ஏ வி ஆர் புரடக்ஷஸ் சார்பாக வி ஆர் அன்புவேல்ராஜன் தயாரிக்க, கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் , யோக் ஜேபி,
சுப்ரமணியபுரம் ராஜா, அனு சித்தாரா, சுபிக்ஷா, லிசா நடிப்பில் சீயோன் இயக்கி இருக்கும் படம் பொது நலன் கருதி .
ரசிகர் நலன் கருதி பேசுவோம்.
குஜராத்தில் இருந்து வந்த பாபு- தென் மாவட்டத்தில் இருந்து வந்த உக்கிரமூர்த்தி ( யோக் ஜேபி) என்று, இரண்டு கந்து வட்டி தாதாக்கள்.

அதில் உக்கிர மூர்த்தியின் தீவிர அடியாள் ஒருவன் ( சந்தோஷ்)
அவனின் காதலி (அனு சித்தாரா) அடியாள் தொழிலை
விட்டு விடச் சொல்ல, உக்கிர மூர்த்தி மேல் உள்ள விசுவாசத்தால் அவன் மறுக்க, காதலிக்கு வேறு திருமணம் .
ஆனால் உக்கிர மூர்த்தியால் பாதிக்கப்பட்டு அவனிடமே வேலைக்கு சேர்ந்த ஒருவனுக்கு முக்கியத்துவம் தரும் உக்கிர மூர்த்தி விசுவாச அடியாளை புறக்கணிக்கிறான் .
செத்துப் போன அண்ணனை தேடும் ஒரு தம்பி (கருணாகரன்) அவனை கரித்துக் கொட்டும் அப்பா. அப்பாவியான ஓர் அண்ணி மற்றும் குழந்தை .

உக்கிர மூர்த்திக்கு ஒரு கள்ளக் காதலி!
உக்கிர மூர்த்தியின் மேனேஜரின் (முத்துராமன்) மகளை காதலிக்கும் ஓர் இளைஞன் .
காதலியைத் துறந்த அடியாள் விசுவாசி ஒரு நிலையில் பாபுவிடம் சேர்கிறான் .
இந்த நிலையில் மேலே சொன்ன கதாபாத்திரங்கள் என்ன செய்கின்றன . அதன் விளைவுகள் என்ன என்பதே இந்த பொது நலன் கருதி .
ஷாட்கள், படமாக்கல் இவற்றை சிறப்பாக செய்து இருக்கிறார் இயக்குனர் .

அடியாளின் காதலியாக நடிக்கும் அனு சித்தாரா, அடியாள் சந்தோஷ் , உக்கிர மூர்த்தியால் பாதிக்கப்பட்டு,
அவனிடமே வேலைக்கு சேரும் இருதயம் கேரக்டரில் நடித்து இருப்பவர் , உக்கிர மூர்த்தியாக நடித்திருக்கும் யோக் ஜேபி, ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் .
கால் டாக்சி டிரைவரின் காதலியாக வரும் அந்த டீச்சராக நடித்துள்ள நடிகை அழகும் சிறப்பும் .
ஹரி கணேஷ் இசையில் வரும் அந்த காதல் டூயட் இனிமை . வரிகள் படமாக்கலும் சிறப்பு.

ஏகப்பட்ட கதா பாத்திரங்கள் … இவற்றை வைத்து ஒரு மகா பாரதமே எழுதி இருக்கலாம் .
சல சல வென்று பேசுகிறார்கள் . அப்புறம் யாரவது யாரையாவது அறைகிறார்கள் .. அப்புறம் சல சல வென்று பேசுகிறார்கள்.
அப்புறம் யாரவது யாரையாவது அறைகிறார்கள்… அப்புறம்… …. இப்படியே போகிறது படம் .
துண்டு துண்டாக வரும் கதாபாத்திரங்கள் .. காட்சிகள்… கதைப் போக்குகள் .. முன்னும் பின்னுமான நிகழ்வுகள் … அலைக்கழிக்கின்றன .

இந்த படத்தை எப்படி சொல்லி இருக்க வேண்டும் . ?
கால் டாக்சி ஓட்டுபவனை காணவில்லை . அப்பா சோகத்தில் கரைகிறார் .
அண்ணி, பிள்ளையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதுவரை வேலை வெட்டி இல்லாமல் அண்ணனிடம் பாக்கெட் மணி வாங்கி டீச்சரைக் காதலித்துக் கொண்டு இருந்த தம்பி தலையில்,
குடும்பப் பொறுப்பும் அண்ணனை தேடும் வேலையும் கூடவே கால் டாக்சி வேலையும் விழுகிறது .
போலீஸ் உதவாத நிலையில் அவனாகவே அண்ணனைத் தேடத் தொடங்குகிறான் .

அந்த தேடலில் அவனது கோணத்தில் மற்ற கேரக்டர்கள் எல்லாம் ரசிகர்களுக்கு அறிமுகமாக வேண்டும் . அந்த கோணம், பயணம், செயல்பாடுகள் என்று கிளைமாக்ஸ் வரை போயிருக்க வேண்டும் .
அப்படி போயிருந்தால் திரைக்கதை ஒரு ஒழுங்குக்கு வந்திருக்கும் .
படமும் பொது மக்களால் கருதப்பட்டு இருக்கும் .