துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில்,
ஷ்ரத்தா என்டர்டைன்மென்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிக்க,
அரவிந்த்சாமி, ஷ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன் , ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசுரன் படம் ஆகஸ்டு மாதத்தில் திரைக்கு வருகிறது .
இதையொட்டி நடந்த டீசர் வெளியீட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட டீசர் , ஊட்டியில்,
இரவில் நடக்கும் சம்பவங்களோடு அழகான காட்சிகளோடு அதிர வைக்கும் நிகழ்வுகளோடு விரிந்தது .
நிகழ்ச்சியில் பேசிய கிட்டி , ” கார்த்திக் நரேன் போன்ற ஒரு பர்பெக்டான இயக்குனரை – இது போன்ற ஓர் அற்புதமான குழுவை,
அண்மைக் காலங்களில் நான் பார்க்கவில்லை . அவருக்கு இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது . ” என்றார் .
“ஒரு காட்சியை பாதி எடுத்து விட்டு பல நாட்கள் கழித்து மீதியை எடுப்பார்கள் . ஆனால் ஒரு சிறு தவறோ மாற்றமோ இல்லாமல் ,
அப்படியே மறு உருவாக்கம் செய்து அசத்தினார்கள்” என்றார் நடிகர் தாடி வெங்கட்
ஒளிப்பதிவாளர் சுஜீத் சாரங் பேசும்போது ” துருவங்கள் பதினாறு படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் இணைந்து இருக்கிறோம் .
அந்தப் படத்தில் பேப்பரில் என்ன எழுதினாரோ அதை அப்படியே ஒரு ஷாட் கூட , கூடவோ குறையவோ இல்லாமல்,
சொன்ன நாட்களின் எண்ணிக்கையில் எடுத்து முடித்தார் . இந்தப் படத்தில் அதே நேர்த்தி . சொல்லப் போனால் இன்னும் அதிக நேரத்தி ” என்றார் .
“இப்படி ஒரு படத்தில் நடித்ததை என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன் ” என்றார் சந்தீப் கிஷன் .
அரவிந்த்சாமி பேசுகையில் ” துருவங்கள் பதினாறு படத்தின் நேர்த்தியை பார்த்து நான் இந்தப் படத்தில் சந்தோஷமாய் நடித்தேன் .
அந்த சந்தோசம் இப்போது அதிகமாகி இருக்கிறது . அந்த அளவுக்கு மிக சிறப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறார் . படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ” என்றார் .
இயக்குனர் கார்த்திக் நரேன் தனது பேச்சில் ” இது ஒரு மிஸ்டரி திரில்லர் படம் . படபிடிப்பு ஊட்டியில் நடந்த பல நாட்களில் கடும் குளிர்.
தவிர படத்தில் அந்த நேரத்தில் பல மழைக் காட்சிகளும் உண்டு . படத்தில் ஈரமான குளிர் சூழல் அதிகம் வரும் . எனவே படப்பிடிப்பு சிரமமான ஒன்று .
அந்த சமயத்தில் நடிக நடிகையரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நினைத்தபடி படத்தை உருவாக்குவது கஷ்டம் .
ஆனால் எனக்கு எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது .
ஆகஸ்ட் மாத கடைசி வார வாக்கில் படம் திரைக்கு வருகிறது . படம் எல்லோரையும் கவரும் என்று நம்புகிறேன் ” என்றார் .
மையத்துக்கு வர வாழ்த்துகள் கார்த்திக் நரேன் !