அபி &அபி என்டர்டைன்மெட் பிரைவேட் லிமிடெட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிக்க, இர்பான் மாலிக் இணை தயாரிப்பில் கலையரசன், வாணி போஜன், வேல ராம மூர்த்தி, சரத் லோகித்சவா, ஷாலு, மானசா , மற்றும் பலர் நடிப்பில் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி , zee 5 தளத்தில் வெளியாகி இருக்கும் ஒன்பது எபிசோடுகள் கொண்ட வலைத் தொடர் .
பணத்தைப் போலவே அரசியல் அதிகாரமும் எப்படி உறவுகளை நட்பை எதிரிகளாக துரோகிகளாக மாற்றும் என்பதை அட்டகாசமான இயக்கத்தில் சிறப்பான தயாரிப்புத் தரத்தில் சொல்லி இருக்கும் தொடர் .

விருது நகர் சேர்மன் பதவியை முப்பது வருடங்களாக தக்க வைத்துக் கொண்டு இருக்கும் குடும்பத்தின் தலைவர் சிவஞானம் ( சரத்). நடப்பு சேர்மனாக இருக்கும் அவரது மூத்த மகன் ராஜ மாணிக்கத்துக்கு ஒரு பிசினஸ் குடும்பத்தில் இருந்து அரசியல் ஆர்வமே இல்லாத ஒரு பெண்ணை (வாணி போஜன்) திருமணம் செய்து வைக்கின்றனர் . சில மாதங்களில் கணவன் விபத்தில் இறந்து விட , அந்தப் பெண்ணுக்கு மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அனுதாபம் ஏற்படுகிறது . அவளுக்கும் அரசியல் ஆசை வருகிறது.
ஆனால் சிவஞானத்துக்கோ வந்த உறவு என்பதை விட ரத்த உறவான தனது மகளோ மகனோ அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் ஆசை. தான் புறக்கணிக்கப்படுவது அறிந்த மருமகள், சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம உள்ள தனது தோழி நாச்சியை ( ஷாலு) அழைத்துக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறாள் .

நாச்சிக்கு உதவியாக அவளது சகோதரர்கள் ( கலையரசன், ஆன்னி போப், லகுபரன் )மூவரும் இருக்கிறார்கள். அவர்களது தாய் வேலாயி ( விஜி சந்திரசேகர்). மூத்த சகோதரன் மனைவி ( மானசா) கணவனுக்கும் சேர்மன் வீட்டு மருமகளுக்கும் உறவு என்று எண்ணி கோபத்தில் கணவரைப் பிரிந்து வாழ்கிறாள்
நாச்சியின் திட்டங்களால் மாமனாரை மீறி சேர்மன் ஆகும் மருமகள் புகழ் பெறுகிறாள் . ஒரு நிலையில் அவள் கொல்லப்பட, அதற்கு பழிவாங்க நாச்சி சகோதரர்கள் களம் இறங்க , அரசியல் எப்படி ஆட்களை மாற்றும் என்பதை அட்டகாசமான படமாக்கலில் சொல்லி இருக்கிறார் பிரபாகரன் .

சிவஞானம் என்ற பெயர், அவரது அப்பாவாக லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் போட்டோ, வீல் சேரில் இயங்கும் சிவஞானம், ராஜா மாணிக்கம் இறந்ததும் பதவிக்கு வரும் மனைவி, அவளுக்குத் தோழியாக உடன்பிறவா சகோதரியாக வந்து, பதவியில் இருக்கும் பவர்ஃபுல் பெண் மணியை ஆட்டிப் படைக்கும் தோழி, எதிர்ப்பு அரசியல் செய்பவரின் ( வேல ராம மூர்த்தி ) வீட்டில் வில்லன் நடிகர் எஸ் ஏ அசோகன் புகைப்படம் இவை எல்லாம் ரசிகர்களுக்கு நிஜ அரசியல் நிகழ்வுகளை அவரவர் பார்வையில் நினைவுக்குக் கொண்டு வந்து சுவாரஸ்யப்படுத்தும் .
விஜி சந்திர சேகர், வாணி போஜன், ஷாலு என்று பெண்கள் ராஜ்ஜியம் செய்யும் படைப்பு. இவர்கள் தவிர கலையரசனின் மனைவியாக வரும் மானசா , சிவஞானத்தின் மகளாக வருபவர் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
கலையரசன் மிக சிறப்பாக நடித்துள்ளார் . சரத்தும் அப்படியே . விசில் மூலமே கைதட்டல் வாங்குகிறார் கார்த்திக் .

வெற்றி வேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு கானல் நீர் காட்டும் கந்தகக் காடுகளை, முள் மறக் கூட்டங்களை , மலைப்பாறைகளை சூடு குறையாமல் படம் பிடித்துக் காட்டி இருக்கிறது . மிகச் சிறந்த பங்களிப்பு.
அட்டகாசமான இசையால் படைப்பை தூக்கி நிறுத்துகிறார் தரன் குமார் . தீம் மியூசிக் அபாரம. சபாஷ் .
படத் தொகுப்பாளரும் ராட்சச உழைப்பைக் கொடுத்துள்ளார் .
சிறப்பான தரமான தயாரிப்பாகக் கொண்டு வந்துள்ளனர் ZEE 5 குழுமத்தினர்
கதையின் திரைக்கதையின் வெவ்வேறு போக்குகளையும் சரியாக இழை பிரித்து விவரமாக நுண்மையாக அழுத்தமாக காட்சிகள் வசனங்கள் அமைத்து சிறப்பாக இயக்கி நல்ல படமாக்கல் கொடுத்துள்ளார் எஸ் ஆர் பிரபாகரன் . அம்மாவின் பிணத்தைத் தூக்கும் காட்சி உட்பட பல காட்சிகள் அபாரம்.

சாதிப்பற்று எப்படி துரோகத்துக்கு துணை போகிறது என்று சொன்ன விதம் , மருமகளை என் சாமி என்று கூப்பிடும் பாசமுள்ள மாமியார் என்று பிரபாகரனைப் பாரட்ட பல இடங்கள் உண்டு .
அரசியல் இனி அயோக்கியர்களின் கூடாரம்தான் என்ற தொனியில் படைப்பு முடிவது மட்டும் பெரும் உறுத்தல்
கடைசி அத்தியாத்தில் பூடகமாக சில விசயங்களை சொல்லி இருக்கிறார் பிரபாகரன் அரசியல் அறிந்தோர்க்கும் அவை சுவையான காட்சிகள். மற்றோர் வெளிப்படையாக சொல்லி இருக்கலாமே என்று எதிர்பார்க்கிறார்கள் . அப்படி சொன்னால் பல நிஜ அரசியல் தலைகளை தாக்கியதாகி விடும் . எனவே இப்படி சொன்னதுதான் சரி
செங்களம் .. சூடும் சுவையுமான படைப்பு