக சாந்தி கிருஷ்ணா நடிப்பார். இதில் எட்டு கண்டிஷன்களையும் ஏற்று வரும் மாப்பிளையாக அஷ்வின் சேகர் நடித்துள்ளார் .
அதாவது எஸ் வி சேகருக்கு மாப்பிள்ளையாக அவரது மகன் அஷ்வின் சேகர் நடித்துள்ளார் .
விசு கந்தர்வக் குரல் முதுமை காரணமாக கொஞ்சம் சுரம் மாறி இருப்பது மனசுக்கு வலிக்கிறது . (உடம்பை பாத்துக்குங்க சார் )
திரையிடப்பட்ட மூன்று பாடல்களில் ஒன்று நாயகன் நாயகி நெருக்கப் பாடலாகவும் இரண்டு பாடல்கள் குழு நடனப் பாடல்களாகவும் இருந்தன.
பூர்ணாவை வளைச்சு வளைச்சு அழகாக காட்டி இருந்தார்கள் (இதுக்கு மேல சொன்னா சென்சார் போர்டு ஆபீசர் எஸ் வி சேகர் கட் பண்ணிடுவார் )
நிகழ்ச்சியில் பேசிய எஸ் வி சேகர்
” பாலச்சந்தர், மவுலி, விசு எல்லாரும் நாடகங்கள் நடத்திகிட்டு இருந்தப்போ ஒரு நாள் ‘விசுவுக்கு சீரியஸா எழுத வரும் காமெடி வராது’ன்னு யாரோ கமென்ட் அடிக்க,
“எனக்கும் காமெடி வரும் . ஒரே வாரத்துல எழுதிக் காட்டறேன் . இப்பவே சொல்றேன் நாடகத்தொட பேரு மோடி மஸ்தான்’ அப்படின்னு சொல்லிட்டு விசு போயிட்டாரு .
சொன்ன மாதிரியே எழுதி கொண்டு வந்தார் . அந்த நாடகம் நூறு முறைக்கு மேல மேடை ஏற்றப்பட்டது . அப்புறம் விசு குடும்பம் ஒரு கதம்பம் மூலமா டைரக்டர் ஆனார் .
அடுத்து அவர் மோடி மஸ்தான் நாடகத்தை படமா ஆக்கினர் , அந்தப் படம்தான் மணல் கயிறு.
என் மகன் அஷ்வின் நடிகர் ஆகணும்னு முடிவாகி வேகம் படத்துல ஹீரோ ஆனார் . அடுத்து நினைவில் நின்றவள் படம் . அது ஒழுங்கா மார்க்கெட்டிங் பண்ணப்படாத படம் . அதனால வெளிய தெரியல .
அப்போதான் மணல் கயிறு பத்தி பேச்சு வந்தது . அதையே ரீமேக் [பண்ணலாம்னு சொன்னாங்க . எனக்கு அதுல உடன்பாடு இல்ல. மணல் கயிறு மணல் கயிறுதான். அதனால அதன் ரெண்டாவது பாகத்தை எடுத்து இருக்கோம்.
இது குடும்பத்தோடு பார்க்க முடிகிற சுத்தமான யு சான்றிதழ் படம் ” என்றார் .
நடிகர் ஜெகன் பேசும்போது ” நான் முதன் முதலா சென்னை வந்தபோது மவுன்ட் ரோட்ல பார்த்த முதல் சினிமா பேனர் மணல் கயிறு பட பேனர்தான் .
மறக்க முடியாத அந்த படத்தோட இரண்டாம் பாகத்தில் நடிப்பது பெருமையான விஷயம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் விசு சாரோடு உட்காந்து பேசியது எல்லாம் மறக்க முடியாத அனுபவம் .
மணல் கயிறு என்று பெயர் கே. பாலச்சந்தர் சார் வச்ச பெயர் என்று விசு சார் சொன்னார் ” என்றார் .
இயக்குனர் மதன் குமார் பேசும்போது ” மணல் கயிறு சரித்திரம் படைச்ச ஒரு படம் . அதோட இரண்டாம் பாகத்தை இயக்குவது பெருமையான விஷயம்.
இப்ப காமெடி என்பது கூட பெரும்பாலும் பேய் சம்மந்தமான விசயமாவே இருக்கு . ஆனா இந்த படம் அப்படி இல்ல குடும்ப காமெடி .
என்னோட யாருடா மகேஷ் படத்துல ஜெகனும் லொள்ளு சபா சுவாமி நாதனும் சேர்ந்து காமெடியில் செம லூட்டி அடிச்சு இருப்பாங்க
இந்தப் படத்திலும் ஜெகன்— சுவாமிநாதன் காமெடி ரகளை கூட்டணி தொடருது ” என்றார் (டா……மிட்டட்ட்ட்…. !)
நாயகன் அஷ்வின் சேகர் தனது பேச்சில் ” அப்பாவோட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு பல வாரிசு நடிகர்களுக்கு கிடைச்சு இருக்கலாம் .
ஆனா எனாக்கு அப்பா நடிச்ச படத்தோட இரண்டாவது பாகத்தில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம். தவிர மணல் கயிறு அப்படி ஒரு கிளாசிக் படம் .
அதன் தொடர்ச்சியா வரும் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் .
எனக்கு எல்லோருடைய ஆதரவும் வேணும் ” என்றார்
மணல் கயிறு 2 அஷ்வின் நடிப்பு வாழ்வில் வெற்றித் தேரை இழுக்கும் வடக் கயிறாக ஆகட்டும் !