ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ். சந்திரஹாசனும் கமல்ஹாசனும் தயாரிக்க, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் , த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி சேது நடிப்பில், கமல்ஹாசனிடம் சுமார் ஏழு ஆண்டுகள் — நான்கு படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்த — ராஜேஷ் எம் செல்வா இயக்குனராக அறிமுகமாகும் இரு மொழிப்படம் தூங்காவனம் . தெலுங்கில் சீக்கட்டி ராஜ்ஜியம் .
பொதுவாக ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தால் அது அரங்கில் உள்ள ரசிகர்களுக்கு மட்டுமே அந்த சமயத்தில் காணக் கிடைக்கும் . அது தொலைக்காட்சிகளில் படம் பிடிக்கப்பட்டு பிறகுதான் நிகழ்ச்சிக்கு வராத ரசிகர்களை சென்றடையும் . ஆனால் தூங்காவனம் படத்தில் பாடல் வெளியீட்டு விழா நடந்த அதே சமயம் அது தமிழகம் முழுக்க 25 திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது .
அதற்கேற்ப கேமரா பொருத்தப்பட்ட குட்டி ஹெலிகாப்டர் ஒன்று அரங்கு முழுக்க பறந்து பரந்து (எழுத்துப் பிழை அல்ல) படம் பிடித்துக் கொண்டு இருந்தது . ஏ சி அரங்கில் அது தலைக்கு மேல் பறந்த போது உச்சந்தலையில் சில்லென்று காற்றடித்தது .
விழாவுக்கு படம் சம்மந்தப்பட்ட கலைஞர்கள் தவிர நடிகர் சங்கத் தேர்தலின் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் , பொன் வண்ணன் ஆகியோர் வந்திருந்தார்கள். கமல் நன்றி இல்லாதவர் என்று சரத்குமார் தாக்கி இருக்கும் நிலையில் இவர்களின் வரவு கவனிக்கப்பட்டது .
படத்தின் இரண்டு முன்னோட்டங்களை காட்டினார்கள் . என்ன சொல்லிப் பாராட்ட … !நடிப்பு தொழில் நுட்பம் எல்லாவகையிலும் ஹாலிவுட் படம் போலவே இருந்தது .
படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றை மேக்கிங் வீடியோவாக உருவாக்கி இருந்தார்கள் . ”அதை அப்படியே படத்தின் கடைசியில் இடம்பெற வைக்கலாம் ”என்றார் பொன்வண்ணன் . அந்தளவுக்கு சிறப்பாக இருந்தது.
“நிஜ வாழ்வில் கமல் பேசும் மொழி வளத்தில் கொஞ்சத்தையே சினிமாவுக்கு கமல் தருகிறார்.
தன் சிந்தனையில் கற்பனையில் வருவனவற்றில் சினிமாவில் செரிக்க முடிந்த கொஞ்சத்தை மட்டுமே சினிமாவுக்கு கமல் தருகிறார் ” என்றார் வைரமுத்து .
விஷால் ” இனி எனக்கு சினிமா உலகில் என்ன பிரச்னை வந்தாலும் இனிமேல் கமல் சாரிடம்தான் போவேன் ” என்று சொன்னபோது , அதை சீரியசாக கூர்ந்து கவனித்தார் கமல் .
விழாவுக்கு வந்திருந்த பலரும் கமலைப் பாராட்டிக் கருத்துகள் சொல்ல , அந்த வாய்ப்பை — தன்னை நோகடிக்கும் சிம்புவைப் போட்டுத்தாக்க பயன்படுத்திக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்
“இது நம்ம ஆளு பட ஷூட்டிங்குக்கு சிம்பு தாமதமாவே வந்துட்டு இருந்தார் . ஒரு நாள் நான் பொறுமை இழந்து ‘இது சரியா?’ன்னு கேட்டேன் . ” சின்ன வயசுல இருந்தே நடிச்சுட்டு இருக்கேன் இல்லியா? அதான் நடிப்பு போரடிக்குது ‘ என்றார் சிம்பு.
நான் உடனே சிம்பு கிட்ட ” அம்பத்து அஞ்சு வருஷமா கமல் சார் நடிச்சுட்டு இருக்காரு. அவர் என்ன லேட்டாவா வர்றாரு ? அவரை விடவா நீ நடிச்சுட்ட?’ன்னு கேட்டேன் ” என்று கிடைத்த அம்பில் சிம்புவை ஒரு நெம்பு நெம்பிய பாண்டிராஜ்…..
தொடர்ந்து ” தன்னிடம் உதவியாளராக இருந்த ராஜேஷை இயக்குனர் ஆக்கியதன் மூலம் இளைய தலைமுறையுடன் கமல் சார் இணைகிறார் . அதே வகையில் எனக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் வாய்ப்புத் தரவேண்டும் ” என்று கூறியதன் மூலம் ,
அந்த அம்பிலேயே ஒரு கோரிக்கை ஓலையைக் குத்தி அனுப்பவும் தவறவில்லை .