சகலகலா வல்லவன்-அப்பா டக்கர் @ விமர்சனம்

APPATAKKARU01
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் , கோகுல கிருஷ்ணன் , ஸ்ரீவத்சன் முரளி ஆகியோர் தயாரிக்க, ஜெயம் ரவி, திரிஷா, விவேக், அஞ்சலி, சூரி,  நான் கடவுள் ராஜேந்திரன்  ஆகியோர் நடிக்க…..  கதை திரைக்கதை வசனம் எழுதி சுராஜ் இயக்கி இருக்கும் படம் சகலகலாவல்லவன் — அப்பா டக்கர். எத்தனை கலைகளில் வல்லவன் இந்த அப்பா  டக்கர்? பார்க்கலாம் . அப்பா சக்திவேலின் (பிரபு) சொல்லை எப்போதும் எதற்கும் தட்டாத மகன் சக்தி (ஜெயம் ரவி). உள்ளூர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சக்தியின் தொழில் (!?) எதிரி சின்னசாமி (சூரி).  சின்னசாமியின் முறைப் பெண் அஞ்சலி (அஞ்சலி). அஞ்சலிக்கும் சக்திக்கும் காதல் வருகிறது . அந்த காதலுக்காக சின்னசாமியை நட்பாக்கிக் கொள்கிறான் சக்தி. இந்த நிலையில் நகரத்தில் இருந்து சக்தியின் மாமா கதிரேசன் (ராதாரவி) தனது மகள் திவ்யாவின் (திரிஷா) கல்யாணத்துக்கு உறவுக்காரர்களுக்கு பத்திரிகை வைக்க கிராமத்துக்கு வருகிறார். வந்த இடத்தில் திவ்யா மீது காதல் வயப்படுகிறான் சின்னசாமி . ”அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிடுச்சு” என்று சக்தி சொல்வதை ஏற்காத சின்னச்சாமி “என் காதலுக்கு உதவாவிட்டால் என் அத்தை மகளான அஞ்சலியுடன் உன்னை சேர விடமாட்டேன் “என்று மிரட்டுகிறான் .

சின்னச்சாமியும் சக்தியும் திவ்யாவின் வருங்காலக் கணவனை மிரட்ட நகரத்துக்குப் போக,  அவர் ஒரு என் கவுண்டர் போலீஸ் அதிகாரி (ஜான் விஜய் ) என்பது தெரிகிறது. அந்த முயற்சியில் இருவரும் தோற்று திரும்புகிறார்கள் .

ஆனால் திருமண தினத்தன்று திவ்யாவின் மாப்பிள்ளையான அந்த போலீஸ் அதிகாரி,  தாலி கட்டுவதற்கு சில நிமடங்கள் முன்பு போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்படுகிறார் . திவ்யாவின் திருமணம் நிற்கிறது . திவ்யாவின் அப்பா ஒடிந்து போகிறார் . தன் தங்கையின் குடும்பத்துக்கு வந்த இக்கட்டை தாங்க முடியாத சக்திவேல் ,”தன் மகன் சக்தி திவ்யாவுக்கு தாலி கட்டுவான் ” என்று கூறி விடுகிறார் .
DSC_1144
அப்பாவின் சொல்லை தட்ட முடியாத சக்தி , அஞ்சலியுடனான காதலை சொல்ல முடியாமல்  திவ்யாவுக்கு தாலி கட்டுகிறான் . அஞ்சலி மனம் நொறுங்கிப் போகிறாள் . சக்தி மீது கோபமும் கொள்கிறாள் . இன்னொரு பக்கம் மனைவியாக வந்த திவ்யாவுக்கும் சக்திக்கும் ஒத்துப் போகவில்லை. அவள் அவனிடம் விவாகரத்து கேட்கிறாள் . அப்பா சொன்ன சொல்லுக்காக  காதலியையும் பகைத்துக் கொண்டு மனைவியாலும் புறக்கணிக்கப்பட்ட சக்தி அடுத்து என்ன செய்கிறான் என்பதே …..இருங்க ! இருங்க ! வெயிட் ! வெயிட்!மேலே சொன்ன கதையை படித்து விட்டு ஏதோ ரொம்ப சீரியசான துக்ககரமான நெகிழ்ச்சியான படம் என்று நினைத்து விட வேண்டாம் .

சந்துல சிந்து பாடுவது , சைக்கிள் கேப்பிலும் லாரி ஓட்டுவது என்பார்களே .. அப்படி காமெடி வாசனையுடன் படத்தைத் தருகிறார் இயக்குனர் சுராஜ் .

அதிலும் முக்கியமாக சக்தி திவ்யா தனிக் குடித்தனத்தில் சண்டை வந்து இருவரும் ஒரு மாதம் ஊரில் உறவுகளோடு இருந்து விட்டு டைவர்ஸ் செய்து கொள்ள முடிவு செய்ய,  அடுத்து அரை மணி நேரம் இந்தப் படம் தொண்டையைப் பிடித்து , நெஞ்சை நக்கி கண்ணீரும் கம்பலையுமாகத்தான் போக முடியும் என்ற நிலையிலும்…

அதை அப்படியே திருப்பி , சூரி -அஞ்சலி ஒரு காட்சி சார்பாகவும் திரிஷா – ஜெயம் ரவி ஒரு அணியாகவும் தேர்தலில் போட்டியிடுவதாக (திரைக்)கதை சொல்வது  பேஷ்!!!  ப

ஆரம்பம் முதல் கடைசி வரை ஜெயம் ரவி, சூரி இவர்களோடு சேர்ந்து  நான் கடவுள் ராஜேந்திரன் காமெடியில் பின்னிப் பெடல் எடுக்கிறார் . இவரை வைத்தே படத்தை காமெடியாக முடிக்கும் விதமும் செம தில்லு .

அதே போல அந்த ‘முப்பது நாளுக்கு பிறகு டைவர்ஸ்’ காலகட்டத்தில் திரைக்கதையின் இன்னொரு திசையில் வரும் முறைமாமன் விவேக் (இரட்டை வேடம் ) நொடிக்கு நொடி காமெடி பட்டாசு கொளுத்துகிறார்.

DSC_8092

 கவர்ச்சியில் வீடு .. இல்லைஇல்லை… பங்களா கட்டுகிறார்கள் அஞ்சலியும் அப்புறம் திரிஷாவும் .  புஜ்ஜி மா பாடலில் நீலமும் வெள்ளையுமாக ஒரு அட்டகாசமான செட் போட்டு இருக்கிறார் கலை இயக்குனர் பாபு. அதே போல அதே பாடலில் வரும் அடர் பச்சை இளம் பச்சை வண்ணங்களில் மேற்கூரையில்லாத இன்னொரு செட்டும் அதன் மேலே தெரியும் நீல வானமும் மனத்தைக் கொள்ளை கொள்கிறது .

இந்த அரங்குகள் மட்டுமல்ல படம் முழுக்கவே வண்ணமயமாக ,அழகாக இருப்பதற்குக் காரணமாகிறது யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு , கூடவே  வாசுகி பாஸ்கரின் ஆடை வடிவமைப்பும்

உலகம் சுற்றும் வாலிபனில் இடம்பெற தாய்லாந்து மிதக்கும் மார்க்கெட்டை இந்தப் படத்தின் பாடலிலும் பார்க்க முடிவது சிறப்பு.

மாயாவி படத்தில் இடம்பெற்ற காத்தாடி போல ஏன்டி பாடலின் பாதிப்பில் வரும் ஒரு பாடல் உட்பட எஸ் எஸ் தமனின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.  . பின்னணி இசையிலும் குறை சொல்லும்படி ஒன்றும் இல்லை .

எடிட்டர் செல்வாவின் ‘கிராப்பிங் ஸ்லைஸ்’ எஃபக்டுகள் ஒரு நிலையில் எரிச்சல் ஆகத் துவங்கும்போதே நிறுத்திக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் .

அதே போல காமெடி விஸ்வரூபம் எடுத்து இருக்கும் இந்தப் படத்தில் கூட, அலகு குத்தி ரத்தம் வருவது, கிழியக் கிழிய அடித்து நொறுக்குவது ,பேண்ட்டில் உச்சா போவது, ஓரிரு இடங்களில் வரும் இரட்டை அர்த்தம்,  இதையெல்லாம் காமெடி என்று காட்ட வேண்டுமா ? மாறிடலாமே !

DSC_8180

மிக அழகாக தனது கேரக்டரில் நடித்து இருக்கிறார் ஜெயம் ரவி.. திரிஷா,  விவேக், அஞ்சலி, சூரி, நான் கடவுள் ராஜேந்திரன் என்று எல்லோரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்து இருக்கிறார்கள் .

திரிஷா , அஞ்சலி இருவரையும் சம அளவில் பயன்படுத்தி இருப்பதுவும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. படம் முடிவதே தெரியாமல் தொடர்ந்து உட்கார்ந்து இருக்கும் அளவுக்கு சுவாரஸ்யமாக போவது படத்தின் பெரும்பலம் .

மொத்தத்தில் சகலகலாவல்லவன் – அப்பா டக்கர் …. காமெடி டாப் டக்கர்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →