பாபநாசம் @ விமர்சனம்

Papanasam New (3)

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா ஆகியோர் தயாரிக்க,

கமல்ஹாசன் கௌதமி , கலாபவன் மணி , இளவரசு , அருள்தாஸ் ஆகியோர் நடிக்க ,

ஜீத்து ஜோசப் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் பாபநாசம் . மலையாளத்தில் மோகன்லால் , மீனா நடித்து ஹிட் அடித்த திர்ஷ்யம் படத்தின் ரீமேக் .

ஐந்தாம் வகுப்புக் கூட தாண்டாத சூழலிலும் தனி ஒருவனாக முயன்று உழைத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  பாபநாசம் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டர் ஆகி , அப்படியே ரியல் எஸ்டேட் வேலையும் பார்த்து அஞ்சு ஏக்கர் நிலம், அதில் அட்டகாசமான வீடு , கடை வீதியில் ஒரு ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ் கட்டிடம் இவற்றுக்கு உரிமையாளராக…

சந்தோஷமாக – அதே நேரம் படு சிக்கனமாக வாழ்ந்து வரும்– சும்பு லிங்கம் என்றே கையெழுத்துப் போடத் தெரிந்த  சுயம்புலிங்கத்துக்கு (கமல்ஹாசன் ) ….

Papanasam New (4)ராணி என்ற மனைவியும் (கௌதமி),  மேல்நிலைப் பள்ளிப் படிப்பு  படிக்கும் செல்வி என்ற பெரிய மகளும்( நிவேதா தாமஸ் , )  நடுநிலைப் பள்ளி படிக்கும் மீனா என்ற இளைய மகளும் (எஸ்தர் அனில்)தான்  உலகம் .

கேபிள் டிவி அலுவலகத்துக்கு சேர்மதுரை என்ற உதவியாளன் ( பசங்க ஸ்ரீராம்) , நட்பு வட்டத்தில் இருக்கும் டீக்கடைக்கார சுலைமான் பாய் ( எம் எஸ் பாஸ்கர் ) காண்டிராக்டர் ஒருவர் (கவி பெரிய தம்பி ) போலீஸ் ஸ்டேசனில் காவலர் சண்முகம் (இளவரசு ) என்று,  சுயம்பு லிங்கம் தினசரி எத்ரிகொள்ளும் நண்பர்களும் கை விரலுக்குள் அடங்குபவர்களே .

அதே ஸ்டேஷனில் சப்- இன்ஸ்பெக்டராக இருக்கும் சுரேஷுக்கு (அருள்தாஸ்)  சுய்மபுலிங்கம் மீது நல்ல அபிப்ராயம்  இருந்தாலும் , அடாவடியாக நடந்து கொள்வதிலும் லஞ்சத்தை அடித்துப் பிடுங்குவதிலும் ‘சிறப்பாக’ செயல்படும் பெருமாளுக்கும் (கலாபவன் மணி ) சுயம்பு லிங்கத்துக்கும் மட்டும் ஆகாது . அவனை சீண்டுவது சுயம்பு லிங்கத்துக்கு பொழுதுபோக்கு

எனவே சுயம்பு லிங்கத்தை சரியான சமயம் பார்த்து கருவறுக்க, காத்திருக்கிறான் பெருமாள் .

Papanasam New (6)

கேபிள் டிவி ஆபீசில் சிவாஜி படம்  பார்த்து அழுவது, புதுப் படங்கள் ஓடாததற்கு கரெக்டாக காரணம் சொல்வது, மனைவியுடன் ஃபார்ட்டி பிளஸ் ரொமான்ஸ் , பிள்ளைகள் மீது அதீத பாசம் என்று வாழும் சுயம்புலிங்கத்தின் வாழ்வில் ஒரு அருவறுப்புப் புயல் அடிக்கிறது .

சுயம்புவின் மூத்த மகள் செல்வி படிப்பு சம்மந்தமாக கேம்ப் போன இடத்தில் ஒரு அயோக்கிய மாணவன்,  செல்வி குளிக்கும்போது நிர்வாணமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு , ”என் ஆசைக்கு இணங்கினால் இதை அழித்து விடுவேன் , இல்லை என்றால்  ஆபாசப் படத்தை இணையதளத்தில் போடுவேன் ” என்று மிரட்டுகிறான்.

செல்வியின் பயத்தை பயன்படுத்திக் கொண்டு சுயம்புலிங்கம் இல்லாத சமயத்தில் வீட்டுக்கே வரும் அந்த அயோக்கியன் , செல்வியிடம் மட்டுமல்லாது ராணியிடமும் தவறாக நடக்க முயல , செல்வி இரும்புக் கம்பியால் அடித்த அடியில் அவன் செத்துப் போகிறான் . வீட்டுக்கு வரும் சுயம்பு லிங்கம் விஷயம் அறிந்து அவனை  தங்கள் தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார் .

தான் பார்த்த சினிமாப் படங்களில் வந்த  இன்வெஸ்டிகேஷன் காட்சிகளின் அடிப்படையில் திட்டமிட்டு…  இறந்தவன் வந்த கார் , செல் போன் என்று எல்லாவற்றையும் மறைக்கும் சுயம்புலிங்கம்,  சம்மந்தப்பட்ட அந்த தேதியில் தானும் தன் குடும்பமும் ஊரிலேயே இல்லை என்பது போல தடயங்களை உருவாக்குகிறார் .

Papanasam New (10)

இறந்து போனவனின் அம்மா ஓர் ஐ பி எஸ் அதிகாரி, அப்பா ஒரு நீதிபதி என்ற நிலையில் காணமல் போன மகனை தேட காவல் துறையின் முழு சக்தியும் பயன்படுத்தப்படுகிறது. 

அந்த அயோக்கிய மாணவன் இறந்து போனதையும் அதில் சுயம்பு லிங்கத்தின் குடும்பத்துக்கு தொடர்பு  இருப்பதையும் அறியும் ஐ பி எஸ் அதிகாரியும் , சுயம்பு லிங்கம் மீது கொண்ட பகை காரணமாக அதில் தீவிர ஈடுபாடு காட்டும் பெருமாளும் சுயம்புலிங்கத்தின் குடும்பத்தை  நெருங்கி கொலை வெறியோடு மடக்கி  தங்கள் கொடூரக் கரங்களை நீட்ட  முயல …

மான அவமானத்துக்குக் கட்டுப்படுகிற சுயம்புலிங்கத்தின் குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதே, இந்த  பாபநாசம்  படம்

படத்தில் கமல்ஹாசன் தவிர இன்னொரு ஹீரோவும் உண்டு . அதுதான் திரைக்கதை. சுயம்பு லிங்கத்தின் சினிமா அறிவு, ரசனை, மனைவியுடனான பாசமும் மோகமுமான  தாம்பத்யம் , பிள்ளைகள் மீதான பாசம், வெளிவட்டார நட்பு , பெருமாளுடனான கலகலப்பான பகை , மாமனார் (டெல்லிகணேஷ்) மீதான சுயம்பு லிங்கத்தின்  மரியாதை செறிந்த  பாசம் என்று சுவாரஸ்யமாக போகும் முதல் பாதி ஒரு பக்கம் ….

 அப்புறம் சஸ்பென்ஸ், பரபரப்பு , படபடப்பு , செண்டிமெண்ட் , தத்துவம் என நெகிழ வைத்து அசர வைக்கும் இரண்டாம் பாதி மறுபக்கம்   இரண்டுமே  மிக சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. படம் ஓடும் கால அளவு 3 மணி நேரம்  23 நொடிகள் . ஆனால் ஏதோ இரண்டு மணி நேரத்தில் மொத்த படமும் முடிந்தது போல ஒரு உணர்வு வருகிறது. நேரம் போவதே தெரியவில்லை என்பதுதான் படத்தின் முதல் பலம் .

Papanasam New (8)

மலையாளப் படத்தின் ரீமேக் என்பதால் அதற்கு பாபநாசம் லொக்கேஷன் கொடுத்து  நெல்லை வட்டார வழக்குக் கொடுத்ததோடு நிறுத்தி விடாமல் பாநாசம் என்ற ஊரின் சிறப்பு , அந்த சொல்லின் பொருள் என்று எல்லாவற்றையும் திரைக்கதையில் பொருத்தி படத்தை முடித்த விதம் அருமை .

இன்னொரு பக்கம் கமல் நடித்த மகாநதி படத்தை ஞாபகமூட்டும் கதை,  திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை கொண்டிருக்கும் படம் இது .

ஒரு நல்லவன் வெள்ளந்தியாக கள்ளம் கபடம் தெரியாமல்  கடைசிவரை இருந்து விட்டால் பிரச்னைகள் சூழும் போது அவன் என்ன கதிக்கு ஆளாவான் என்று சொன்ன படம் மகாநதி .

அதே போன்ற ஒரு கிராமத்து மனிதன் நல்லவனாக இருக்கும் அதே நேரம் கொஞ்சம் விவரமானவனாகவும் இருந்து தனக்கு ஒரு பிரச்னை வரும்போது அவன் மனம் நொந்து விடாமல் மூளையையும் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை சொல்லும் படம் பாபநாசம் .

ஒரு நிலை வரை ஒரு மாதிரி பயணிக்கும் கதை ஒரு சூழலுக்கு அப்புறம் எதிரெதிர் திசைகளில் பயணித்து மகாநதியாகவும் பாபநாசமாகவும் மாறுகிறது .

Papanasam New (7)

சுயம்பு லிங்கத்தை அச்சு அசல் நிஜ மனிதனாக நடமாட விடுகிறது கமல்ஹாசனின் பண்பட்ட நடிப்பு. சில ஆரம்பக் காட்சிகளில் ஓட்டாமல் இருந்தாலும்  போகப் போக  நம்மை முழுசாக ஆக்கிரமிக்கும் அளவுக்கு கதா பாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார் கௌதமி  . மகள்களாக வரும் நிவேதா தாமஸ் ,  எஸ்தர் அனில் இருவரின் நடிப்பும்…. குறும்பு, பதற்றம் , நெகிழ்ச்சி என்று எல்லா வகையிலும் பாராட்டும்படி உள்ளது .

பக்கத்தில் கமல் இருக்கும்போது நடிப்பு வராமல் போய் விடுமா என்ன ? அதனால்தானோ என்னவோ படத்தில் நடித்த எல்லா நடிகர்களுமே சிறப்பாக செய்து உள்ளனர் . குறிப்பாக ஐ பி எஸ் அதிகாரியாக நடித்து அறிமுகம் ஆகி நிறுக்கும் ஆஷா சரத் பயம்,  பதட்டம் , கோபம் , கடைசியில் நெகிழ்ச்சி என்று எல்லாம் உணர்வுகளுக்கும் நம்மை ஆட்படுத்துகிறார். ஜட்ஜாக வரும் ஆனந்த் மகாதேவன் கேரக்டரை உணர்ந்து செய்து இருப்பதும் சிறப்பு .

ஜிப்ரானின் பாடல் இசையை விட பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. அழகான பாபநாசத்தை அப்படியே திரைக்குக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளது சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு.   ஷாட்களிலும் படமாக்கிய முறையிலும் அசத்துகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப் .

Papanasam New (12)

ஜெயமோகனின் வசனத் திறமை நெல்லை வழக்கு மொழியை தருவதில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அயூப்கானின் படத் தொகுப்பு , லக்ஷ்மி நாராயணின் ஆடியோ கிராபி, டோனி  டாமின் வி எஃப் எக்ஸ் , சேதுவின் சவுன்ட் எஃபெக்ட்ஸ் அனைத்தும் முழுமையான பங்களிப்பை தந்துள்ளன.

என்றாலும் படத்தில் எல்லோரையும் விஞ்சி நிற்பது திரைக்கதையே . முக்கியமாக ஆன்ட்டி கிளைமாக்ஸ், கிளைமாக்ஸ் , போஸ்ட் கிளைமாக்ஸ் என்று ஒவ்வொன்றும் யார் உசத்தி என்று ஒன்றை ஒன்று பார்த்து முண்டா தட்டி சவால் விடும் அழகே அழகு . அதுவும் அதில் கமலின் நடிப்பு , முகபாவங்கள் , குரல் பாவங்கள் சேரும்போது ஏற்படும் உணர்வே அலாதியோ அலாதி .

பாபநாசம் … வெற்றி வாசம் !

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
கமல்ஹாசன் , ஜீத்து ஜோசப் , கௌதமி, ஜிப்ரான் ,  எஸ்தர் அனில், ஆஷா சரத் , சுஜித் வாசுதேவ், லக்ஷ்மி நாராயணன்,

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →