

பணம் கொள்ளை போவதை விட பரிதாபம் ….. கொள்கைகள் கொள்ளை போவதுதான் !
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன் என்ற சிறுவனை,
அவன் பிரபாகரனின் மகன் என்பதற்காகவே…
ராணுவ முகாமில் வைத்து இலங்கை ராணுவம் சுட்டுப் பொசுக்கியது எவ்வளவு கொடூரமான செயல் என்றுதான் …
உலகமே கலங்கியது.
இலங்கை ராணுவத்தின் மீது இருக்கும கொடூரமான குற்றச் சாட்டுகளில் அதுவும் ஒன்று
ஆனால் அவனது வாழ்க்கையை படம் எடுக்கப் போவதாகக் கிளம்பிய புலிப் பார்வை படக் குழு, அந்த சிறுவன் பிரபாகரனின் கீழ் ராணுவப் பயிற்சி பெற்றவன் என்பது போல காட்சிகளை வைத்தது.
அப்படிக் காட்டுவதன் மூலம் ராணுவப் பயிற்சி பெற்ற ஒருவனை சிங்கள ராணுவம் கொன்றதில் பெரிய குற்றமில்லை என்ற மாயையை உருவாக்கி,


அது இலங்கை ராணுவ செயல்பாடுகளை நியாயப்படுத்தும் விசயமாக போய் விடும் என்பதால்தான்,
அதை உண்மையான தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கின்றனர் .
இந்நிலையில் இன்று புலிப் பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற சித்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புலிப்பார்வை படத்தையும், மற்றொரு படமான கத்தியையும் வெளியிடக் கூடாது மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள்
விழாவின் ஆரம்பத்தில் அர்த்தமுள்ள மவுனம் காத்த மாணவர்கள், படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தர் பேச ஆரம்பித்த உடன், விழா நடந்த சத்யம் திரையரங்கின் மைய பகுதியில் நின்று கொண்டு “புலிப்பார்வை படத்தை வெளியிடக் கூடாது” என்று கோஷம் எழுப்ப, அங்கு இருந்த புலிப்பார்வை படக் குழுவினர், கோஷம் போட்ட மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினார்கள்.பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், மாணவர்களை மீட்டு போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.

பாரி வேந்தர் பேசுவதற்கு முன்பு பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ‘புலிப்பார்வை படத்தில் இயக்குனரின் கற்பனையும் கொஞ்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் தவறில்லை’ என்று பேசியது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
பாலச்சந்திரனை ராணுவ உடையில் காட்டுவதால் நியாயத்துக்கு புறம்பான விளைவுகள் ஏற்படும் எனும்போது அந்தக் காட்சிகளை தூக்கி விடலாம் . வேறு மாதிரி காட்சிகளை அமைத்து படம் ஆக்கலாம் . பாரி வேந்தரின் பண பலத்துக்கு முன்னால் அது ஒரு சுண்டைக்காய் சமாச்சாரம். தவறு என்று தெரியவரும்போது திருத்திக் கொள்ளலாம் .அதில் ஒன்றும் தவறில்லை
— என்று பேசத்தான் உனக்கு எவனுமே இல்லாமல் போய் விட்டானடா தமிழா !