கலகலப்பான திரைக்கதை, கண்ணில் நீர் வரச் சிரிக்க காமெடி, சீரான சீரியஸ் செண்டிமெண்ட், கிச்சு கிச்சு மூட்டும் கிளாமர் ..
இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் அண்மையில் சேர்ந்த அசத்தல் அராஜகம்தான் பேய்.
மேற்சொன்ன அம்சங்களோடு பேய்ப் படமாகவும் வந்த ‘அரண்மனை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, மிரட்ட வருகிறது அரண்மனை 2’. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி உலகெங்கும் வெளியிடுகிறார் .
அதன் முன்னோட்டமாக படத்தின் இயக்குநர் சுந்தர்.சியும் நடித்துள்ள நட்சத்திரங்களும் ஒன்றிணைந்து பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்
‘அரண்மனை’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது? என்று சுந்தர்.சியிடம் கேட்டோம்.
“உண்மையிலேயே எந்த பிளானும் இல்லாமல்தான் இருந்தேன். ‘அரண்மனை’யில் பேய் படத்தின் மூடை ஆடியன்ஸ் கடைசி வரை ஃபீல் பண்ணவேண்டும் என்பதற்காக,
க்ளைமாக்ஸில் ஜன்னலில் பேய் வந்து நிற்பதுபோல் ஒரு சீன் வைத்திருப்பேன்.
அந்த சீனை பார்த்துட்டு ‘செகண்ட் பார்ட் எப்ப எடுக்கப்போறீங்க?’ன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.
வீட்டில் என் குழந்தைகளும் ‘எப்ப டாடி செகண்ட் பார்ட்?’ன்னு கேட்டாங்க.
அப்போதான் செகண்ட் பார்ட் ஸ்கிரிப்ட்டுக்கும் பொறி தட்டியது. அதை டெவலப் பண்ணினேன். ‘அரண்மனை 2’ ஸ்டார்ட் ஆகிடுச்சு.”
மறுபடியும் ஹன்சிகாங்கறதிலும் முடிவா இருந்தீங்களா?
“கதை ரெடியானதும் முதல் போன் ஹன்சிகாவுக்குதான் அடிச்சேன். விஷயத்தை கேட்டுட்டு ‘இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்’னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திகிட்டு கால்ஷீட் கொடுத்துட்டாங்க..
இப்போ உள்ள நிலைமையைப் பார்த்தா… சொல்ல முடியாது, ‘அரண்மனை 3’கூட வர வாய்ப்பிருக்கிறது”
சித்தார்த், த்ரிஷா கேரக்டர் எப்படி அமைஞ்சிருக்கு?
“சித்தார்த் இந்த படத்துக்குள் வந்ததே எதேச்சையாகதான் நடந்தது. ஒருநாள் பேசிட்டு இருந்தபோது செகண்ட் பார்ட் ஐடியாவை சொன்னேன்.
உடனே ‘நான் பண்றேன் சார்’னு ரெடியாகிட்டார். முன்னணி ஹீரோக்கள் நடிக்கத் தயங்கற
அளவுக்கான ஒரு கேரக்டர்தான்…
ஆனா ரொம்ப ஈடுபாட்டுடன் நடிச்சுக் கொடுத்திருக்கார். அதே மாதிரி த்ரிஷா. ரெண்டு பேருக்குமே இது முதல் பேய்ப் படம்.
ஒரு காட்சியில் த்ரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சிருக்காங்க. ”
காமெடி ?
“முதல்முறையா என் படத்தில் சூரி நடிச்சிருக்கார். டுபாக்கூர் சித்த மருத்துவர் கேரக்டர் அவருக்கு. சரளாம்மாவை ஒரு காமெடி பேய்னே சொல்லலாம். இவரோட அண்ணனா மனோபாலா நடிச்சிருக்கார்.’’
படத்தின் ஹைலட் ?
“ஒரு அம்மன் பாட்டு. இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதிக்கு மத்த பாட்டு குத்து பாட்டெல்லாம் வரும். ஆனா படத்தில் ஒரு அம்மன் பாட்டு வேணும்னு சொல்லும்போது அவரால் அதை பண்ண முடியுமான்னு சந்தேகம் வந்தது.
ஆனா பிரமாதமா ஒரு அம்மன் பாட்டு போட்டுக் கொடுத்தார்.
அந்தப் பாடலை ஷூட் பண்றது பெரிய சவாலாகவே இருந்தது. 150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 டான்ஸர்கள், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும். ” என்கிறார்
படம் பற்றி சித்தார்த் கூறும்போது,
“இந்தப்படத்தில் மூன்று வகையான பேய்கள் இருக்கு.
சூரி, கோவை சரளா, மனோபாலாபோன்ற காமெடி பேய்கள் ஒரு பக்கம், ஹன்சிகா, த்ரிஷா, பூனம்பாஜ்வா என்கிற கவர்ச்சி பேய்கள் இன்னொரு பக்கம்….
இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்னு டெக்னிஷன் பேய்கள் மற்றொரு பக்கம்…
இதுல நான் ஒரு கன்னிப் பேய். அதாவது பேய்ப் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை.
‘ஆயுத எழுத்து’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 12 வருடம் கழிச்சு நானும் த்ரிஷாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அந்தப் படத்தில் தாய்லாந்து கடற்கரையில் இருவரும் ஒரு பாட்டு சீனில் நடித்திருப்போம்.
சொல்லி வச்சது மாதிரி இந்தப் படத்திலும் அதே கடற்கரையில் இருவருக்கும் ஒரு பாட்டு இருக்கு.” என்கிறார்.
ஹன்சிகா என்ன சொல்கிறார் ?
“சுந்தர்.சி சார் எப்ப படம் எடுத்தாலும் சரி கதை கேட்காமல் கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு அவர் டைரக்ஷன்
மீது எனக்கு குருட்டுத்தனமான நம்பிக்கை இருக்கு.
அந்த நம்பிகையில்தான் ‘அரண்மனை 2’ எடுக்கப் போறேன்னு அவர் சொன்னபோது இது என்னோட படம். நான் இல்லாமல் ஷூட்டிங் போகக்கூடாது’ன்னு உரிமையாக சொன்னேன். சுந்தர் சாருடன் இது எனக்கு 4-வது படம்.
ஹல்லோ திரிஷா …
“சுந்தர்.சி படம்னாலே ஆடியன்ஸுக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். எனக்கும் இந்தப் படம் ஸ்பெஷல்தான். இந்தப் படத்தில் நடிச்சது எனக்கு புது அனுபவம்.
இதில் சில காட்சிகளில் செக்ஸியா வருவேன். செக்ஸி என்பதைவிட பியூட்டிஃபுல்லா காட்டிருக்காங்க என்றுதான் சொல்லணும்”
வாங்க சூரி .. நீங்க பேசுங்க
“காமெடியன்கள் எல்லோருக்குமே சுந்தர்.சி அண்ணன் படத்தில் நடிக்கணும்கிற ஆசை இருக்கு. எனக்குள்
இருந்த அந்த ஆசை ‘அரண்மனை 2’ மூலமாக நிறைவேறியிருக்கு.
நிஜத்தில் என்னோட அக்காவாக நினைத்து மதிக்கும் கோவை சரளா என்னோட காதலியா நடிச்சிருக்காங்க.
படத்தில் 25 வருஷம் கழித்து அவங்களை சந்திக்கும் போது ‘வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் உங்களை விட்டு போகலைன்னு என்னை பார்த்து அவங்க விடும் லுக்கில் ஆடியன்ஸிடமிருந்து அப்ளாஸ் அள்ளும்.”
குஷ்பு என்ன சொல்கிறார்? அவர்தானே படத்தின் தயாரிப்பாளர் .
”அரண்மனை’யைவிட ‘அரண்மனை 2’ பிரமாண்டமா இருக்கணும்கிற முடிவோடதான் இந்த படத்தை தயாரித்திருக்கோம்.
சுந்தர்.சி சார் ஒரு புரொடியூஷர் நலம் விரும்பும் டைரக்டராக இருபது வருஷத்துக்கும் மேலாக இருப்பது, அவரோட மனைவியா நான் பெருமைப்படும் விஷயம்.
இந்தப் படத்தில் வரும் அம்மன் பாட்டை கேட்டுவிட்டு எனக்கு சிலிர்த்துவிட்டது. அந்த சிலிர்ப்பை அத்தனை ரசிகர்களும் அனுபவிக்கப் போவது நிச்சயம்” என்கிறார்.
மெரட்டுங்க… மெரட்டுங்க …!