மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடித்த ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா, சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கத்தில், இனிஷியலை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் பிரபலமான கலைஞர்களை நினைவு கூறும் வகையில் எம் கே டி, , என் எஸ் கே , எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர் , என் டி ஆர் ஆகியவர்களை அவர்களின் படக் காட்சிகளோடு நினைவு கூர்ந்து, அந்த வகையில் ஆர் கே என்று காட்டி அசத்தினார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி “ஆர் கே மாதிரி அறிவாளியை நான் பார்த்தது இல்லை ” என்றார் .
தலைவாசல் விஜய், நாயகிகள் கோமல் ஷர்மா மற்றும் நீது சந்திரா ஆகியோர் “ஆர் கே இயல்பாக நடிக்கிறார்” என்று பாராட்டினார்கள் .
ஒரு பக்கம் ஹீரோவாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் அவன் இவன் , ஜில்லா போன்ற படங்களில் ஆர் கே வில்லனாகவும் நடிப்பதை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன், விஷால் நடிப்பில் தான் இயக்கும் பாயும் புலி படத்தில் அறுபது வயது முதியவராக ஆர்கே நடிப்பதைக் குறிப்பிட்டார்.
அதே போல இப்போது வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதும் தனது படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டர் ரோலில் ஆர் கே நடிப்பதை சொன்னார் இயக்குனர் திரு .
விழாவில் நடிகர் ஆர்கே பேசும்போது தமிழ் சினிமா வியாபாரம் குறித்ததொரு அதிரடியான வழி பற்றி விளக்கினார் .
“ஏன் இப்போதெல்லாம் மக்கள் தியேட்டர் பக்கம் வருவதில்லை? மக்கள் வராததற்கு யார் காரணம்?
எல்லா வியாபாரத்திலும் விழா, பண்டிகை காலங்களில்,விசேட நாட்களில் 10 சதவிகிதம் தள்ளுபடி 20சதவிகிதம் தள்ளுபடி 30,சதவிகிதம் 40சதவிகிதம் ,60 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள். சினிமாவில் மட்டும் பண்டிகை காலங்களில்,100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது . இது என்ன நியாயம்?
சென்னையை மட்டும் வைத்து தமிழ்நாட்டை கணிக்க முடியாது.
மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் உள்ளவன் மனைவிக்குப் புடவை ,துணிமணி எல்லாம் எடுத்துவிட்டு ஆசையோடு படம் பார்க்கப் போகிறான்.அங்கே 100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் என்கிறார்கள். யோசிக்கிறான்.3 நாள் பொறுத்துக் கொண்டால் 4 வது நாள் திருட்டு விசிடி வந்துவிடும். 25 ரூபாயில் பார்த்து கொள்ளலாம் என்று இருந்து விடுகிறான்; திரும்பி வந்து விடுகிறான். அவனது பொருளாதாரப் பிரச்சினை அப்படி !
அவன் சினிமாவை ரசிப்பவன்தான். ஹீரோவை விரும்புகிறவன்தான். அவனை திருட்டு விசிடிவாங்க வைத்துவிட்டோமே? அது யார் தவறு?
அன்று கோடிக் கணக்கான பேர் பார்த்த சினிமாவை இன்று யார் பார்க்க வருகிறார்கள்? சினிமா இன்றைக்கு பணக்கார பைனான்சியர் கையில் சிக்கிக் கொண்டு விட்டது. ஏரியாக்களை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். தொழில் மாறிவிட்டது.
திருட்டு விசிடியை சரி என்று சொல்லவில்லை. ஆனால் அதை ஒழிக்க முடியவில்லையே. ஏன்? மக்கள் ஆதரவு இருக்கும் எதையும் ஒழிக்க முடிவதில்லை. அரசே நினைத்தாலும் திருட்டு விசிடியை தடுக்க முடியாது.
ஒரு காலத்தில் கேபிள் டிவிக்கு அனுமதி கிடையாது. எல்லாமே திருட்டுத்தனமாகத்தான் இயங்கின. அதன் தாக்கத்தை பார்த்து அரசே ஏற்று நடத்தும் அளவுக்கு போகவில்லையா?
ஒரு படத்தை ஓடவைப்பது யார்?
ரசிகர்கள் ஒரு ஹீரோ நடித்த ஐம்பது நூறு படங்களைக் கூட .பலமுறை பார்த்திருப்பார்கள். அதற்காகப் பல லட்சம்கூட இழந்திருக்கிறார்கள்.
என்ன பலன்? பேண்ட் வாங்கினால் சட்டை இலவசம் என்கிற காலம் இது. ஆனால் சினிமாவுக்காக இப்படி பல லட்சம் இழக்கும் ரசிகனுக்கு அதனால் என்ன பலன்?
100 நாள் படப்பிடிப்பு நடத்த முடிகிற தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்களை வாடகைக்கு எடுக்க துணிச்சல் வருவதில்லையே ஏன்? இன்று தியேட்டர்காரர்களிடம் தயாரிப்பாளர்கள் அடிமையாக இருக்கிற நிலை உள்ளது.
படம் 100 நாள் ஓடும் நம்பிக்கை இருந்தால் தியேட்டரை வாடகைக்கு எடுங்கள் உன் படம் 100 நாள் ஓடுமா என்று சவால் விட்டால் தமிழ்நாட்டு ரசிகர்களை நம்பி நான் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்.
இப்போதாவது மாற்றி யோசியுங்கள். சினிமாவில் அணுகுமுறை மாற வேண்டும். இதுவரை பணக்காரர்களிடம் இருந்த சினிமா வியாபாரம் இனி ஏழைகள் பக்கம் போகட்டும்.
யாராவது ஒரு சாதாரண ரசிகர் 1000 டிக்கெட் வாங்கினால் அவரிடம் இருந்து 900 டிக்கட்டுகளுக்கான பணத்தை மட்டும் பெற்றுக் கொள்வோம் . அந்த 100 டிக்கட் காசு , நமக்கு 900 டிக்கெட் விற்றுக் கொடுக்கும் அந்த ஏழைக்கு அந்த ரசிகனுக்கு அந்த பொது ஜனத்துக்கு போகட்டுமே ! இப்படியாக 1000 டிக்கெட் விற்க முடியும் என்றால் அந்த ரசிகனிடமே நீ ஒரு ஷோ ஓட்டிக்கொள் என்று கூறுங்கள். படத்தை நூறு நாள் ஓட்டும் பணியில் அவனும் இணைந்தால் இது முடியும் . நிச்சயம் முடியும்.
வியாபாரத்தை மாற்றி யோசியுங்கள். சினிமாவை,அதன் வியாபாரத்தை ஏழை மக்களிடம் எடுத்துச் சென்றால் சினிமாவும் வாழும்.ஏழைகளும் வாழ்வார்கள். இன்று முதல் சினிமாவை, ஏழை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.இந்த மாற்றத்தை இன்றே தொடங்குவோம்.” என்று பேசியது…
நிஜமாகவே யோசிக்க வேண்டிய விஷயம் !