கௌதமியால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான கமல்

Papanasam Press Meet Stills (31)
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா ஆகியோர் தயாரிக்க , கமல்ஹாசன் , கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, டெல்லி கணேஷ், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோ நடிக்க ,
ஜெயமோகனின் வசனத்தில் ஜீத்து ஜோசப் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் பாபநாசம். இதே இயக்குனர் மலையாளத்தில் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் தமிழ் மறுஉருவாக்கம்  இது

திருஷ்யம் கதையை அப்படியே கொடுப்பதற்குப் பதில், திருநெல்வேலி–  பாபநாசம் பகுதியின் பின்னணியில்,  அந்த நெல்லை வட்டார வழக்குத் தமிழை பயன்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள் . மீண்டும் கதாநாயகியாக (கதை நாயகி ?) கவுதமி நடிக்கிறார். விஸ்வரூபத்தில் ஆரம்பித்து கமலின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறி விட்ட ஜிப்ரான்தான் இந்தப் படத்துக்கும் இசை .

படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டுக் காட்ட  பத்திரிக்கையாளர்களை சந்தித்தது கமல் உள்ளிட்ட பாபநாசம் குடும்பம் . (பாபநாசம் படக்குழுவை அவர்கள் அப்படிதான் அழைத்துக் கொள்கிறார்கள் )

Papanasam Press Meet Stills (7)

இரண்டு முன்னோட்டங்களை காட்டினார்கள்.

 மகாநதி படத்தில் வந்தது போன்ற  தோற்றத்தில் சுயம்பு லிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் கமல். நெல்லைத் தமிழ்  பேசுகிறார் .  பஸ் பயணம், குடும்ப சிக்கல்கள், பெண் குழந்தைகளுடனான புரிதல் என அசத்துகிறார் .

.கௌதமி உற்சாகமாக நடித்து இருக்கிறார் . கமலுக்கும் தனக்கும் சேர்த்து காஸ்டியூம் டிசைன் செய்து இருக்கிறார் . வில்லியாக தோன்றும் கீதா பிரபாகர் கவனம் கவர்கிறார் .

படத்தின் கதையை சொல்கிறது முன்னோட்டம்.

எல்லோரையும் வரவேற்றுப் பேசிய  தயாரிப்பாளர் — நடிகை ஸ்ரீ பிரியா

Papanasam Press Meet Stills (27)
” முக்கியமாக இது பேய்ப் படம் அல்ல ” என்றார் . நல்ல ஜோக்தான். ஆனால் பலருக்கும் புரியாததால் பெரும்பாலோனோர் புன்னகைக்கக் கூட இல்லை . “‘சில படங்களில் குடும்பச் சித்திரம் என்று போடுவார்கள் . இது உண்மையான குடும்பச் சித்திரம் . பெண் குழந்தைகளை வைத்துள்ள தந்தையருக்கு பிடித்த படமாக இருக்கும் .
பெற்ற மகளுக்கு ஒரு பிரச்னை  என்றால் அப்பன் எப்படி பொங்கி எழுவான் என்பதை சொல்லும் படம் இது . இன்றைக்கு பெண் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய செய்தி இருக்கிறது ” என்றார் ஸ்ரீபிரியா .

பாபநாசம் படத்தில் நடித்துள்ள எல்லாருக்கும் நெல்லைத் தமிழைச் சொல்லித் தந்த எழுத்தாளர் சுகா பேசும்போது

Papanasam Press Meet Stills (20)
“படத்தின் முதல் நாளன்று கமல் என்னிடம் ‘ எனக்கு நெல்லைத் தமிழ் பேசத் தெரியாது. அதனால் கிளிப்பிள்ளைக்கு சொல்லித் தருவது போல எனக்கு  சொல்லிக் கொடுங்கள் ‘ என்றார் . கடைசிவரை அந்த வார்த்தையை காப்பாற்றினார் . கடைசிவரை அப்படியே கேட்டுக் கேட்டுப் பேசினார்.

பொதுவாக இரண்டு எழுத்தாளர்கள் ஒரு கூரையின் கீழ் பணியாற்ற முடியாது என்பார்கள் . ஆனால் இந்தப் படத்தில் கமல்ஹாசன் , ஜெயமோகன் , நான் , மற்றும் கவிபெரியதம்பி உட்பட நான்கு எழுத்தாளர்கள் இணைந்து பணியாற்ற முடிந்தது அது கமல் அவர்களால் மட்டுமே சாத்தியம்  ” என்றார் . தூங்கா வனம் படத்துக்கு வசனம் எழுதுபவர் இந்த சுகாதான்

“இந்த சின்ன வயசிலேயே கமல் சாருடன் இவ்வளவு பெரிய படத்தில் இவ்வளவு முக்கியமான கேரக்டர் நடிக்கக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் .

Papanasam Press Meet Stills (22)
எனக்கு எல்லாமே கமல் சார்தான் . அவரிடம் இருந்து எவ்வளவோ கற்றுக் கொண்டேன் . இனியும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது ” என்றார் நிவேதா தாமஸ் .

எம் எஸ் பாஸ்கர்  தன் பேச்சில், “உத்தம வில்லனில் நடித்து விட்டு டப்பிங் பேசிக் கொண்டு இருந்த போது இந்தப் படத்தின் இயக்குனர் அங்கே வந்தார் .

Papanasam Press Meet Stills (23)
அவரிடம் கமல் அண்ணா என்னைக் காட்டி ‘ இவரு நெல்லைத் தமிழ் நல்லா பேசுவார்’ னு சொன்னங்க. அந்த ஒற்றை வாக்கியம்தான் எனக்கு இந்த பட வாய்ப்பை பெற்றுத் தந்தது ” என்றார்

பேச வந்த நடிகர் அருள்தாஸ் மேடையில் கமல் இருப்பதால் பதற்றத்தில் பேசாமல் உட்கார்ந்தார் .

டெல்லி கணேஷ் பேசும்போது “கமல் சாருடன் எத்தனையோ பல படங்களில் நடித்து இருக்கிறேன் . அதெல்லாம் நான் செய்த புண்ணியம் . இந்தப் படத்துல அவர் நெல்லைத் தமிழை அவ்வளவு முயன்று அற்புதமா பேசி இருக்காரு.

Papanasam Press Meet Stills (24)
தெனாலி படத்தில் இலங்கைத் தமிழைப் பேச அவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல. அவ்வளவு சிரத்தை எடுத்து பேசினதாலதான் அது அப்படி பிரம்மாதமா வந்தது .
இந்தப் படத்து ஷூட்டிங்ல அவரோட இருக்கும்போது திடீர்னு தன்னை மறந்து பாடுவார் . தமிழ்ல இருந்து இந்திக்குப் போவார் . வேற மொழிப் பாட்டை பாடுவார் . இந்தப் படமான பாபநாசத்தில் எனக்கு இன்னும்  புண்ணியம் கிடைத்தது ” என்றார்.

”  படத்தில் பின்னணி இசையும் ஒரு முக்கியக் கேரக்டரா இருக்கும் ” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

கவுதமி தனது பேச்சில்

Papanasam Press Meet Stills (28)
“கமல் சார் பண்ணாத கேரக்டர் இல்ல. நடிக்காத சீன் இல்லை . இனிமே அவர் என்னதான் பண்ண முடியும் அப்படின்னு ஒரு கேள்வி பலருக்கும் இருக்கு . அந்தக் கேள்விக்கு பதில் இந்தப் படத்தில் கிடைக்கும் ” என்றார்

“படக் குழுவினர் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . அதனால் படத்தை 39 நாளில் முடிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி ” என்றார் தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ்

கமல் பேசும்போது ” என்னமோ இந்தப் படம் என்னுடைய சாதனை என்பது போல எல்லோரும் என் பெயரை மட்டுமே இங்கே சொன்னார்கள். அப்படி அல்ல. ஒரு பாத்திரம் மட்டும் சரியாக இருந்தால் சமையல் சிறக்காது. எல்லா பாத்திரங்களும் பொருத்தமாக இருக்க வேண்டும் . இந்தப் படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்தார்கள்.

இங்கே பேசிய ஸ்ரீபிரியாவும் நானும் நடித்த ஆரம்ப காலப் படங்களில் நாங்கள் ரசிகர்களால் பாத்திரங்களின் பெயராகத்தான் நினைவு கூறப்பட்டோம் . அது மீண்டும் இந்த பாபநாசம் படத்தில் நடக்கும் .

இங்கே பேச வந்து விட்டு பயந்து போனது போல பேசாமல் போன அருள்தாஸ் படத்தில் சிறப்பாக நடித்தார் .

பாப நாசத்தில் தனக்கு புண்ணியம் கிடைத்ததாக குறிப்பிட்ட டெல்லிகணேஷ் என்னோடு பல படங்களில் சேர்ந்து நடித்ததுஅவர் செய்த  புண்ணியம் என்றார்  . அவர் எல்லாப் படங்களையும் அப்படி சொல்லிட்டாரு . ஆனா இந்தப் படம் உண்மையிலேயே அவருக்கு பெருமை சேர்க்கும் .

Papanasam Press Meet Stills (30)

படத்தில் என் இளைய மகளாக நடித்திருக்கும் எஸ்தர் பன்மொழி நடிகை . சிறப்பா நடிச்சு இருக்கார்.

சுகா சொன்னது போல இரண்டு எழுத்தாளர்கள் ஒரு கூரையின் கீழ் பணியாற்ற முடியாமல் போகலாம் . ஆனால் நாலு பேர் பணியாற்றலாம் . மத்தியஸ்தத்துக்கு ரெண்டு பேர் இருக்கிறார்களே .

 உண்மையில் எனக்கு இந்தப் படத்தில் நெல்லைத் தமிழ் சொல்லிக் கொடுக்க ஒருவர் தேவை என்ற நிலையில் சுகாவை எனக்கு சொன்னதே ஜெயமோகன்தான் . ஒரு சரியான எழுத்தாளரை இன்னொரு நல்ல எழுத்தாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

நான் இந்தப் படத்தில் கவுதமியை நடிக்க வைத்து பாதிப் படம் வரை போன போது எனக்கு ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சியே வந்து விட்டது . இவ்வளவு நல்ல நடிகையை இத்தனை நாளாக வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்து விட்டோமே என்று . அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார் . நான் இதை அவர் மேல் உள்ள பர்சனல் இன்ட்ரஸ்ட் காரணமாக சொல்லவில்லை . ஒரு ரசிகனாக இருந்தும் சொல்கிறேன் .

 இன்னொரு வகையில் அவர் கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்தது கூட நல்லதுதான் . கொஞ்சம் நகர்ந்து நின்றி சினிமாவை பார்த்த காரணத்தால் கௌதமி இப்போது இன்னும் சிறப்பாக நடிக்கிறார் .

மொத்தத்தில் பாசம் நாசமாகக் கூடாது என்பதை சொல்ல வரும் படம் பாபநாசம் ” என்றார் .

அது சரி !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →