தீபக் குமார் நாயர் தயாரிப்பில் மிர்ச்சி செந்தில் , ஸ்ருதிபாலா , ஜான் விஜய் ஆகியோர் நடிக்க , ஏ. வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம் ரொம்ப நல்லவன்டா நீ படத்தில் சர்வஜித், கடலோரக் கவிதைகள் ரேகா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி இவர்களுடன் இயக்குனர் வெங்கடேஷும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .
அதை விட முக்கிய விஷயம் .. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கலக்கி இருக்கிறார் ப்ப்ப்ப் ரர்ர்ர்ர்… ப்ப்ப்ப்பா… வெண்ணிற ஆடை மூர்த்தி .
படுபயங்கர வில்லியாக ஒரு கேரக்டரில், தலை முடியை ஊதித்தள்ளி டெர்ரர் காட்டுகிறார் சோனா ஹெய்டன் . (சாதரணமாவே அப்படிதானே சோனா)
“உங்கள் பிரச்னைகளை தயவு செய்து யாரிடமும் வெளியே சொல்லாதீர்கள். அதனால் தீர்வு என்று ஒன்று கிடைக்கவே கிடைக்காது . சிக்கல்தான் அதிகமாகும் என்பதையே காமெடி , காதல் , ஆக்ஷன் எல்லாம் கலந்து சொல்லி இருக்கிறேன் ” என்கிறார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ் .
படத்தின் ஒளிப்பதிவாளர் மனோ நாராயணன் வெண்ணிற இரவுகள் என்ற மலேசியத் தமிழ்ப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதற்காக மலேசிய நாட்டின் தேசிய விருது பெற்றவர்,
சரவணன் மீனாட்சி தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து உண்மையிலும் ஜோடியான அவர் மனைவி பிறந்த அதே திருவில்லா என்ற ஊரில் பிறந்தவராம் இந்தப் படத்தின் கதாநாயகி சுருதி பாலா . படம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தத் தகவலை சந்தோஷமாக சொன்னார் செந்தில் .
அது மட்டுமல்ல ” வெண்ணிற ஆடை மூர்த்தி சாரோடு நடித்தது மறக்க முடியாத அனுபவம் . ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பேசிய பேச்சை எல்லாம் கேட்டால் .. அப்பப்பா ! படத்தில் அவர் பேசியது எல்லாம் ஒன்றுமே இல்லை ” என்றார் செந்தில் ( திருவில்லா தகவலுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி தகவலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருக்கக் கடவது !)
செந்தில் உட்பட நிகழ்ச்சியில் பேசிய எல்லோருமே ” இருக்கிற வசதியை வைத்துக் கொண்டு மனம் கோணாமல் விரைவாக சிறப்பாக படம் பிடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர் இயக்குனர் வெங்கடேஷ் . அது பற்றி அவர் ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம் ” என்று பாராட்டினார்கள்.
இல்லாவிட்டால் சண்டமாருதம் வெளியான எட்டே நாளில் அடுத்த படத்தை முடித்து விட்டேன் ” என்று சொல்ல முடியுமா ?



