மருது @ விமர்சனம்

marudhu 5

கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதா ரவி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிப்பில், குட்டிப் புலி, கொம்பன் படங்களை இயக்கிய  முத்தையா  இயக்கி இருக்கும் படம்  மருது. 

படம்  எருதா ? இல்லை  விருதா ?  பார்க்கலாம் 
ராஜபாளையம் மார்க்கெட்டில் இருக்கும்  மூட்டை  தூக்கும் தொழிலாளி  மருது (விஷால்) . அவனது  பாசக்கார அப்பத்தா மாரியம்மா (கொலப்புள்ளி  லீலா ). நண்பன் கொக்கரக்கோ (சூரி)
மருதுக்கும்   பாக்கிய  லட்சுமி  என்ற  பெண்ணுக்கும் (ஸ்ரீதிவ்யா) எதிர்பாராத மோதல் வருகிறது . அதன் முடிவில் ‘அந்தப் பெண்ணை மருது  லவ் பண்ணி  திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று  கூறுகிறார் அப்பத்தா .
 அதனால் பாக்கிய லட்சுமியை காதலிக்க  ஆரம்பிக்கிறான்   மருது.
marudhu 4
பாக்கியலட்சுமியின் அப்பா சங்கர பாண்டியன் (மாரிமுத்து) ஒரு வக்கீல் . 
அவரது மனைவி சிலம்பம் மாரியம்மாவை  (ஆதிரா  பாண்டி லட்சுமி) கொலை செய்த   காட்டுத்தனமான தாதாவும்  அரசியல் ஆர்வம் உள்ளவனுமான ரோலக்ஸ் பாண்டியனுக்கு (ஆர்.கே. சுரேஷ் ) ,
 தண்டனை  வாங்கிக்  கொடுக்க  வக்கீல்  முயல்கிறார் . 
ரோலக்ஸ்  பாண்டியன் எம் எம் ஏ  பதவிக்காக   பயில்வான் என்ற சீனியர் அரசியல்வாதியை  (ராதாரவி) நம்பி  இருக்கிறான் .
அதே நேரத்தில் ரோலக்ஸ் பாண்டியனின் அக்கா கணவனுக்கும் (அருள்தாஸ் ) பயில்வானுக்கும் பதவி பங்கீடு விசயத்தில் பகை . 
marudhu 7
சிலம்பம் மாரியம்மா கொல்லப்பட்ட வழக்குக்காக  வக்கீலும் பாக்ய லட்சுமியும் கோர்ட்டுக்கு வர, அவர்களை  ரோலக்ஸ்  பாண்டியன் ஆட்கள் கொலை செய்ய  முயல , 
அப்பாவும் மகளும் மருதுவிடம் தஞ்சம் அடைய , 
ரோலக்ஸ்  பாண்டியனுக்கும் மருதுக்கும்  மோதல் ஏற்பட்டு தீவிரமாக வலுக்கிறது . 
அதன்  விளைவு என்ன ஆனது என்பதே  மருது . 
பாட்டி பேரன் செண்டிமெண்டை வைத்து  படத்தைக் கொண்டு  போகிறார் இயக்குனர்  முத்தையா . 
நீண்ட  வக்கணையான விஸ்தாரமான  எக்குத்தப்பும்  எகனை மோகனையும் வசனங்கள் படம் முழுக்க வருகின்றன . அவற்றில்  பஞ்ச் வசனங்களும்  இருக்கின்றன . பஞ்சு வசனங்களும் இருக்கின்றன .
marudhu 6
மதுரையில்  திமுககார்களால்   வெட்டிக் கொல்லப்பட்ட  கம்யூனிஸ்டு  கவுன்சிலர் லீலாவதி விவகாரத்தை சிலம்பம் மாரியம்மாள் கதா பாத்திரத்துக்கு கொடுத்து இருக்கிறார்கள் 
பாக்ய லட்சுமியை காதலிக்க வேண்டும் என்பதற்கு அப்பத்தா  சொல்லும் காரணம், அம்மத்தாவை அப்பத்தா  என்று  மருது அழைப்பதற்கான காரணம் , மருதுவின் பெயர்க் காரணம்
–போன்ற சில  காட்சிகள்  பாராட்ட வைக்கின்றன . 
நேட்டிவிட்டியை  சூழல்களிலும்  வசனத்திலும் கொண்டு  வருகிறார் முத்தையா .
வேல்ராஜின்  ஒளிப்பதிவு, ஃபிரேம்கள் , ஷாட்கள் படத்துக்கு ஆகப் பெரும்பலம் குறிப்பாக  ஏரியல் ஷாட்கள், ஸ்லோ மோஷன்  ஷாட்கள்,
படத்துக்கு அவர் கொடுத்து  இருக்கும் டோன், ஜிகினா  இல்லாத யதார்த்த  ஒளிப்பதிவு  ஆகியவை அருமை .
marudhu 1
பொருத்தமான கெட்டப், உடல் மொழிகள் , புழுதியில்  புரளல் என்று மருது கேரக்டருக்கு உழைத்துள்ளார்  விஷால், சண்டைக் காட்சிகளில்  ஒரு புள்ளி அதிகமாகவே பட்டையைக் கிளப்பி இருக்கிறார் .
நடிகர் சங்க வெற்றியின் ‘கெத்’தை அங்கங்கே வசனங்களில் காட்டிக் கொள்கிறார் 
வில்லன் ரோலக்ஸ்  பாண்டியாக வரும் ஆர்.கே. சுரேஷ் தோற்றம், ஷார்ப்பான பார்வை, அழுத்தமான குரல் , என்று  அராஜக  வில்லனாக மிரட்டுகிறார் .
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை போட்டு இருக்கிறார் . 
Producer RK Suresh @ Tharai Thappattai Movie Press Show Stills
படம் முழுக்க பல நகைச்சுவைப் பட்டாசுகளை கொளுத்திப் போடும் சூரி , கிளைமாக்ஸ் காட்சியில் சோகமாகவும் நடிக்கிறார் 
பாக்ய லட்சுமியாக வரும் ஸ்ரீதிவ்யாவின் தோற்றப் பொருத்தம் சிறப்பு என்றாலும்,   ராஜபாளையம் திருவிழாவில் தொலைந்து போன விசாகப்பட்டினத்துப் பாப்பா  மாதிரியே தயங்கி தயங்கி நடிக்கிறார்  எனி பிராப்ளம் திவி ?
அப்பத்தாவாக வரும் மலையாள ஆயா,  கொல்லப்புள்ளி  லீலா செய்யும் இம்சைதான் தாங்கல .
படம் முழுக்க வசனத்தை ஒழுங்காகப் பேசாமல் போதுமான உதட்டசைவு தராமல் டப்பிங்  பேசியவரின்  டங்குவாரை  அறுத்து இருக்கிறார் .
பின்பாதியில் பர்பார்மன்ஸ் பரவாயில்லை என்றாலும் அவரது செயற்கையான  நடிப்பை  பொறுத்துக் கொள்ள முடியவில்லை . 
marudhu 777
ஒரு நிலையில் டப்பிங்  பேசியவரே மலையாள  வாசனையில் பேச வேண்டிய துர்பாக்கிய நிலையை உருவாக்கி விடுகிறார்  . 
என்ன பங்காளிகளா …ராஜ பாளையம் மாரியம்மா கேரக்டரில் நடிக்க ஒரு தமிழ்நாட்டு  அப்பத்தா கூடவா  கிடைக்கல ? என்ன கொடுமை பங்குகளா ….
சிலம்பம் மாரியம்மாவாக வரும் கூத்துப்பட்டறை ஆதிரா பாண்டி லட்சுமியின் முகம் வித்தியாமாக இருக்கிறது . பர்ஃபக்டாக நடிப்பது ஒகே .
ஆனால்  நடிப்பில் இன்னும் கொஞ்சம் இலகுத்தன்மை  வேண்டும் ஆதிரா ஏலியன் மாதிரி பிஹேவ் பண்ணக் கூடாது 
marudhu 3
பயில்வான் கேரக்டரில் ராதாரவி ஜஸ்ட் லைக் தட் கம்பீரம் காட்டுகிறார் .
 விஷாலின் அப்பத்தாவிடம் ராதாரவியைக் காட்டி ஒருவர் “இவர் கிட்ட கேட்டா, உன் பையனுக்கு ஏதாவது  பதவி வாங்கித் தருவார் ” என்று சொல்ல
அதற்கு அந்த அப்பத்தா  “என் பையனுக்கு பதவி  வாங்கித் தர இவரு யாரு ?
அவன் நினைச்சான்னா  எந்தப் பதவியையும் யாருகிட்ட இருந்தும் எப்படி எடுத்துக்கணுமோ அப்படி  எடுத்துக்குவான் ” என்று நீட்டி  முழக்கிப் பேசுகிறது . 
ராதாரவி இருந்த நடிகர் சங்க செயலாளர் பதவியில்  இப்போது விஷால் இருப்பதை நினைவில் கொண்டால் இந்த வசனத்தின் கல கல பிளஸ் லக லக எஃபெக்ட் புரியும் .
marudhu 77
அனேகமாக ராதாரவி  நடித்து விட்டுப் போன பிறகு அந்த வசனத்தை  எடுத்து இருப்பார்கள் போல . ஹ ஹா ஹா!
ரகசியமாக ஜன்னி  வரவைத்துக் கொலை செய்வது எப்படி என்று,  ஒரு பகீர் பாட்டி வைத்தியம் சொல்கிறார்கள் , வயிறு கலங்குது .
நாடு இருக்கிற நிலையில் எந்த பயபுள்ளையாவது  யாருக்காவது டிரை பண்ணாம இருக்கணும் சாமி !
இமான் இசையில் அக்கா பெத்த ஜட்கா வண்டி  பாடல் மட்டும் கொஞ்சம் உற்சாகம் ஊட்டுகிறது   பின்னணி இசை ஒகே ரகம்தான் 
marudhu 2
பால்  தயிரா ஆவதற்குள்,  பத்து முறை சேர்ந்திருப்போம் ” போன்ற வரிகளில்  சபாஷ் போட வைக்கிறார் வைரமுத்து 
அனல் அரசுவின் சண்டை அமைப்பு  பொறி பறக்க வைக்கிறது . 
மொத்தத்தில்  
மருது ….  மஞ்சள் , பச்சை மிளகாய் சேர்த்து மணக்க மணக்க தாளித்த,  பழைய சோறு ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →