ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க , ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ ஆகியப் படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க, ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க
‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘சேது பூமி’ .
கே எஸ் ஜி வெங்கடேஷ், சிங்கம்புலி , ராஜலிங்கம், ஜுனியர் பாலையா, சேரன்ராஜ் , தவசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் அதிமுக்கியக் கதாபாத்திரமான ஒரு தாய் மாமன் கதாபாத்திரத்தில், இயக்குனர் கேந்திரன் முனிய சாமியே நடித்து உள்ளார்.
பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை . அதை நம் கையில் எடுத்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதையாம்.
படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டனர் .
”ஏன்டி சண்டாளி ….” என்ற பாடல் கேட்ட உடன் மனதுக்குள் மலர் சிம்மாசனம் போட்டு அமர்கிறது . படமாக்கlலும் அருமை . நீயாச்சு நானாச்சு என்ற பாடலில் தமன் , சம்ஸ்கிருதி இருவரும் உற்சாகமாக கலர்ஃபுல்லாக ஆடிப் பாடுகிறார்கள் .
”என் தாய் போல…” என்ற பாடல் தாயை இழந்த ஒரு பெண்ணின் வலியை சொல்கிறது . சிங்கப்பூர் சென்ட் பாடல் கலாட்டா விருந்து .
வீரத்தின் விளைநிலமாக இருக்கும் அதே நேரம், உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் மனிதாபிமான ஈரத்தின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்கும் ராமநாதபுரம் பகுதி மக்களின் வாழ்க்கையை…. பண்புகளை…. மனித குல மதிப்பீடுகளை…. சொல்லும் படம் இது என்பதை விளக்கும் அளவுக்கு,
அர்த்தமுள்ளதாகவும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும் படத்தின் முன்னோட்டம் இருந்தது .
“அக்பர் ஓர் இந்து தாயிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்தது போல, நம்ம பசும்பொன் தேவர் அய்யா ஒரு முஸ்லிம் தாயிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர் . அதுதான் இந்த மண்ணின் பெருமை “என்ற வசனத்தோடு துவங்கும் முன்னோட்டம் கவனம் கவர்கிறது
பாடலாசிரியர் நந்தலாலா , இசை இரட்டையர்கள் பாரதி– மோனிஷ் , நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக கலைஞர்கள் அனைவரும் படத்தின் தயாரிப்பாளரான ஹபீப்பை,
ஒரு தயாரிப்பாளராகப் பார்க்காமல் சொந்த சகோதரராகவே பாவித்துப் பேசியதும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையும் நிஜமாகவே ஆச்சர்யமான விஷயம் .
உதாரணம் நடிகர் கே எஸ் ஜி வெங்கடேஷ் . ” இந்தப் படத்தில் நான் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்து உள்ளேன் . இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் ரொம்ப பெருமைப் படுகிறேன் .
ஹபீப் எங்களை ஓர் உடன் பிறந்த சகோதரராகவே நடத்தினார் . அவர் போல ஒரு நல்ல மனிதரை பார்ப்பது அரிது ” என்று மனப்பூர்வமாக சொன்னார்
“படத்தின் கலை இயக்கமே லொகேஷன்கள்தான் என்னும் அளவுக்கு எங்கள் கலை இயக்குனர் ஜெயசீலன் அற்புதமான லொகேஷன்களைப் பிடித்துத் தந்தார் . எப்போது எப்படி கேட்டலும் தயங்காமல் வந்து நின்று கேட்டபடி தமன் நடித்துக் கொடுத்தார் ” என்றார் ஒளிப்பதிவாளர் எஸ் முத்துராமலிங்கம் .
ஹபீப் பற்றி பேசும்போது கண்கள் பனிக்க நெகிழ்ந்தார் கலை இயக்குனர் ஜெயசீலன் .
ஒரு பாடலை உற்சாகமாக பாடிக் காட்டினார்கள் இசை இரட்டையர்கள் பாரதி –மோனிஷ் இருவரும் .
தமன் பேசும்போது ” என் தாய் மொழி தமிழாக இருந்தாலும் ரொம்ப காலம் ஐ டி நிறுவனததில் வேலை செய்த காரணத்தால் ஆங்கிலமே என் மொழி என்று ஆகிவிட்டது . அப்படிப்பட்ட என்னை கொண்டு போய் இப்படி ஒரு கிராமத்துக் கதையில் நடிக்க வைக்க இந்த டைரக்டருக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் .
ஆனால் நானே என்னை வியக்கும் அளவுக்கு என்னை சிறப்பாக மாற்றி நடிக்க வைத்தார் . இந்தப் படம் எனக்கு மிக திருப்தியைக் கொடுத்தது. கண்டிப்பாக இது வெற்றிப் படம் ” என்றார் .
தயாரிப்பாளர் ஹபீப் தனது சிறுவயது நட்புக்காகவே படம் தயாரிக்க வந்துள்ளார் என்பது குரிப்பிடத் தக்க விஷயம்.
இந்தப் படத்தில் எப்படி உறவின் மேன்மையான உணர்வுகள் முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்பட்டு உள்ளதோ , அதைப் போல நிஜத்திலும் நட்புக்காகவே இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளார் ஹபீப் .
நிகழ்ச்சியில் அது பற்றிப் பேசிய தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப் ,
“இப்படத்தின் இயக்குனர் கேந்திரன் முனியசாமி, எனது பள்ளி நண்பனின் தம்பி. இவர்களது தந்தை ஆறுமுகத்தேவர் எனக்கு மாமன் போல .
கேந்திரன் முனிய சாமியை என்னிடம் கொண் டு வந்த என் நண்பன் ” என் தம்பியை உன்னோடு சேர்த்துக் கொண்டு முன்னற்றிக் கொடு ‘ என்று கேட்டான் . நானும் கேந்திரன் முனிய சாமியை ஒரு வேலைக்காகததான் அழைத்தேன் .
ஆனால் அவர் ‘சினிமா தான் எனது மூச்சு, சினிமாவில் நான் வெற்றி பெற்றே தீருவேன்’ என்று என்னிடம் கூறினார்.
சரி ‘தம்பிக்கு ஏதாவது ஒரு வழியில் நாம் உதவ வேண்டும்; இப்படி சினிமாவுக்காக கஷ்ட்டப்படும் தம்பிக்கு உதவி செய்ய வேண்டும்; தம்பியின் ஆசையை நிறைவேற்றுவோம்’ என்ற நோக்கத்தில்தான் இந்த படத்தை தயாரித்தேன்.
நான் ஒரு நாளும் படப்பிடிப்பு பக்கமே போகவில்லை . கடைசியாக படம்தான் பார்த்தேன் . ரொம்ப பிடித்து இருந்தது .
இந்த சேது பூமி படம் பற்றி ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டும் என்றால்…மனித நேயத்தின் வெளிப்பாடு. கண்டிப்பாக இது ஒரு வெற்றி படம் தான்.
காதல்,ஆக்ஷன், காமெடி என்று மக்களுக்கு பிடித்த வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு நேர்மையான படத்தை நேர்மையான முறையில் தயாரித்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறேன்
தொடர்ந்து படங்கள் தயாரிக்கவும், புது புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முடிவு செய்துள்ளேன். நான் மட்டும் இன்றி, எனது நண்பர்கள் சிலரையும் என்னுடன் இணைந்து படம் தயாரிக்க சொல்லுவேன்” என்கிறார் ஹபீப் , உற்சாகமாக .
படம் குறித்து கூறிய இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி,
”எனது முதல் படம் அய்யன் நல்ல படம் என்று பெயர் வாங்கியது . ஆனால் ஓடவில்லை .
‘நல்ல படம் எடுத்தா எல்லாம் இப்படிதான் . கிளாமர் வேணும் . பெண்களை கவர்ச்சியா காட்டனும் அப்பதான் படம் ஓடும்’னு ஏகப்பட்ட அறிவுரைகள் . பசியில் அப்போ நான் காதடைச்சு நின்னதால அதெல்லாம் என் காதுல விழவே இல்ல
அப்புறம் எனக்கு இந்தப் படம் எப்படி கிடைச்சது என்பதை ஹபீப் அண்ணன் மிக அழகாகச் சொன்னார் . உண்மையா சொல்றேன் . என் திறமைக்கு இந்தப் படம் கிடைக்கல.
என் அப்பா ஆறுமுகத் தேவர் மேல ஹபீப் அண்ணனுக்கு இருந்த மரியாதையான பாசம், என் உடன் பிறந்த அண்ணன் மேல ஹபீப் அண்ணனுக்கு இருந்த நட்பு .. இதனால எனக்கு கிடைச்ச படம் இது .
ஹபீப் அண்ணன் ஒரு நாளும் ஷூட்டிங் வந்தது இல்ல. சொல்லப் போனா படம் எடுத்தபோது ஹபீப் அண்ணன் இந்தியாவிலேயே இல்ல . படம் முடிச்சு கூப்பிட்டேன் .
வந்து படத்தை பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார் . அவர் மட்டுமல்ல அண்ணி , அம்மா எல்லாரும் படத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டாங்க .
நான் கொடுத்த பணத்தின் செலவுக் கணக்கு நோட்டை இதுவரை அண்ணன் திறந்து கூட பாக்கல.
போன வாரம் என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு . மரணப் படுக்கையில் இருக்கும்போது ‘நீ நல்லா வருவதற்குள்ள நான் உன்னை விட்டுட்டுப் போறனே ‘ன்னு வருத்தப்பட்டார் .
நான் அவர்கிட்ட ” என்னை நம்பி ஹபீப் அண்ணன் ரெண்டு கோடி ரூபாய் போட்டு இருக்கார். இந்த ரெண்டு கொடியும் உங்க மேல அவருக்கு உள்ள மரியாதையால கிடைத்தது . ஆக எனக்கு இந்த ரெண்டு கோடியை கொடுத்ததே நீங்கதான்’ னு சொன்னேன் . எங்கப்பா எனக்கு பலமா இருப்பார் .
படத்தைப் பத்தி சொல்லணும்னா , சேது மன்னர்கள் வாழ்ந்த பூமியான ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளின் மக்களைப் பற்றி சொல்வதால், இப்படத்திற்கு சேது பூமி என்று தலைப்பு வைத்தேன்.
பொதுவாக ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்களிடம் வறுமையும், கோபமும் தான் இருக்கும், அந்த கோபத்திற்கான நியாயம், அவர்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றை இப்படத்தின் மூலம் விவரிக்கிறோம்.
மனிதன் தனது உறவுகளையும் உணர்வுகளையும் கொஞ்சம் வேகமாகவே மறந்து வருவது இந்த சமூகத்திற்கு மிகப்பெரும் கேடு என்று கூறும் படமே சேது ‘சேது பூமி.
இந்த படத்தில் ஹீரோ வழக்கமான சினிமா ஹீரோ மாதிரி ஆடக் கூடாது. படிச்ச பையன் கிராமத்தில் உள்ளவன் எந்த அளவுக்கு ஆடுவான் அந்த அளவுக்கு தான் தமன் நடனம் ஆடுவார். இதை என்னுடைய கேமராமேன் அழகாக கேமராவில் ஒளிப்பதிவு செய்தார்.
படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எப்படி எடுப்பது என்று எனக்கும் சண்டை இயக்குனர் நாக்கவுட் நந்தாவுக்கும் பெரிய விவாதம் நடந்தது. .
கடைசியில் நந்தா வைத்த முதல் ஷாட்டே பிரம்மாதமாக இருக்க அவர் விருப்பத்துக்கே விட்டு எடுத்தேன் அந்த சண்டைக்காட்சியில் ஹீரோ தமன் , வில்லன் ராஜலிங்கம் இருவரும் ஆக்ரோஷமாக நிஜ மோதல் போல மோதி நடித்தார்கள்.
படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது . அதையும் மீறி இந்தப் படம் ஹபீப் அண்ணனோட குணத்துக்காகவே நல்லா ஓடணும். ஓடும் . ” என்கிறார் .
வாழ்த்துகள் சேது பூமி படத்துக்கும் சேது பூமியின் நல்ல மனிதர்களுக்கும் !