
ஆட்டோ கிராப் படத்தில் சேரன் நடித்த செந்தில்குமார் என்ற கதாபாத்திரத்துக்கு நடந்த சம்பவங்கள் ஒரு பெண்ணுக்கு நடந்தால் எப்படி இருக்கும?
அதுதான் தமிழன் திரைப்படக் கூடம் சார்பில் கலைக்கோட்டுதயம் தயாரிக்க , முத்து ராமலிங்கத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கீர்த்தி , உதயகுமார், ஆதிப் , ஜெய் திலக், ரத்னகுமார் ஆகியோர் நடித்து வந்திருக்கும் சிநேகாவின் காதலர்கள் படம் . ஆட்டோ கிராப் படத்தில் இருந்த வாழ்வியல், இதய பூர்வமான காதல், நட்பின் வலிமை , வாழ்வின் மேஜிக் .. அந்தத் தரமே வேறு . அதற்கும் வெகு காலம் முன்பாக வந்த – ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான் படத்தின் தரமும் உயர்வானது .
கோவில்பட்டியில் பிறந்து கோவையில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கி கல்லூரியில் படிக்கும் சிநேகா என்ற இளம்பெண் (கீர்த்தி) சக கல்லூரி மாணவன் ஒருவனை காதலிக்கிறாள். ஆனால் எந்த லட்சியமும் இல்லாமல், அவளுடைய இலட்சியத்தையும் புரிந்து கொள்ளாத அவனுடைய குணாதிசயம் மற்றும் செயல்களால் அந்த காதல் உடைகிறது .

சென்னை வந்து திசைகள் பத்திரிகையில் சிநேகா பணியாற்றும் போது, ஒரு பேட்டி எடுக்கப் போன இடத்தில் உதவி இயக்குனராக உள்ள இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு அவனை காதலிக்கிறாள் சிநேகா . அந்த இளைஞனின் கதையை திருடி படம் எடுத்து விட்டு அவனை ஒருவர் ஏமாற்றி விட , மனம் உடைந்த அவன் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய்விடுகிறான் . அந்தக் காதலும் முறிகிறது,
பத்திரிக்கை பணிக்காக கொடைக்கானலுக்கு வரும் சிநேகாவுக்கு ஜாதி வெறி காரணமாக பெற்ற தந்தையாலேயே தீவைத்துக் கொளுத்தப்பட்ட காதலியை இழந்து வாழும் ஓர் இளைஞனின் நட்பு கிடைத்து அவனை காதலிக்கிறாள் . அவனால் கர்ப்பமாகிறாள் .
ஆனால் ‘ திறமை மிக்க நீ இந்தக் காட்டுக்குள் முடங்கி விடாதே’ என்று அவன் சினேகாவை சென்னைக்கே அனுப்பி வைக்கிறானாம் . சென்னை வந்து விட்ட சிநேகா ஒரு நிலையில் தன்னை பெண் பார்க்க வந்து, தனது கர்ப்பம் தெரிந்தும் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தன்னை விரும்பும் ஒருவனின் துணையோடு, மீண்டும் கொடைக்கானலுக்கு கர்ப்பமாக்கிய காதலனை தேடித் போகிறாள் .
அதே நேரம் அந்தக் காதலனின் எரிக்கப்பட்ட காதலியின் தந்தை அவனையும் கொலை செய்ய ஆள் அனுப்ப, சிநேகா மீண்டும் தன் காதலனோடு சேர்ந்தாளா ? அல்லது அந்தக் காதலன் கொலை செய்ய வந்த ஆளால் கொல்லப்பட்டானா ? சிநேகாவுடன் வந்த ‘அகல மனசு’ மாப்பிள்ளையின் விருப்பம் என்ன ஆனது ?
— என்பதே சினேகாவின் காதலர்கள் .

சிநேகாவா நடித்திருக்கும் கீர்த்தி தனிக்காட்டு ராணியாக படம் முழுக்க உலா வருகிறார். ஆனால் யாரைப் பார்த்தாலும் சடார் சடார் என்று காதலிக்கிறது இவரது கதாபாத்திரம் .
நெல்லை பாரதி எழுதிய யாதும் ஊரே பாடல் கவனம் ஈர்க்கிறது .
ப்ரபாகரின் பாடல் இசை ஒகே
வசனத்தில் வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்ற முனைப்பு தெரிகிறது . அது சில சமயங்களில் ஆர்வக் கோளாறாக இருந்தாலும் பல இடங்களில் நன்றாக இருக்கிறது .
கொடைக்கானல் தாழ்த்தப்பட்ட இளைஞன்– உயர் சாதிப் பெண்ணின் காதல்… கல்யாணம்…ஜாதி வெறி பிடித்த அப்பனால் அந்தப் பெண் எரிக்கப்படும் பகுதியை சிறப்பாக எழுதி இயக்கி.. படமாக்கி உள்ளார் இயக்குனர் முத்துராமலிங்கன்
கதையில் , திரைக்கதையில் , வசனத்தில் ஒளிப்பதிவில் , இயக்கத்தில், நடிகர்களிடம் வேலை வாங்கியதில் படத்தொகுப்பில் முழுமை இல்லை . இன்னும் சிறப்பாக இயங்கி இருக்க வேண்டும் .
சிநேகாவின் காதலர்கள் …. சினேகமில்லாத காதல்கள்
