படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் விவேக், விஜய் சேதுபதி , தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டுப் பேசினர் .
இஷான் தேவ் இசையில் பத்திரிக்கையாளர் மற்றும் கவிஞர் முருகன் மந்திரம் ‘ரோஜா பூப்போல…..’ , ‘என்னம்மா நீங்க…. , ‘கண்ணால தாக்குற…..’ என்று துவங்கும் மூன்று பாடல்கள் எழுதி உள்ளார்.
பத்திரிக்கைப் புகைப்படக் கலைஞர் குணா ” என்ன செஞ்ச புள்ள ‘ என்று துவங்கும் ஒரு பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகம் ஆகிறார் .
நிகழ்ச்சியில் சுரேஷ் காமாட்சி பேசும்போது ” இன்று சின்னப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் .அவர்கள் மீடியாக்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
அவர்கள்தான் உங்கள் படத்தை மக்களிடம் கொண்டு போவார்கள்
பெரிய படங்களின் நிலையே சரி இல்லை. தெறி பட விவகாரத்தில் செங்கல்பட்டு பகுதியில் படத்தை ரிலீஸ் செய்யாமல் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் . அப்புறம் எப்படி சினிமா நன்றாக இருக்கும் ?
டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல பிரச்னை. தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்களின் விலை இன்னும் அநியாயமாக இருக்கிறது.
இருபது ரூபாய் பெறாத பாப்கார்ன் ஐம்பது ரூபாய் எழுபது ரூபாய் என்றால் எப்படி? எந்த திரையரங்கிலாவது குடிக்க தண்ணீர் வைக்கிறார்களா?
எல்லோரும் நியாயமாக நடந்து ஒத்துழைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் சாரல் போன்ற சிறு படங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் ” என்றார் .
பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசும்போது ” இஷான் தேவ் மிகச் சிறந்த திறமையாளர் . அவரும் நானும் இணைந்து பல படங்களில் சுமார் 25 பாடல்கள் உருவாக்கி உள்ளோம் .
அவை இனி ஒவ்வொன்றாக வரவுள்ளது . இந்தப் படத்தில் தம்பி குணா பாடலசிரியாக அறிமுகமாவது எனக்கு மிக மகிழ்வான விஷயம் . மிக நல்ல வரிகள் எழுதி இருக்கிறார் ” என்றார்
கதாநாயகி பிரியங்கா தன் பேச்சில் ” ஒரு கேள்வி என் மனதுக்குள் பெரிய குறையாக என்னை ரொம்ப நாளாக அரித்துக் கொண்டு இருக்கிறது . அதை இன்று உங்களிடம் சொல்கிறேன் .
தமிழ் சினிமாவில் தமிழ் தெரிந்த நடிகைகளுக்கு ஏன் சரியான வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்பதுதான் அந்தக் கேள்வி . எங்களுக்கும் திறமை இருக்கிறது .. அதனால்தான் சொல்கிறேன்
இதை நான் மனதுக்குள்ளேயே வைத்து இருந்தால் எந்தப் பலனும் இல்லை . வெளியே சொன்னால் தீர்வு கிடைக்கும் என்பதால் சொல்கிறேன் ” என்றார் .
படத்தின் நாயகன் உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்திப் பேசிய விவேக் ” பிரியங்கா கவலைப் படவேண்டாம் . மேடையில் விஜய் சேதுபதி இருக்கிறார் .
அவரே தனக்கு கதாநாயகியாக நடிக்க அழைக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார் .
விஜய் சேதுபதி பேசும்போது இதற்கு நேரடியாக பதில் சொலாவிட்டாலும் ” திறமையும் உழைப்பும், வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து செம்மையாக பயன்படுத்தும் லாவகமும் இருந்தால்
எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்கும்” என்றார் .
பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் குணா ” நான் இசையமைப்பாளர் இஷான் தேவ் அவர்களை சந்தித்தபோது ஒரு மெட்டை சொல்லி இதற்கு டம்மி வரிகள் எழுதித் தர முடியுமா என்று கேட்டார் . எழுதிக் கொடுத்தேன் .
அது அவருக்கு ரொம்ப பிடித்துப் போக, முழு பாடலையும் நானே எழுதி விட்டேன் . வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி ” என்றார் .
இயக்குனர் விக்ரமன் தன் பேச்சில் ” படத்தின் நாய்கன அசார் முன்பே எனது படத்தில் நடித்து இருக்கிறார் . அவர் மிகுந்த திறமைசாலி .
பூவே உனக்காக படத்துக்கு நான் விஜய்யை கதாநாயகனாகப் போட்டபோது ஒரு சீனியர் நடிகர் ‘ எவ்வளவு பெரிய கேரக்டர் அது ?. அதை இந்தப் பையன் தாங்குவானா? ‘ என்று கேட்டார் .
நான் நம்பிக்கையோடு போட்டேன் . விஜய் பிரம்மாதமாக நடித்தார் . அது போல அஸாருக்கு இந்த சாரல் படம் அமையும்.
பிரியங்கா கவலைப்படவேண்டாம் . தமிழ் தெரிந்த வைஜயந்தி மாலா , ஹேம மாலினி ஆகியோர் இந்தியில் போய் கலக்கினார்கள் . அதுபோல வாய்ப்புகள் உங்களுக்கும் வர வாழ்த்துகள் ” என்று கூற ,
பிரியங்கா முகத்தில் சந்தோஷச் சாரல்.